கொழும்பு துறைமுக மனிதப்புதைகுழி – இரு சிறுவர்கள் உட்பட கொன்று புதைக்கப்பட்ட 16பேரின் எலும்புக்கூடுகள் மீட்பு !
கொழும்பு துறைமுகப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சியில் இதுவரை 16 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அகழ்வாராய்ச்சியை மேற்பார்வையிடும் ஆலோசகரான சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்துள்ளார். இவற்றில் இரு சிறுவர்களது எலும்புக்கூடுகளும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளாவது, இதுவரை 13 முழுமையான எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. கணிசமான எண்ணிக்கையில் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் மேலும் மூவரின் எலும்புக்கூடும் அடையாளம் காணப்படவுள்ளன. சடலங்கள் புதைக்கப்பட்ட விதம் அவர்கள் கொலை செய்யப்பட்டதைக் காட்டுகின்றது. உயிரிழந்த காலகட்டம் விஞ்ஞானரீதியிலான ஆய்வுக்குப் பிறகு தீர்மானிக்க முடியும். நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களின்படி அறிக்கைகள் வழங்கப்படும் என்றார் பேராசிரியர் ராஜ் சோமதேவ.
கடந்த ஆண்டு ஜூலை 13ம் திகதி கொழும்பு துறைமுகத்திற்குச் செல்லும் புதிய அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகளுக்காக நிலத்தை தோண்டும் போது கொழும்பு துறைமுகத்தில் அமைந்துள்ள பழைய செயலக வளாகத்தில் முதன்முறையாக மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. தற்போது இதன் மூன்றாம் கட்ட அகழ்வாய்வுகள் இடம்பெறுகின்றன.
கொழும்பு துறைமுகம் பல நூற்றாண்டுகளாக போர்த்துகீசியம், டச்சு மற்றும் பிரித்தானியரின் காலனித்துவ ஆட்சியின் போது ஒரு முக்கிய வர்த்தக மையமாக விளங்கியது. சிலர் குறிதத்த புதைகுழி காலனித்துவ கால மோதல்களுடன் தொடர்புபட்டிருக்கலாம் என்று ஊகிக்கிறார்கள், சிலர் இவர்கள் இலங்கை உள்நாட்டு யுத்தத்தின்போதான வன்முறைகளின் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடுகின்றனர்.