நாய்க்கு தூக்கு தண்டனை கொடுத்தது இணக்க சபையா..? முல்லைத்தீவில் நடந்த கொடூரம் !

நாய்க்கு தூக்கு தண்டனை கொடுத்தது இணக்க சபையா..? முல்லைத்தீவில் நடந்த கொடூரம் !

ஆட்டை கடித்த நாய் ஒன்றை பெண் ஒருவர் தூக்கிலிட்டு கொலைசெய்த சம்பவமொன்று முல்லைத்தீவில் பதிவாகியுள்ளது. அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது.

சம்பவம் தொடர்பில் தேசம்நெட் அப்பகுதி சமூக செயற்பாட்டாளர் ஒருவருடன் தொடர்பு கொண்ட போது, முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியிலுள்ள பெண் ஒருவருக்குச் சொந்தமான ஆட்டை, அயல்வீட்டு நாய் கடித்துள்ளது. இது தொடர்பில் அயல்வீட்டாருடன் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு குறித்த பிரச்சினை அப்பகுதி மத்தியஸ்த சபைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

நாயை வளர்க்கும் பெண்ணின் வறுமையை கவனத்தில் கொண்டு இணக்க சபையினர், இறந்த ஆட்டுக்கான இழப்பீட்டை அந்தப் பெண்ணால் முடியாது என தெரிவித்துள்ளனர். இழப்பீட்டுக்கு பதிலாக குறித்த நாயை வழங்குமாறு ஆட்டின் உரிமையாளர் கோரியிருந்துள்ளார்.

இணக்கசபையினரும் நாயை வழங்குமாறு கூறிய நிலையில் நாயை பெற்றுக்கொண்ட பெண் அதனை சுருக்கிட்டு கொலை செய்துள்ளார். அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அறிய முடிகிறது.

இதேவேளை சில சமூக வலைத்தள கணக்குகளில் இணக்கசபையினர் நாயை தூக்கிட்டு கொலை செய்யுமாறு கட்டளையிட்டதாக தகவல்கள் பரப்பப்பட்டு வருவதையும் அவதானிக்க முடிகிறது.

இது பற்றி கருத்துப் பதிவு செய்துள்ள சமூக அரசியல் செயற்பாட்டளர் தம்பையா சோதிலிங்கம், “சமூகத்தின் சிந்தனை முறையில் வன்முறை – எதிர்ப்பு – வெறுப்பு எவ்வளவு வெறுப்பு வேரூன்றியிருக்கின்றது என்பதை இச்செயல் எடுத்துக் காட்டுகின்றது” எனப் பதிவிட்டுள்ளார்.

லண்டனில் நடைபெற்ற கண்காட்சியொன்றில் குதிரை தூக்கில் தொங்குவது காட்சிப்படுத்தப்பட்டது. அது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளது. ஆனால் உயிரோடு இருந்த வாய்பேச முடியாத பிராணியை தூக்கிட்ட மனநிலை பலரையும் தூக்கிவாரிப் போட்டுள்ளது. வடக்கில் மாதம் 3 படுகொலைகள் நிகழ்வதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறான சகிப்புத்தன்மையற்ற மனநிலை படுகொலைகளை நோக்கியே மனிதர்களை நகர்த்துகிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *