மொனராகல, கஹம்பான பகுதியில் 8 வயது சிறுவன் ஒருவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்ததாக கூறப்படும் சந்தேக நபரொருவர் வியாழக்கிழமை மாலை பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.
மொனராகல பொலிஸாரும் இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தினர். கஹம்பான காட்டுப் பகுதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்பட்டது.
சிறுவனை கொலை செய்து புதைத்த இடத்தை காண்பிப்பதாக பொலிஸாரை அழைத்துச் சென்ற சந்தேக நபர் அங்கு மறைத்து வைத்திருந்த கைக் குண்டொன்றை எடுத்து பொலிஸார் மீது எறிய முற்பட்ட போதே அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதில் சந்தேகநபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
முன்னதாக இவர் சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்த சம்பவம் புதன்கிழமை இடம்பெற்றுள்ளதுடன், அன்றைய தினமே சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுமுள்ளார். அத்துடன் சந்தேகநபர் இராணுவத்தைச் சேர்ந்தவரென்றும் மொனராகல பொலிஸார் தெரிவித்தனர்.
Thirumalaivasan
சிறுவனை கொலை செய்து புதைத்த இடத்தை காண்பிப்பதாக பொலிஸாரை அழைத்துச் சென்ற சந்தேக நபர் அங்கு மறைத்து வைத்திருந்த கைக் குண்டொன்றை எடுத்து பொலிஸார் மீது எறிய முற்பட்ட போதே அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதில் சந்தேகநபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.// இது கிழக்கில் இடம்பெற்ற சிறுமிகளின் படுகொலையுடன் சம்பந்தப்பட்டவர்களைக் கொலைசெய்த மாதிரி என்கவுண்டர் முடிவுகளே. எதிர்காலத்தில் கைது> வழக்கு> அரசியல் தலையீடு> விடுதலை என்று போகாமல் சுடச்சுட நீதி வழங்கும் விவகாரம் போல் உள்ளது. அது சரி> இன்று நாடு கிடக்கும் கிடையில் ஜனநாயக வழிமுறைகளுக்கு எங்கே நேரம் இருக்கிறது? முழு இலங்கையும் இன்று திரும்பமுடியாத பாதையில் பயணிக்கின்றது. இனி படிப்படியாக நாடு இராணுவ மயப்படுத்தப்படும் நிலையிலிருந்து மாற்றமுடியாது. அதற்காக மக்களைத் தயார்ப்படுத்தும் நிலைமையே இது. தந்திக்கம்பக் கொலைகளும் அங்கங்கே சிங்களக் கிராமங்களில் மீண்டும் (முன்னர் ஜே.வீ.பீ. புரட்சிக் காலத்தில் இருந்ததைப் போன்று) இடம்பெறுகின்றதாமே?
மாயா
குற்றவாளிகள் குறைவதற்கு இதைத் தவிர வேறு வழியில்லை என்றால் இது நடக்கட்டும். புலிகளின் பகுதிகளில் நடந்த போது வாய் திறக்காதவர்கள் , இங்கு மட்டும் ஏன் வாய் திறக்கிறார்கள்.
ஒன்று தர்மம். அல்லது அதர்மம். இரண்டும் ஒரே இடத்தில் இருக்க முடியாது. எல்லாம் முடிவுக்கு வரும். தமிழனுக்கு அளக்கும் அதே அளவு கோல் சிங்களவனுக்கும் பயன்படும் போது நடக்கட்டும் என்றே நினைக்கத் தோன்றுகிறது.
நாட்டை திருத்த இதைத் தவிர வேறு வழியில்லை. குற்றவாளிகளை திருத்தலாம். பிஞ்சுகளை குதறும் சபலங்களை திருத்த முடியாது. செத்து தொலையட்டும்.
பார்த்திபன்
// சிறுவனை கொலை செய்து புதைத்த இடத்தை காண்பிப்பதாக பொலிஸாரை அழைத்துச் சென்ற சந்தேக நபர் அங்கு மறைத்து வைத்திருந்த கைக் குண்டொன்றை எடுத்து பொலிஸார் மீது எறிய முற்பட்ட போதே அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதில் சந்தேகநபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.//
இப்படியான சம்பவங்களின் பின் பொலிசாரின் வாக்குமூலங்கள் ஒரே மாதிரி இருப்பதை பார்க்கக் கூடியதாகவிருக்கின்றது. எனவே நடப்பது என்கவுண்டர் தான் எனப் புரிகின்றது. போட்டுத் தள்ளப்படுபவர்கள் உண்மையான குற்றவாளிகளாகவிருந்தால் பறவாயில்லை. ஆனால் அரசியல்ப் பழிவாங்கலாகவோ அல்லது யாரையாவது காப்பாற்ற எடுக்கும் முயற்சியாகவோ இல்லாமல் இருக்கவேண்டுமென்பதே என்போன்றோரின் அவா…….