ஊழல் ஒழிப்பு அணி வன்னி’ பின்னாலுள்ளவர்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டும் ! பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நட்டஈடு வேண்டும் !
‘ஊழல் ஒழிப்பு அணி வன்னி’ முடக்கப்படக் கூடாது. பின்னாலுள்ளவர்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டும். சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நட்டஈடு வழங்கப்பட வேண்டும்.
“ஊழல் ஒழிப்பு அணி வன்னி“ என்கின்ற பேஸ்புக் வலைத்தள கணக்கு தற்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது. ஆரம்பத்தில் நியாயமான முறையில் மக்களின் பிரச்சினைகளை பேசியதிலும், ஊழல் குற்றவாளிகளையும் பகிரங்கப்படுத்தியதிலும், அரசியல்வாதிகளின் ஊழல்களை பகிரங்கப்படுத்தியதிலும் அதன் பங்களிப்பு பாராட்டும் விதத்திலிருந்தது. ஆனால் மிகக்குறுகிய காலத்தில் அத்தளம் யாழ் சைவ வேள்ளாள ஆண்களின் அபிலாசைகளை நிறுவுவதற்கான தளமாக மாறியது.
வம்பன் நெற் போல ஆபாச செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஊழலையும் – மக்கள் பிரச்சினைகளையும் பேசாமல் பகிரங்கப்படுத்தாமல் தனிநபர்களின் – தனிப்பட்ட வாழ்க்கை தவறுகளை பற்றி பேசுவதிலும், காலாதிகாலமாக தமிழர்களிடம் புதைந்து போயுள்ள ஆணாதிக்க மனோநிலையில் நின்றும் தனது பதிவுகளை பகிர ஆரம்பித்துள்ளமையானது பலரிடமும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தளத்தின் உண்மை முகத்தை தேசம்நெற் ஆம்பலப்படுத்தி இருந்தமையும் இவர்களை தமிழ் தலிபான்கள் என வர்ணித்து இருந்ததும் தெரிந்ததே.
இதேவேளை குறித்த முகநூல் பக்கத்தில் என்.பி.பி கட்சியினருக்கு ஆதரவான பல பதிவுகளும் அவ்வப்போது வெளியான நிலையில், இந்த முகநூல் பக்கமானது என்.பி.பியினரால் இயக்கப்படுவதாக பலரும் குற்றஞ்சாட்டி வந்த நிலையில், ஊழல் ஒழிப்பு அணி வன்னி – எனும் பெயரில் இயங்கும் முகநூல் லைக் பக்கத்துக்கும், தேசிய மக்கள் சக்திக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.
இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், ஊழல் ஒழிப்பு அணி வன்னி எனும் பெயரில் இயங்கும் முகநூல் லைக் பக்கத்துக்கும், தேசிய மக்கள் சக்திக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இப்பக்கத்தக்கு எதிராக நீங்களும் முறைப்பாடுகளை முன்வைக்கலாம். ஊழல், மோசடிகள், அநீதிகள் இடம்பெறுமாயின் அதனை துணிவுடனும், நேர்மையுடனும் சுட்டிக்காட்டும் தைரியம் எமது தேசிய மக்கள் சக்தியினருக்கு உள்ளது. எனவே, போலி முகநூல் ஊடாக உலாவ வேண்டிய எவ்வித தேவைப்பாடும் எமக்கு கிடையாது. போலிகளுக்கு பதிலளித்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. எனினும், ஏதேனும் மோசடிகள் இடம்பெறக்கூடும் என்பதாலேயே இந்த முன்னெச்சரிக்கை பதிவு என தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.