“வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகள் பிச்சையல்ல. அது உரிமை” – பா.உ அர்ச்சுனாவுக்கு ஈ.பி.டி.பி பதில் !
வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகள் என்பது யாரும் யாருக்கும் போடும் பிச்சை அல்ல, குறித்த ஒதுக்கீடுகள் மக்களின் உரிமை என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியி்ன் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் யாழ் ஊடக மையத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் மேலும் தெரிவிக்கையில், “இந்த நாட்டினிலே வாழ்ந்து கொண்டிருக்கின்ற அனைவருமே, வரி செலுத்துநர்களாகவே இருக்கின்றோம். சாதாரண குடும்பம் ஒன்று தங்களுடைய அன்றாடச் செயற்பாடுகளின் ஊடாக மாதாந்தம் 40,000 ஆயிரம் ரூபாய் வரியை மறைமுகமாக செலுத்திக் கொண்டிருக்கின்றது. ஆக, வரவு செலவுத் திட்டத்தில் ஊடாக கிடைக்கின்ற நிதியொதுக்கீட்டை பெற்று பயன்படுத்துவது என்பது எமது உரிமை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு வரவு செலவுத் திட்டத்தில், ஒவ்வொரு துறைக்காவும் ஒதுக்கீடுகளிலும் எமக்கான ஒதுக்கீடுகள் காணப்படுகின்றன.
அதைவிட மாகாண சபைக்கான ஒதுக்கீடுகள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றிலும் சரியான முறையில் எமக்கான ஒதுக்கீடுகள் வழங்கப்படுகின்றனவா என்பதை தொடர்ச்சியாக அவதானித்து அதனை உறுதிப்படுத்துவதே மக்கள் பிரதிநிதிகளின் கடப்பாடாக இருக்க முடியும்.
கடந்த காலங்களில் குறுகிய அரசியல் நலன்களுக்காகவும் சுய தேவைகளுக்காகவும் எமது மக்களை உணர்ச்சியூட்டும் வகையில் எம்மவர்கள் சிலரினால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளும் எமது மக்களின் இன்றைய கையறு நிலைக்கான காரணங்களில் ஒன்று என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அனுர குமார திசாநாயக்க முன்வைத்த வரவு செலவு திட்டத்தில் வடக்கு கிழக்கு தமிழர்களுக்கு பிச்சை போடப்பட்டுள்ளது எனவும் அந்த பிச்சையை விட அதிக பிச்சையை பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கினால் நான் பெற்றுத்தருவேன் என நாடாளுமன்றத்தில் தெரிவித்தமையும் கவனிக்கத்தக்கது.