வன்னி மக்களுக்கு ஒருவேளையாவது உணவளித்து உயிர்காக்க உதவுங்கள் – திருமலை, மட்டு .மறை மாவட்ட துணை ஆயர் அவசர கோரிக்கை

Wanni_War_IDPsமன்னார் மாவட்டத்தில் தினமும் பஸ்களில் கொண்டுவந்து குவிக்கப்படும் வன்னி அகதிகளுக்கு குடிநீருக்கும் உணவுக்கும் உதவுமாறு திருமலை, மட்டு .மறை மாவட்ட துணை ஆயர் வண. பொன்னையா ஜோசப் பொதுமக்களுக்கு அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்;கடந்த 24 ஆம், 25 ஆம் திகதிகளில் மன்னாருக்கு அவசர விஜயமொன்றை மேற்கொண்டு விட்டு திரும்பிய பின் அவர் மட்டு. ஆயரில்லத்தில் வைத்து இந்த அவசர வேண்டுகோளை விடுத்துள்ளார்.

வன்னியின் போர் பிரதேசத்துக்குள்ளிருந்து தினம் தினம் வவுனியாவுக்குக் கொண்டுவரப்படும் அகதிகளில் பெரும்பாலானோரை வவுனியா செட்டிகுளம் மன்னார் வீதியின் இரு மருங்கிலுமுள்ள காட்டுப்பிரதேசங்களில் அரசாங்கம் கொண்டுவந்து இறக்கியுள்ளது. இப்பகுதிகளை அரச அதிகாரிகள் இயந்திரங்களை கொண்டு துரிதமாக துப்புரவு செய்துகொடுக்க, அவ்விடங்களில் தற்காலிக கொட்டில்களும் கூடாரங்களும் மலசல கூடங்களும் அமைக்கும் அவசர பணிகளில் யுனிசெப் அமைப்பும் கரித்தாஸ்(செடெக்) நிறுவனமும் இணைந்து செயலாற்றிக்கொண்டிருக்கின்றன.

தாம் மன்னாரில் நின்ற கடந்த 24 ஆம் ,25 ஆம் திகதிகளில் மிகப் பெருந்தொகையான பெண்களும் சிறுவர்களும் சிறுமியர்களும் வயது முதிர்ந்த ஆண்களும் பஸ்களில் கொண்டுவந்து இறக்கப்படுவதைக் கண்டோம். இவர்கள் உடுத்த உடுப்புக்கு மாற்றுடையில்லாமல் வெறும் கையினராகவே காணப்பட்டனர். இவர்கள் மத்தியில் ஆண்கள் தொகை குறைவாயிருந்தது. இறக்கப்பட்டவர்களில் பலரும் காடுமேடென்றும் பாராமல் பசியினாலும் தாகத்தினாலும் மயங்கிவீழ்ந்து கிடக்கக் காணப்பட்டனர். இந்தக்கையறு நிலையில் அவர்களுக்கு எதுவும் வழங்கக்கூடிய நிலையில் யாரும் இருக்கவில்லை. இவர்களுக்கு தினமும் ஆயிரம் உணவுப் பார்சல்களையாவது வழங்கமுடியாத நிலையில் தாங்களிலிருப்பதாக மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் என்னிடம் கூறிக்கண்ணீர் வடித்தார்.

இந்த நேரத்தில் இன,மத பேதங்களுக்குமப்பால் மனிதநேயத்துடன் மற்றவர்கள் அந்த அகதிகளுக்கு உணவளிக்க முன்வரவேண்டும். நாள்தோறும் அவர்களுக்கு உணவளிப்பதே முக்கியம்.அதுவே அவசரம். அதன்பிறகே மற்றதெல்லாம். நேற்றைய நாள் கடந்துவிட்டது. நாளை என்ன நடக்குமோ தெரியாது. இன்றைய நாள் எமது கரங்களில் உள்ளது. இன்று துன்பத்தில் ஓலமிடும் எமது சகோதரர்களின் அவலக்குரலைக்கேட்டும் நாம் உதவிசெய்யமறுத்தால், பின் வாங்கினால் நாம் வாழ்ந்தும் பயனில்லை. நாளைவரை காத்திருக்கவேண்டாம். இன்று அவர்களுக்கு உணவளிக்காவிட்டால் நாளை அவர்கள் இருக்கமாட்டார்கள்.

உணவோடு குடிநீரும் குழந்தைகளுக்காக பால்மா, மருந்துப்பொருட்கள்,உடைகளும் அவர்களுக்குத்தேவை .அவலப்படும் இவர்களுக்கு செய்யும் உதவிகள் அந்த இறைவனுக்கே செய்வதாகுமென்று ஆயர் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *