இலங்கைக்குள்ளும், இலங்கையைச் சூழவுள்ள பிரதே சங்களிலும் ஏற்படுகின்ற நில அதிர்வுகளைப் பதிவு செய்யவும், அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை மேற்கொள்ளுவதற்குமென ஜேர்மன் நாட்டின் உத வியுடன் இரண்டு நில அதிர்வு பதிவு, மத்திய நிலையங்கள் அமைக்கப்படவிருக்கின்றது.
இந்த நிலையங்கள் அனுராதபுரம், கனதராவ விகாரை வளாகத்திலும், ஹக்மன விகாரை வளாகத்திலும் அமைக்கப்படவிருப்பதாக புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியக பூகற்பவியல் நிபுணர் நில்மினி தல்வெல நேற்றுத் தெரிவித்தார். இந்த இரண்டு நிலையங்களும் இவ்வருட இறுதிக்குள் நிர்மாணிக்கப்படுவதுடன் அவை செயற்படவும் தொடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், இலங்கைக்குள்ளும், இலங்கைக்கு அண்மித்த பிரதேசங்களிலும் அண்மைக் காலமாக அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்படுகின்றன. இதனைக் கருத்திற் கொண்டு தான் ஜேர்மன் நாட்டின் ஜி. எப். இஸட் நிறுவனத்தின் உதவியோடு நில அதிர்வு பதிவு மையங்கள் இரண்டை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.
இந்த இரண்டு மையங்களுக்கும் அவசியமான உபகரணங்களை வழங்குவதற்கு ஜேர்மன் நிறுவனம் இணக்கம் தெரிவித்திருக்கிறது. இந்த நிலையங்களை அமைப்பதற்கென நாம் இரண்டு மில்லியன் ரூபாவை செலவிடவிருக்கின்றோம்.
தற்போது இந் நாட்டில் நில அதிர்வுகளை பதிவு செய்யவென ஒரே ஒரு நிலையம் தான் கண்டி, பள்ளேகலையில் இயங்குகின்றது. இதற்கு மேலதிகமாக இந்த இரு நிலையங்களும் செயற்படத் தொடங்கும் போது 4 ரிச்டர் அளவுக்கு குறைவான நில அதிர்வுகளையும் துள்ளியமாகப் பதிவு செய்யக் கூடியதாக இருக்கும்.
இவற்றை அடிப்படையாக வைத்து நில அதிர்வு ஏற்பட்ட இடம். ஆழம், நேரம் என்பவற்றை மிகவும் இலகுவாக கணிப்பிட்டு விட முடியும் என்றும் அவர் கூறினார்