டெய்சி ஆச்சியின் காணியை ஆட்டையைப் போட்ட யோஷித ராஜபக்ச கைது ! ஞானா முனசிங்க ஆச்சியின் காணியை ஆட்டையைப் போட்ட குடும்பி ஜெயேந்திரன் கைதாவது எப்போது?
காணி மோசடிக்காக, பண மோசடி சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனான யோஷித ராஜபக்ச ஜனவரி 25 கைது செய்யப்பட்டுள்ளார். கைதான யோஷித ஜனவரி 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தன்னுடைய பாட்டியான டெய்சி பாரஸ்ட்க்குச் சொந்தமான ரத்மலானை, கெகட்டிய மாவத்தையிலுள்ள 4 ஆம் இலக்கத்தில் அமைந்துள்ள 34 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வீடு மற்றும் காணியை முறைகேடாக வாங்கியது தொடர்பாக இந்தக் கைது இடம்பெற்றுள்ளது. யோஷித ராஜபக்சவை சந்தேக நபராகப் பெயரிட போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டமா அதிபரால் கடந்த 23ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவித்ததைத் தொடர்ந்தே அவர் கைதாகியுள்ளார்.
இக் கைதுக்கு பின்னால் ராஜபக்சக்களை அரசியல் பழிவாங்கும் சதித்திட்டம் இருப்பதாக அவர்களது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தேசிய மக்கள் சக்தியினர் வழங்கிய வாக்குறுதியின்படி , 2015 ஆம் ஆண்டு நல்லாட்சிக் காலத்தில் இடம்பெற்ற மத்திய வங்கி கொள்ளையுடன் தொடர்புடையவர்களான ரவி கருணாநாயக்கா மற்றும் ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்யவில்லை எனக் கேள்வி எழுப்புகின்றனர். இக் குற்றச்சாட்டுக்களை மறுக்கும் என்பிபி அமைச்சர் நளிந்த ஜெயசிங்க பதிலளிக்கும் யோஷித மகிந்த ராஜபக்ச மகன் என்பதால் கைது செய்யப்படவில்லை என்கிறார். மேலும் அவர் கூறும் போது யாராக இருந்தாலும் சட்டவிரோதமாக அல்லது சந்தேகத்திற்கிடமான முறையில் நிலங்கள் அல்லது சொத்துக்களை வாங்கியிருந்தாலும் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்கிறார்.
இதே நடைமுறையை முன்னாள் இராஜதந்திரி மங்கள முனசிங்கவின் மனைவியின் காணி அபகரிப்பு மோசடி வழக்கிலும் என்பிபி அரசாங்கம் பின்பற்றுவார்களா என பாதிக்கப்பட்டவர்கள் தேசம் நெற்றிடம் முறையிடுகிறார்கள். முன்னால் இராஜதந்திரியான மறைந்த அரசியல்வாதியான மங்கள முனசிங்கவின் மனைவியான ஞானா முனசிங்கவின் நல்லூரில் அமைந்துள்ள காணியை ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் குடும்பி வெற்றிவேலு ஜெயேந்திரன் கையெழுத்து மோசடி செய்து அபகரித்துள்ளார். அக்காணியின் உரிமையாளரான ஞானா முனசிங்கவின் சகோதரியான மீனா இரட்ணம் இந்தியாவில் சாய்பாவா கோயில் அமைந்துள்ள புட்பர்த்தியிலிருந்து தனது சகோகதரிக்கு அனுப்பிய கடிதத்தில் உள்ள கையொப்பத்தைப் பயன்படுத்தி மோசடியாக காணி அபகரிக்கப்பட்டுள்ளது.
இந்த காணி மோசடியில் கள்ள உறுதி எழுதும் சில சட்டத்தரணிகளும், அரசியல் வாதிகளும் மற்றும் முதலீட்டாளர்கள் என்ற வகையில் பிரான்ஸ் மற்றும் கனடா வாழ் புலம்பெயர் தமிழர்களும் சம்பந்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே இடம்பெற்ற இந்த காணி மோசடி வழக்கில் அரசியல் தலையீடு காரணமாக லக்ஸ் கோட்டல் முதலாளியும் ஐக்கிய மக்கள் கட்சியின் யாழ் அமைப்பாளரும் தற்போது வரை தப்பியுள்ளனர். இவ்வழக்கை மீள எடுத்து என்பிபி விசாரணை செய்ய வேண்டும். வெற்றிவேலு ஜெயேந்திரனும் கூட்டாக மோசடி செய்தவர்களும் கைது செய்யப்பட வேண்டும் என காலஞ்சென்ற மங்கள முனசிங்கவின் நண்பர்கள் கோருகின்றனர்.