ஆய்வுகளை செய்யாமல் நிதியை ஒதுக்காதீர்கள் – எம்.பி கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
வடக்கு மற்றும் கிழக்கில் ஆய்வுகளை செய்த பின்னரே அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீட்டை செய்ய வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் மேலும் உரையாற்றிய பா.உ கஜேந்திரகுமார் பொன்னம்பலம், யாழ். மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 500 மில்லியன் ரூபா விசேட நிதி ஒதுக்கீட்டை எவ்வாறு செலவு செய்ய வேண்டும் என்று கடந்த மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் அமைச்சர் சந்திரசேகரன் யோசனை கோரியிருந்தார். ஆனால் இதுவல்ல முறை, போரால் பாதிக்கப்பட்டு 35 வருடங்களுக்கு பின்னால் உள்ள பிரதேசத்தில், மக்களின் பொருளாதாரம் பலவீனமாக இருக்கும் இடத்தில் முழுமையான திட்டமிடல் ஒன்று இருக்க வேண்டியது அவசியமாகும்.
வடக்கு மற்றும் கிழக்கு போரால் பாதிக்கப்பட்ட பிரதேசம். அந்த பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதென்றால் ஆகக் குறைந்தது முழுமையான தேவைகளை கண்டறியக்கூடிய முழுமையான ஆய்வுகளை செய்த பின்னரே நிதி ஒதுக்கீட்டை செய்ய வேண்டும். அதனை செய்யாமல் நாங்கள் முடிவுகளை எடுத்தால் அந்த மக்களின் உண்மையான அபிவிருத்தியை அடைய முடியாது. என தெரிவித்துள்ளார்.