![]()
மட்டக்களப்பில் மூன்று பாடசாலை மாணவர்கள் காணாமற்போனதையடுத்து நேற்று (30.04.2009) மட்டக்களப்பு நகரில் பதற்ற நிலை காணப்பட்டது.
மட்டக்களப்பு கோட்டமுனை கனிஷ்ட வித்தியாலய மூன்றாம் ஆண்டு மாணவி சதீஸ்குமார் தினுசிகா (8), மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களான விதுஸன் (12) ஜனார்த்தன் (13) ஆகிய மூன்று மாணவர்களும் கடந்த 28.04.2009 செவ்வாய்க்கிழமையன்று காணாமற் போயுள்ளனர்.
இச்சம்பவத்தையடுத்து மட்டக்களப்பு நகரிலுள்ள பாடசாலைகள் நேற்று (30.04.2009) செயலிழந்திருந்தன. சில பாடசாலைகளில் மாணவர்கள் வரவு குறைவாக காணப்பட்டன. கோட்டமுனை- கனிஷ்ட வித்தியாலய மாணவி தினுஷிகாவை விடுவிக்கக்கோரி இப்பாடசாலைக்கு முன்பாக திரண்ட அதிமான பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இம்மாணவர்கள் காணாமற் போனது தொடர்பாக மட்டக்களப்பு, காத்தான்குடிப் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளன.