ஜனவரி 25 தமிழ் தேசியத்தின் மாற்றத்திற்கான ஆரம்பம் என்று கஜா சொன்னது: சிவிகே சிவஞானத்திற்கு அழைப்பிதழ் கொடுப்பதா ?
புதிய அரசியலமைப்பு மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் நாடாளுமன்றில் கூட்டாக செயற்படுவது தொடர்பான கலந்துரையாடலுக்கு இலங்கை தமிழரசு கட்சிக்கும் உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 25இல் தமிழ் தேசியத்தின் தலைவிதியை மாற்றப் போவதாக பத்திரிகையாளர் மாநாட்டைக் குப்பிட்டு பொன்னம்பலம் கஜேந்திரகுமார் சொன்னது இந்த கூட்டத்திற்கு வரச்சொல்லி அமைப்பிதழ் கொடுப்பதையா? எனப் பலரும் புரவங்களை உயர்த்துகின்றனர்.
அந்தவகையில் எழுத்து மூலமான அழைப்பு கடிதத்தை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்திடம் நேற்றையதினம் வழங்கியுள்ளார்.
நாடாளுமன்றில் 8 ஆசனங்களைக் கொண்டிருக்கின்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியும், தலா ஒவ்வொரு ஆசனத்தைப் பெற்றுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் ஒரு புள்ளியில் சந்திப்பதன் மூலம் தமிழர் தாயகத்தில் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் அறுதிப் பெரும்பான்மையான 10 ஆசனங்களை நாடாளுமன்றில் உறுதிப்படுத்துவதற்குரிய ஒரு முயற்சியை மேற்கொள்கின்ற வகையிலேயே இந்த முயற்சி அமைந்துள்ளது என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் தமிழரசுக்கட்சிக்கு முறையான அழைப்பு எதுவும் விடுக்கப்பட்டால் மாத்திரமே நாம் அது தொடர்பில் நாம் பரிசீலிப்போம் என சீ.வி.கே சிவஞானம் தெரிவித்திருந்த நிலையில் நேற்று இந்த கடிதத்தை பா.உ கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கையளித்துள்ளார்.