போராட்டத்தில் ஈடுபடுவோரை புலனாய்வாளர்கள் அச்சுறுத்தினால் தெரியப்படுத்துங்கள் – அமைச்சர் சந்திரசேகர் !
போராட்டத்தில் ஈடுபடுகின்ற போது புலனாய்வு பிரிவு மற்றும் அரச தரப்பினால் தமக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும், தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபடுகின்ற போது ஏற்படுகின்ற அச்சுறுத்தல்களால் பல பட்டதாரிகள் போராட்டத்தில் இருந்து ஒதுங்குகின்றனர் எனவும் வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.சசிகரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் சந்திரசேகரிடம் ஊடகங்கள் வினவியவேளை, “புலனாய்வு பிரிவினர் அச்சுறுத்தல் விடுக்கக்கூடாது. புலனாய்வு பிரிவினர் அச்சுறுத்துவது அந்தக் காலத்தில் இருந்தது. அவர்களுக்கு போராடுவதற்கு உரிமை உள்ளது. போராடுவதற்கு புலனாய்வு பிரிவினர் அச்சுறுத்தல் விடுப்பதில்லை. அப்படி அச்சுறுத்தல் விடுப்பார்களாக இருந்தால் அது குறித்து எங்களுக்கு தெரியப்படுத்துங்கள், நாங்கள் நடவடிக்கை எடுப்போம். இதுவரை நாட்களும் இந்த பட்டதாரிகள் எங்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தினார்களா? விளையாட்டாக செயல்படுபவர்களிடம் நீங்கள் இது குறித்து கதைக்காதீர்கள். நாங்கள் உங்களது பிரச்சினைகள் குறித்து நிச்சயமாக உள்வாங்கி செயற்படுவோம்” என தெரிவித்தார்.
இதேவேளை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் கூடிய முதலாவது யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில், பா.உ இராமநாதன் அர்ச்சுனாவை வேலையில்லா பட்டதாரிகள் சந்தித்ததிருந்தனர். இதன் போது வெளிநாட்டில் இருந்தும் முதலீடுகளை வரவழைத்து பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக பா.உ அர்ச்சுனா தெரிவித்திருந்ததும் கவனிக்கத்தக்கது.