‘ஐ.நா. செய்மதிப் படங்களும், கருத்துக்களும் பக்கச்சார்பானதும் ஊர்ஜிதமற்றதுமாகும்’ – நீல் பூனே

_sri_lanka_sat_any.gifபாதுகாப்பு வலயத்தினுள் இருக்கும் சிவிலியன்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டிருந்த ஐ. நா. செய்மதிப்படங்களும், அவை குறித்த கருத்துகளும் பக்கச் சார்பானவையும் ஊர்ஜிதம் செய்யப்பட முடியாதவையெனவும் ஐ. நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியும் மனிதாபிமான இணைப்பாளருமான நீல் பூனே தெரிவித்துள்ளார். அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகளுக்கான அமைச்சர் மகிந்த சமரசிங்கவுக்கு கடந்த 04 ஆம் திகதி நீல் பூனே எழுதியுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ. நா. செய்மதியினால் வெளியிடப்பட்டிருக்கும் படங்களையும் அதன் விவரணங்களையும் ஊடகங்களுக்கு வெளியிடுவதற்கு தான் அனுமதி வழங்கவில்லையெனவும் அவை ‘ஐ. நா. வின் தேடல்’ என தவறாக அர்த்தம் கொள்ளும் வகையில் வெளியிடப்பட்டிருப்பதாகவும் பூனே கூறியுள்ளார். அவரது கருத்துப்படி மேற்படி படங்களும் அதன் விவரணங்களும்  தொழில்நுட்ப ரீதியாக ஏற்பட்ட பிழையினால் இரகசிய குறியீடுகள் பாதுகாக்கப்படாமையினாலேயே பொது மக்களை சென்றடைந்துள்ளன எனவும் பூனே குறிப்பிட்டுள்ளார். பூனே அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது :-

‘பலருக்கும் தகவல் மூலமாகவிருக்கும் செய்மதிப் படங்கள் மூலம் எந்த சந்தர்ப்பத்திலும் ஐ. நாவுக்கான முழு விவரங்களையும் பெற்றுக்கொள்ளலாம். அவை ஐ. நா. செயலாளர் நாயகம் அல்லது சிரேஷ்ட உறுப்பினர்களின் அனுமதியுடனேயே பெறப்படும். இதேவேளை, ஊடகவியலாளர்கள் இதுதொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு யூ. என். ஓசட் வெளியிட்டுள்ள கருத்துக்கள் பக்கச்சார்பானவை.

செய்மதியின் தரவுகள் உண்மையானவையா என உறுதிப்படுத்துவதற்கு அந்நாட்டிலிருந்து வெளியாகும் தரவுகளுடன் அவற்றை ஒப்பீட்டுப் பார்க்க வேண்டும். இந்த விடயத்தில் அவ்வாறு செய்யப்பட்டிருக்கவில்லை. கடந்த வாரம் ஊடகங்களில் வெளியாகியிருந்த மேற்படி படங்களை கடந்த ஏப்ரல் 28 ஆம் திகதியன்றே நான் பார்வையிட்டேன்.

யூ. என். ஓசட் இப்படங்களையும் இது தொடர்பான விவரணங்களையும் பொதுமக்களுடன் பகிர்ந்துகொள்ள எம்மிடம் அனுமதி கோரியிருந்த போதிலும் அவை ‘ஐ. நா. வின் தேடல்’ என தவறான அர்த்தம் தொனிக்கும் வகையில் அவற்றை வெளியிடுமாறு நான் அனுமதி வழங்கவில்லை. எப்படியாயினும், இரகசிய குறியீடுகளை பாதுகாக்காத வகையில் படங்களும் விவரணங்களும் அனுப்பப்பட்டமையினாலேயே அவை பொதுமக்களை சென்றடைந்துள்ளன என்பதை அறிந்துகொண்டேன்.

இத்தவறு எவ்வாறு நேர்ந்தது என்பது குறித்து விசாரணை நடத்துமாறு எனது தலைமையகத்துக்கு பணிப்புரை விடுத்துள்ளேன். எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் இடம்பெறாது.

வன்னியிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறும் படம் இறுதியாக எமக்கு கடந்த ஏப்ரல் 19ஆம் திகதி கிடைத்தது.  விரைவில் புதிய படங்கள் கிடைக்குமென நம்புகின்றோம்.  அப்போது தான் அங்கே இன்னும் எத்தனை பேர் எஞ்சியிருந்து சவால்களுக்கு முகம் கொடுக்கிறார்கள் என்பது குறித்து எமக்கு தெரியவரும். அத்தகவல்களை உங்களுக்கும் கிடைக்கும் வகையில் செய்வோம்.

ஹோம்ஸ் கருத்து

யுத்தப் பிரதேசத்தினுள் சிவிலியன்கள் கொல்லப்படுவது அல்லது காயப்படுவது தொடர்பாக சில குறிப்பிட்ட ஊடகங்களில் வெளியிடப்பட்டது நம்பகமானது அல்ல என மனித உரிமைகளுக்கான ஐ. நா. பிரதிச் செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஐ. நா. வட்டாரெங்களை ஆதாரங்காட்டியே ஊடகங்கள் அந்த செய்திகளை வெளியிட்டுள்ளன. இது முற்றிலும் தவறானது.

ஐ. நா. சபையால் இவ்வாறான எந்தவொரு இழப்புக்களின் எண்ணிக்கை குறித்து எவ்வித அறிவிப்பும் விடுக்கப்படவில்லை. என ஐ. நா. கொழும்பு அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம், சிவிலியன்களைப் பாதுகாப்பதற்கு இலங்கை அரசாங்கம் எடுக்கும் சகல நடவடிக்கைகளுக்கும் ஐ.நா. பூரண ஒத்துழைப்பு வழங்கும் எனவும் ஐ.நா. மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *