ஆசிய வலய நாடுகளில் இலங்கைப் பெண்கள் கல்வியில் முன்நிலையில் – நாடாளுமன்றத்தில் பிரதமர் ஹரிணி !
மகளிர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் நடைமுறைக்கு சாத்தியமான சட்டங்கள் இயற்றப்படும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். அவர் ஆசிய வலய நாடுகளில் இலங்கை கல்வியில் முன்நிலை வகிப்பதையும் அப்போது சுட்டிக்காட்டினார். 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கு பிரதமர் மேலும் உரையாற்றிய போது சுதந்திரத்துக்கு பின்னராக 75 வருட காலத்தையும் நாங்கள் விமர்சிக்கவில்லை. அரசியல் கட்டமைப்பையே சாபம் என்கிறோம். இலவச கல்வி மற்றும் இலவச சுகாதாரம் ஆகியவற்றால் பெண்கள் முன்னேற்றமடைந்துள்ளார்கள். ஆசிய வலய நாடுகளில் இலங்கையின் பெண்களின் கல்வி தரம் முன்னிலையில் உள்ளது. கல்வித்துறையின் ஊடாகவே ஆண் – பெண் சமத்துவத்தை உறுதிப்படுத்த முடியும். ஆகவே ஆண்களின் கல்வி நிலை குறித்து விசேட கவனம் செலுத்தப்படும்.
சுயாதீன தேசிய மகளிர் ஆணைக்குழு வெகுவிரைவில் ஸ்தாபிக்கப்படும். அரசியலமைப்பு பேரவைக்கு இந்த ஆணைக்குழுவுக்கான நியமனங்கள் தொடர்பான பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்றும் பிரதமர் தெரிவித்தார்.