இலங்கையில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எரிபொருள் சிக்கன வாகனம் வழங்கப்படும் என பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
பதவிக்காலம் முடியும் வரை அந்த வாகனத்தை பயன்படுத்தி மக்கள் சேவையை மேற்கொள்ள முடியும் என அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சொகுசு வாகனங்கள் வழங்கப்படாது என அவர் கூறியுள்ளார்.
மக்களின் வரிப்பணம் விரயமாவதை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு நேற்று நடைபெற்றது.
இதில் 175 புதிய உறுப்பினர்கள் முதன்முறையாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
கடந்த கால அரசாங்களில் அமைச்சுக்களின் செயலாளர்கள் முதல் அமைச்சர்கள் வரை அதிசொகுசு வாகனங்கள் வழங்கப்படுவதுடன், பெருந்தொகை மக்களின் வரிப்பணம் செலவிட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நல்லாட்சி அரசாங்க காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களின் சொகுசு வாகனங்களுக்காக 2.8 பில்லியன் ரூபாவை வாரி இறைக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்ததுடன் இந்த தொகை பொருளாதார நெருக்கடி காலத்தில் ஜனாதிபதியாக இருந்த கோட்டாபாய ராஜபக்ச காலத்தில் இன்னமும் அதிகரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.