![]()
இடம்பெயர்ந்தோரின் நலன்கள் தொடர்பான நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தலைமை அதிகாரியாக இராணுவ உயர்மட்ட அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி அவசரகாலச் சட்டத்தின் கீழ் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரது மேற்பார்வையின் கீழேயே இடம்பெயர்ந்தோர் தொடர்பான சகல நடவடிக்கைகளும் இனிமேல் மேற்கொள்ளப்படும். இடம்பெயர்ந்தோர் நலன் தொடர்பான நடவடிக்கைளை மேற்கொள்ளும் இணைப்பாளராக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதவிர நிவாரணப் பணிகளை மேலும் இலகுபடுத்தும் நோக்கில் கண்டி, அநுராதபுரம் மற்றும் பொலன்நறுவை ஆகிய மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களும் இணைப்பாளர்காளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி கண்டி மாவட்ட அரசாங்க அதிபர் கோத்தாபய ஜயரத்ன முகாம்கள் அமைத்தல் மற்றும் தங்குமிட வசதிகளை வழங்குதல் என்பவற்றுக்குப் பொறுப்பாகவும், பொலன்நறுவை மாவட்ட அரசாங்க அதிபர் டீ.ஏ. லால் விமல் உணவு, சுகாதாரம் மற்றும் பொதுவசதிகள் என்பவற்றுக்கும் அநுராதபுர மாவட்ட அரசாங்க அதிபர் எச்.எம்.கே. ஹேரத் நீர்விநியோகம், மின்சாரம் மற்றும் ஏனைய அடிப்படை வசதிகள் என்பவற்றுக்கும் பொறுப்பாளர்காளக நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.