ஊடகவியலாளர்கள் நடுநிலைமையுடன் செயற்படவேண்டும் ஊடக சுதந்திரத்திற்கு அரசாங்கம் தடைவிதிக்கவில்லை -அமைச்சர் யாப்பா

laxman_yapa_abeywardena.jpg
ஊடகவியலாளர்கள் நடுநிலைமையுடன் செயற்பட வேண்டும் எனக் கூறிய ஊடகத்துறை அமைச்சர் லக்ஷமன் யாப்பா அபயவர்தன ஊடகச் சுதந்திரத்திற்கு அரசாங்கம் தடை எதுவும் விதிக்கவில்லை எனவும் தெரிவித்தார். மாத்தறை ராகுலக் கல்லூரியில் இடம் பெற்ற சிறுவர்களுக்கான “எமது தாய் கூறும் கதை’என்ற புத்தகத்தை வெளியிட்டபின் உரையாற்றுகையிலே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், பத்திரிகைச் சுதந்திரம் நாட்டில் இல்லையென்று கூறுவதில் எவ்வித உண்மையுமில்லை. ஒரு அரசாங்கத்தின் செயற்பாடுகளை முன்னெடுத்துச் சென்று அந்த அரசாங்கத்திற்கு சக்தியையும் வலுவையும் முன்னெடுத்துச் செல்பவர்கள் பத்திரிகையாளர்கள். அவர்கள் மேற்கொண்டு வரும் இந்த அர்ப்பண சேவையை அரசாங்கம் மறந்துவிட்டது.

அதேபோல் ஊடகவியலாளர்கள் அரசாங்கத்தின் தவறுகளையும் வெளிப்படையாகவே வெளியிட்டு அவைகளைத் திருத்திவரவும் பின் நிற்பதில்லை. துணிச்சலுடன் நேர்மையாகச் செயல்படுபவர்களே உண்மையான ஊடகவியலாளர்கள். ஊடகவியலாளர்கள் எப்போதும் உண்மைகளை எழுத வேண்டும். எதையும் மிகைப்படுத்தி பிழையான செய்திகளை எழுதுவது பத்திரிகைத் தர்மத்துக்கு பிழையானது. சிலர் சில பத்திரிகையாளர்களை தமது கைக்குள் வைத்துக்கொண்டு தவறான கருத்துகளை வெளியிட முனைவது பிழையாகும்.

ஊடகவியலாளர்கள் எப்பக்கமும் சாராது எப்போதும் நடு நிலைமையிலேயே எழுத வேண்டும். இந்தநாட்டின் பத்திரிகைச் சுதந்திரம் எக்காரணம் கொண்டும் இருட்டடிப்புச் செய்யப்படமாட்டாது. சிறுவர்களை நல்லொழுக்கத்துடனும் கலாசாரப் பண்புகளுடனும் வளர்த்தெடுக்கவும் இவ்வாறான புத்தகங்கள் மென்மேலும் படைக்கப்பட வேண்டும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனையை இப்போது மக்கள் அனைவரும் ஏற்றுள்ளனர். மேலும் இச் சிந்தனையின் மூலம் சகல வேலைத்திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படுவதையும் காணக் கூடியதாகவுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *