அப்பாவி மக்கள் மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்துவது மற்றும் விடுதலைப் புலிகள், பொது மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்துவது ஆகிய இரண்டுமே முற்றிலுமாக ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்ஸிலில் இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதுவர் சூசன் ரைஸ் உரையாற்றினார். அப்போது அவர் இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்துக்கும் இடையே நடைபெற்று வரும் சண்டையில் அப்பாவி பொது மக்கள் பலியாகி வருவதற்கு ஆழ்ந்த கவலை தெரிவித்தார்.
போர் பகுதிக்குச் செல்ல ஐ.நா. மனிதநேய குழுவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை இலங்கை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், இதன் மூலம் அப்பாவி மக்களை போர் பகுதியிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றி அவர்களுக்கு தேவையான நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கை உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.