“1956 ஆம் ஆண்டின் பண்டாரநாயக்கவின் புரட்சிகரமான அரசாங்கத்தை நிறுவுவதற்கு உந்து சக்தியாக இருந்தவர்களும் கிராமிய மண்வாசனையை கொண்டவர்களும் ராஜபக்ஷாக்களே’என்று அம்பாந்தோட்டை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் பெலியத்தை தேர்தல் தொகுதியின் ஸ்ரீலங்கா சு.கட்சியின் புதிய அமைப்பாளருமான நிருபமா ராஜபக்ஷ தெரிவித்தார்.
சிட்டினா மதுறு என்ற இடத்தில் வீட்டுக்கு வீடு தனது புதிய அமைப்பு வேலைகள் தொடர்பான பிரசார நடவடிக்கையின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். நிருபமா ராஜபக்ஷ மேலும் தெரிவித்ததாவது;
“மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டின் ஜனாதிபதி பதவியை ஏற்றபோது சில நகரவாசிகளுக்கும் சில நகரசபை உறுப்பினர்களுக்கும் பெரும் அச்சம் ஏற்பட்டது. காரணம், 56 புரட்சிகரமான அரசியல் ஏடு புரட்டப்பட்டதும் கிராமப்புறவாசிகளே சகல துறைகளிலும் முன்னுரிமை பெறுவார்கள். ராஜபக்ஷாக்கள் அவர்களுக்கு உதவி புரிவார்கள் என்ற எண்ணமே நகர வாசிகளின் அச்சப்பாட்டுக்குக் காரணியாக அமைந்தது.
நாட்டின் அரசியலில் பாராளுமன்றத்திற்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழுபேர் சென்றது ராஜபக்ஷ குடும்பத்திலேயே உள்ளது. நாம் என்றும் கிராமவாசிகளின் இன்பதுன்பங்களில் பங்கேற்ற வண்ணமே இருக்கின்றோம். இதனால் தான் கிராம மக்களின் ஆதரவு எமக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
எனது தந்தை ஜோர்ஜ் ராஜபக்ஷ முதலாவது மீன்பிடி அமைச்சராக இருந்து மக்களுக்கு விசேடமாகக் கடற்றொழிலாளருக்குச் சேவை செய்ததோடு, சுகாதார அமைச்சராக இருந்தும் பெரும் பணிகளைச் செய்தார். அதேபோல் என் அண்ணாவான மஹிந்தராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்து இன, மதபேதம் பாராது முழு நாட்டுக்கும் பணிசெய்கிறார். வடக்கையும் கிழக்கையும் மீட்டெடுத்து வரும் அவரது பணியை யாரும் மறப்பதற்கில்லை’ என்றார்.