தமிழகத்திலுள்ள அகதிகளை மீண்டும் இலங்கை அழைத்துவர ஆளுநர் முனைப்பு!
இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள மூன்று இலட்சத்திற்கும் அதிகமான ஈழ அகதிகளை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் விசேட கலந்துரையாடல் மார்ச் 22 ஆம் திகதி நடைபெற்றுள்ளது. அப்போது வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவிக்கையில், இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகள் இலங்கைக்கு திரும்ப வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு என்றார். நாடு திரும்புவர்களுக்கான உதவிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்படும் என்றும் கூறினார். மேலும் இந்த விடயம் தொடர்பில் இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை உருவாக்குவதற்கும் உரிய தரப்புக்களிடம் கோரிக்கை முன்வைக்கப்படும் என தெரிவித்தார்.
அத்தோடு ஏற்கனவே இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பியவர்களிடம் அவர்களது குறைகளை கேட்டு நிவர்த்தி செய்யப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார். ஒபர் சிலோன் நிறுவனத்தின் திட்டத் தலைவர் செல்வி சின்னதம்பி சூரியகுமாரி, தமது நிறுவனத்தால் இந்த விடயம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும், எதிர்பார்ப்புத் தொடர்பிலும் விவரித்தார். இலங்கையிலிருந்து 4 கட்டங்களாக இந்தியாவுக்கு 334,797 பேர் அகதிகளாகச் சென்றுள்ளனர் என்றும் தற்போது தமிழகத்தில் 103 முகாம்களில் 58,104 பேர் இருக்கின்றனர் என்ற தரவுகளையும் ஒபர் சிலோன் நிறுவனத்தினர் தெரியப்படுத்தினர். தற்போது தமிழகத்தில் முகாம்களிலுள்ள 58,104 பேரில், 50,620 பேர் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிட்டனர். 2009ஆம் ஆண்டிலிருந்து இதுவரை வடக்கு மாகாணத்துக்கு 14,531பேர் வருகை தந்துள்ளனர் என்றும் ஆளுனர் சுட்டிக்காட்டினர்.
எப்படியாயினும் இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கின்ற இலங்கை அகதிகள் நாடு திரும்பும் விடயத்தை இரு நாட்டு தலைவர்களும், அதிகாரிகளும் மற்றும் தொண்டு நிறுவனங்களும் மட்டுமே முடிவு செய்ய முடியாது. சம்பந்தப்பட்ட இலங்கை அகதிகளுடைய கருத்துக்களும் மற்றும் அவர்களுடைய விருப்பங்களுக்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும். இலங்கை அகதிகள் குடியுரிமை இல்லாது பல ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளிலும் வாழ்கிறார்கள். அப்படியானால் அவர்களும் நாடு திரும்ப கூடிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும். தமிழகத்தில் இரண்டு தலைமுறையாக அகதியாக வாழ்கிற தமிழர்களில் பெரும்பாலானோர் தாம் இலங்கை திரும்ப விருப்பம் இல்லை என்று கூறி விட்டார்கள். பெரும்பாலானோர் திபெத் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கியது போன்று தமக்கும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவில் உத்தியோக பூர்வமாக முகாம்களில் 58 104 பேர் தங்கியுள்ளனர். அவர்களின் அகதி முகாம் வாழ்க்கையை முடிவுக் கொண்டு வந்து, அவர்கள் நாடு திரும்பினாலும் அவர்கள் மீண்டும் இலங்கையில் அகதி முகாம்களில் தான் தங்க வைக்க வேண்டும். இலங்கை திரும்பும் அகதிகளுக்கு வாழ சொந்தமாக அரசாங்கம் வீடு மற்றும் காணி கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.