மட்டு. மாவட்டத்தில் பாடசாலைகள் நேற்றும் பாதிப்பு; பாதுகாப்பை உறுதிப்படுத்த கல்வி செயலர் பணிப்பு

sri-lankan-schools.jpg மட்டக்களப்பு கோட்டைமுறை கனிஷ்ட வித்தியாலய மாணவி கடத்தப்பட்டு கொலை செய்தமையைக் கண்டித்து மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் நடைபெற்றுவந்த ஹர்த்தால் செவ்வாய்க்கிழமை முடிவுற்று வழமை நிலை ஏற்பட்டுள்ள போதிலும் பாடசாலைகளில் இயல்பு நிலை திரும்பவில்லை.

நேற்று புதன்கிழமை கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலயத்துக்கு 3 மாணவர்கள் மட்டுமே பெற்றோருடன் சமுகமளித்திருந்தனர். பல பாடசாலைகள் நேற்று 3வது நாளாகவும் இயங்கவில்லை. அநேகமான பாடசாலைகளில் மிக சிறுதொகை மாணவர்களே சமுகமளித்திருந்தனர். இதேவேளை, கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலயத்தில் மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ. எம். ஈ. போல் தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விசேட ஆரம்பக் கூட்டம் நேற்று பட்டிருப்பு தேசிய பாடசாலையில் இடம்பெற்றது. நேற்றுக் காலை ஆரம்பமாகி பிற்பகல் வரை இடம்பெற்ற கூட்டம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (சமந்த த சில்வா) தலைமையில் இடம்பெற்றது. பட்டிருப்பு வலயக் கல்விப் பணிமனையின் பிரதிக் கல்விப் பணிப்பாளர், நகுலேஸ்வரி புள்ளநாயகமின் வேண்டுகோளின்படி வலயத்தின் சகல அதிபர்களும் கலந்துகொண்டதுடன், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த வீரசுரியாவும் கலந்துகொண்ட இவ்விசேட கூட்டத்தில் பாடசாலை மட்டத்தில் பாதுகாப்புக் குழுக்கள் அமைப்பதெனவும், மாணவர்கள் பாதுகாப்பு தொடர்பான விசேட அறிவுரைகள் குழுக்களுக்கு வழங்குவதெனவும் முடிவு செய்யப்பட்டது.

கடந்த வியாழக்கிழமை அனைத்து பாடசாலை மாணவர்களும் பாடசாலைகளுக்கு முற்றாக சமுகமளிக்காமையைத் தொடர்ந்து பாடசாலைகள் தொடர்ச்சியாக இயங்கவில்லை.மட்டக்களப்பு நகரையும், அதனைச் சூழவுள்ள பிரதேசங்களிலும் சுமார் 25 பாடசாலைகள் செயலிழந்துள்ளன. மேற்படி சிறுமியின் கொலையுடன் சம்பந்தப்பட்ட இருவரை இன்னும் கைதுசெய்ய வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் செவ்வாய் அதிகாலை பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டமை தெரிந்ததே.மேற்படி சந்தேக நபர்கள் கைதாகும் வரை தொடர்ச்சியாகப் பாடசாலைகளைப் பகிஷ்கரிக்குமாறு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால், நேற்றுக் காலை பாடசாலைகளுக்கு வருகைதந்த பெரும்பாலான மாணவர்கள் வீடுகளுக்குத் திரும்பிச் சென்றதை அவதானிக்க முடிந்தது.

இதேவேளை கிழக்கு மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளின் அதிபர்கள் தமது பாடசாலை மாணவ மாணவியரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உச்சக் கட்ட நடவடிக்கையினை எடுக்குமாறு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச். கே. யூ. கே. வீரவர்த்தன சகல வலயங்களுக்கும் அவசர அறிவித்தலை விடுத்துள்ளார்.

அவரது அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :- பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவ மாணவியருக்கு பாதுகாப்பை வழங்குவது அதிபரின் கடமையாகும். தாய், தந்தை, பாதுகாவலரைத் தவிர்ந்த எந்தவொரு நபரோடும் பாடசாலை நேரத்தில் பிள்ளைகளை அனுப்ப வேண்டாம்.  தாய், தந்தை சட்ட ரீதியான எழுத்துமூல ஆலோசனைக்கு அதிபர் தனிப்பட்ட ரீதியில் திருப்தி அடைந்தால் மட்டும் அனுப்ப முடியும். எனினும் தரம் 1 – 5 வரையுள்ள பிள்ளைகளை பாடசாலைகளிலிருந்து தாய், தந்தை, சட்ட ரீதியான பாதுகாவலரைத் தவிர வேறொருவருடனும் அனுப்பவே கூடாது. சந்தேகமெனின் பாதுகாப்பு அதிகாரிகளது உதவியை நாடவும்.

புதிய நடைமுறை

இதற்கிடையில் மட்டு. கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலயத்தில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பு கருதி புதிய நடைமுறைகள் பின்பற்றப்படவுள்ளன. இதற்கான தீர்மானம் பாடசாலை அபிவிருத்திச் சங்கக் கூட்டத்தில் எடுக்கப்படவுள்ளதாக மேற்படி வித்தியாலய அதிபர் சி. வி. விஸ்வலிங்கம் தெரிவித்தார். இத்தீர்மானங்களின்படி தினமும் காலையில் மாணவர்கள் பெற்றார் அல்லது அறிமுகமான உறவினர் அல்லது அறிமுகமான ஆட்டோ சாரதியினால் அழைத்துவரப்பட்டு வகுப்பாசிரியரிடம் ஒப்படைத்தல் வேண்டும். வகுப்பாசிரியர் இல்லாதவிடத்து அடுத்த வகுப்பாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.

இதேபோன்று பாடசாலை முடிந்த பின்னரும் வகுப்பாசிரியரிடமிருந்து பிள்ளைகளை பொறுப்பேற்று செல்ல வேண்டும். எந்த சந்தர்ப்பத்திலும் மாணவர்கள் பாடசாலை நேரத்தில் வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள். இந்த நடைமுறை கண்டிப்பாக பின்பற்றப்படவுள்ளதாக அதிபர் மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *