முசலியில் 122 குடும்பங்கள்; நேற்று மீளக் குடியமர்வு

house_new.jpgவடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் மன்னார், முசலி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சவேரியர்புரம் கிராமசேவகர் பிரிவில் 122 குடும்பங்களை மீளக் குடியமர்த்தும் பணிகள் நேற்று நடைபெற்றன. ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம். பி. வட மாகாண விசேட செயலணியின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மீள்குடியேற்ற அமைச்சர் ரிஷாத் பதியுதீன், தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்), கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், அமைச்சர் சந்திரசேன, வடமாகாண ஆளுநர் டிக்ஷன் தால, கடற்படை தளபதி வசந்த கரண்ணாகொட ஆகியோரின் பங்களிப்புடன் 409 பேரைச் சேர்ந்த 122 குடும்பங்கள் மீளக்குடியமர்த்தப்பட்டன.

எதிர்வரும் 11ஆம் திகதி முசலி பிரதேச செயலகத்துக்குட்பட்ட 10 கிராம சேவகர் பிரிவுகளிலும் 2100 பேரைக் கொண்ட 525 குடும்பங்கள் மீளக் குடியமர்த்தப்படவும் உள்ளன. மீளக் குடியமர்த்தப்பட்டவர்களில் மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடிப்பதற்கான அனுமதியும் நேற்று பெற்றுக்கொடுக்கப்பட்டன. கடற்படைத் தளபதி மற்றும் பசில் ராஜபக்ஷ எம். பி. ஆகியோர் கைச்சாத்திட்டு அனுமதி வழங்கப்பட்டது.

மேலும் மன்னாரிலிருந்து முசலிக்கு போக்குவரத்து சேவைகளுக்கு என இரண்டு பஸ் வண்டிகளும் சேவையில் நேற்று முதல் ஈடுபடுத்தப்பட்டன. பாடசாலைகள்  ஆரம்பமாகின்றன. 11 ஆசிரியர்கள் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

40 அத்தியாவசியப் பொருட்கள் உள்ளடக்கப்பட்ட நிவாரணப் பொருட்களும் இந்த மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன. சுமார் 6 மாத காலத்திற்கு போதுமான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டதுடன் அத்தியாவசிய பொருட்களை நியாய விலையில் பெற்றுக் கொள்வதற்காக கூட்டுறவு கடையும், மருத்துவ வசதிகளும் நேற்று செய்துகொடுக்கப்பட்டன. முசலி பிரதேச செயலக பிரிவில் எஞ்சியுள்ள எட்டு கிராம சேவகர் பிரிவில் நிலக்கண்ணி வெடிகள், மிதிவெடிகள் அகற்றும் பணிகள் முடிவடைந்ததும் மீள்குடியேற்றத்திற்கான திகதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • Kusumo
    Kusumo

    நீங்கள் குடியமர்த்துவது சரி யாரைக் குடியமர்த்துவீர்கள் என்பது தானே எமது கேள்வீ.

    Reply