அரசாங்கத்தை கேள்விக்குட்படுத்தவோ அல்லது விமர்சிக்கவோ ஊடகங்களுக்கு எந்தத் தடையும் இல்லை. – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க
அரசியல், பொருளாதார விடயங்கள் தொடர்பில் எந்த நேரத்திலும் அரசாங்கத்தை கேள்விக்குட்படுத்தவோ அல்லது விமர்சிக்கவோ ஊடகங்களுக்கு எந்தத் தடையும் இல்லை. எனினும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு பாதகமான போலித் தகவல்களை வெளியிட வேண்டாமென இலத்திரனியல் ஊடக நிறுவன பிரதானிகளிடம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கோரிக்கை விடுத்தார்.
இலத்திரனியல் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பிலேயே, ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். மிகச்சிறந்த அரசாங்கமொன்றைக் கட்டியெழுப்பி அனைத்து பிரஜைகளுக்கும் சிறந்த வாழ்க்கைத்தரத்தை ஏற்படுத்தும் பணியில், ஊடகங்களை வெளிநபர்களாக அன்றி பங்குதாரர்களாகவே, தாம் கருதுவதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
சிறந்த அரசியல் கலாசாரத்தை மக்கள் எதிர்பார்ப்பதாகவும், அதற்காகவே தற்போதைய அரசாங்கத்தை மக்கள் தெரிவு செய்துள்ளதாகவும், மக்கள் எதிர்பார்க்கும் புதிய அரசியல், சமூக மற்றும் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு இணையுமாறு அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
பல தசாப்த காலங்கள் நாடு யுத்தத்துக்கு முகம் கொடுத்ததை நினைவு கூர்ந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இனவாதத்தை மீண்டும் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்றும், ஊடக சுதந்திரத்தை எந்த வகையிலும் தடுக்கவோ, மட்டுப்படுத்தவோ தாம் தயாரில்லை எனவும் தெரிவித்தார்.