தையிட்டி விகாரை விவகாரம் – தென்னிலங்கையை உசுப்பிவிடுகிறார் விமல் வீரவங்ச !
பௌத்தத்துக்கு எதிரான தம்புத்தேகம வெள்ளையரே, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
விமல் வீரவன்ச மேலும் குறிப்பிடுகையில், “தேர்தல் நெருங்கும் போது விகாரைகளுக்கு சென்ற ஜனாதிபதி, தன்னை ஒரு பௌத்த ஆதரவாளராக காட்டிக்கொண்டார். ஆனால், மறுபுறம் தையிட்டி விகாரையை சுற்றியிருந்த இராணுவத்தினரை உடனடியாக அங்கிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தார். பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்படாமையால் வெள்ளையர்களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்தனர். தம்புத்தேகமவில் இருந்து வந்திருக்கும் வெள்ளையருக்கு எதிராகவும் அதுவே நடக்கும். நீங்கள் செய்த தவறுக்கு புத்த சாசனத்தின் முன் விழுந்து மன்னிப்பு கோருங்கள். நாட்டு மக்களிடமும் மன்னிப்பு கோருங்கள். பௌத்தர்களின் புராண கால விகாரையான தையிட்டி விகாரை மீது கை வைக்க நினைக்க வேண்டாம். தையிட்டி திஸ்ஸ விகாரை மீது கை வைப்பதற்கு ஜனாதிபதி உட்பட யாருக்கும் உரிமை இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.