கல்வி அபிவிருத்தி: ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் பிரதமர் சந்திப்பு!
ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கை வதிவிடப் பணிப்பாளர் ரக்கபுமி கண்டோனோ, பிரதமர் ஹரிணி அமரசூரியவை டிசம்பர் 22இல் சந்தித்தார். இலங்கையின் கல்விக் கொள்கையில் பாரிய மாற்றங்களை கொண்டுவரத்திட்டமிட்டுள்ள பிரதமரும் உயர்கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய இச்சந்திப்பில், இலங்கையின் தேசிய அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கு புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இருந்தார்.
தங்களுடைய அரசு கொண்டுவரவுள்ள சீர்திருத்தங்களை செயற்படுத்துவதற்கு பாடசாலைக் கட்டமைப்பு, அதிபர் ஆசிரியர் மதிப்பீட்டு பொறிமுறையை மேம்படுத்தல் தொடர்பில் இவற்றுக்கான நிதியை ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் பெறுவதே இச்சந்திப்பின் நோக்காக இருந்துள்ளது. தற்போதுள்ள பிரித்தானியாவின் காலனித்தவக் கல்வி முறையை மாற்றி அமைக்க தேசிய மக்கள் சக்தி பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.