பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியமும் இலவச உணவும் இரத்து!
நாட்டை வங்குரோத்துக்கு தள்ளியவர்கள் செல்வந்த நாட்டை எங்களிடம் ஒப்படைத்ததை போன்று இன்று பேசுகிறார்கள் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விசனம் வெளியிட்டுள்ளார். களுத்துறை – கட்டுகுருந்தவில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்துள்ளதால் மோசடியாளர்கள் தற்போது திணறுகிறார்கள். தமக்கு இணக்கமான ஊடகங்களில் புலம்புகிறார்கள். இவர்கள் இன்னும் 2 தசாப்தங்கள் அழ வேண்டும்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவை இரத்துச் செய்யும் சட்டமூலத்தை வெகுவிரைவில் பாராளுமன்றத்துக்கு கொண்டு வருவேன். பாராளுமன்றத்தில் உணவு பெறுவதாயின் அதற்குரிய கட்டணத்தை செலுத்த வேண்டும். ஒரு வேளை உணவுக்கு 2000 ரூபாய் செலவாகுமாயின் உறுப்பினர்கள் 2000 ரூபாவை செலுத்த வேண்டும். இன்னும் ஓரிரு நாட்களில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
பொருளாதார ரீதியில் பலமடைந்த நாட்டை நாங்கள் பொறுப்பேற்கவில்லை. வங்குரோத்து நிலையடைந்த நாட்டையே நாங்கள் பொறுப்பேற்றோம். நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்கள் இன்று செல்வந்த நாட்டை எங்களிடம் ஒப்படைத்ததை போன்று பேசுகிறார்கள். இந்த நாட்டை மீண்டும் வங்குரோத்து நிலையடைவதற்கு இடமளிக்க போவதில்லை என்றார்.