விடுதலைப் புலிகளின் யுத்த நிறுத்த அறிவிப்பிற்கு இலங்கை அரசாங்கம் பதில் யுத்த நிறுத்தத்தை மேற்கொள்ளாவிடின் இன்னும் ஓரிரு தினங்களில் அங்கு குருதிப்பெருக்கு ஏற்படும் என கனேடிய தமிழர்கள் அஞ்சுவதாகத் தெரிவித்த கனேடிய தமிழ் காங்கிரஸ் இது தொடர்பாக அந்நாட்டுப் பிரதமர் ஸ்டீபன் ஹர்பருக்கும் கடிதமொன்றை அனுப்பியுள்ளது. புலிகளின் யுத்த நிறுத்த அறிவிப்பை ஏற்கும்படி இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தும் வகையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை ரொறொன்டோவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனேடியன் தமிழ் காங்கிரஸால் அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பாக அதன் தலைவர் ஸ்ரீ ரஞ்சன் தெரிவிக்கையில்; புலிகளின் யுத்த நிறுத்தத்தை உடனடியாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென இலங்கை அரசாங்கத்தை கனடா வலியுறுத்த வேண்டும். அரசியல் உறவு மற்றும் பொருளாதார உறவுகளை துண்டிப்பதன் மூலம் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க முடியும்.
மேலும் கனடா அரசாங்கத்தை, இலங்கைப் பிரச்சினையில் தலையிடும் படி வலியுறுத்தும் படி கனேடிய பாராளுமன்ற உறுப்பினர்களும் வலியுறுத்த வேண்டும். கொழும்பை அரசியல் பொருளாதார ரீதியில் தனிமைப்படுத்துவதன் மூலம் அரசியல் தீர்வுக்கு அதனை இட்டுச்செல்ல வேண்டும். இதுவே தமிழ் மக்களின் விருப்பு என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கைகளின் படி பாதுகாப்பு வலயத்தில் 6500 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவித்த கனேடியத் தமிழர் காங்கிரஸின் பேச்சாளர் டேவிட் பூபாலப்பிள்ளை மேலும் தெரிவிக்கையில்; உலகின் வல்லமை மிக்க அமைப்புகளான ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய யூனியன், ஜி8 என்பனவும் ஏனைய அரசாங்கங்களும் அறிக்கைகளை வெளியிட்டனவே தவிர வேறு எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை . இவை அனைத்தும் இலங்கைத் தமிழரைப் பாதுகாப்பதில் தோல்வியடைந்துள்ளன.
கனடா, இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, ஐ.நா, ஜி8 மற்றும் மேற்கத்திய அரசாங்கங்களின் அறிக்கைக்கு செவிமெடுத்த விடுதலைப்புலிகள் ஒருதலைப்பட்ச யுத்த நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இப்பொழுது பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்களை பாதுகாப்பது அரசாங்கத்தின் முடிவிலேயே தங்கியுள்ளது.