ஜெயலலிதாவே, என்னையா வரலாறு மன்னிக்காது – எம்.ஜி.ஆர்., ஈழ விசயத்தில் உம்மைத்தான் வரலாறு மன்னிக்காது: கலைஞர்

20-karunanithi.jpgஇலங்கை பிரச்சனை பற்றியும், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பற்றியும் முதலமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் …..
 
’’இலங்கைத் தமிழர்கள் மீது சிங்கள ராணுவம் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல் குறித்து அங்கே உடனடியாக நிரந்தரப் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டுமென்று இந்திய அரசை வலியுறுத்தி தந்திக்கு மேல் தந்தி கொடுத்தும்- கடிதங்கள் எழுதியும் – அறிக்கைகள் கொடுத்தும் கடந்த 3 நாட்களாக நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், இலங்கையிலே போர் நிறுத்தம் நிரந்தரமாக ஏற்படவும், அதற்கு ஆவன செய்யும்படி மத்திய அரசை வலியுறுத்திடவும் நாளைய தினம் (23.4.2009) அன்று ஒருநாள் வேலை நிறுத்தம் செய்ய வேண்டுமென்று வேண்டுகோள் அறிக்கையினை நேற்றிரவு விடுத்ததோடு, இன்றைய தினம் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும், நாளேடுகளுக்கும், தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும், திரைப் படத்துறையினருக்கும் நேற்று நான் கொடுத்த அறிக்கையின் நகலை இணைத்து இந்த வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளேன்.
 
அந்த வேண்டுகோள் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கும், அவருடைய தோழமைக் கட்சிகளுக்கும், அவருடைய தொலைக்காட்சி நிறுவனத்திற்கும், அவரது பத்திரிகைக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
 
அந்தக் கடிதத்திலே நானே கையெழுத்திட்டு கட்சி சார்பின்றி அந்த வேலை நிறுத்தத்திற்கு தமிழர் உயிரைக் காப்பாற்றுவதற்காக வேலை நிறுத்தம் செய்திடலாம் என்று கேட்டுக் கொண்டுள்ளேன். ஆனால் இவ்வளவிற்கும் பிறகும் ஜெயலலிதா இன்று அவசர அவசரமாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த வேலை நிறுத்தம் என்பது கபட நாடகம் என்றும், வரலாறு என்னை மன்னிக்காது என்றும் தெரிவித்திருக்கிறார்.
 
* இலங்கைத் தமிழர்களுக்காக 1956 முதல் 50 ஆண்டு காலத்திற்கு மேலாக குரல் கொடுத்து வருகிற என்னை வரலாறு மன்னிக்குமா? என்று கேட்கிற ஜெயலலிதாவே, இலங்கையில் இப்போது ராஜபக்சே நடத்தும் யுத்தம் தமிழர்களை எதிர்த்து அல்ல, விடுதலைப்புலிகளைத் தான் என்று அபாண்டமாக பொய் சொன்னீரே, உம்மை வரலாறு மன்னிக்கும் என்று கனவு காண்கிறீரா?
 
* ஒரு போர் என்றால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம் தான். அது போல் தான் இலங்கையிலே அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்படுகிறார்கள். இதில் என்ன குற்றம் என்று கேட்டீரே, உம்மை மாத்திரம் வரலாறு மன்னித்து விடும் என்று மனப்பால் குடிக்கிறீரா?
 
* பிரபாகரனை கைது செய்து, இந்தியாவிற்குக் கொண்டு வரவேண்டு மென்று தமிழக சட்டமன்றத்திலே தீர்மானத்தை முன் மொழிந்தீரே, அப்போது உம்மை வரலாறு மன்னித்து விடும் என்று தானே எண்ணிக் கொண்டு செயல்பட்டீர்.
 
* அனைத்து கட்சிகளும் சேர்ந்து அரசின் சார்பில் இலங்கைப் பிரச்சினைக்காக சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொள்ள மறுத்தீரே, உம்மை வரலாறு என்ன வாழ்த்திக் கொண்டா இருக்கின்றது?
 
* உம்மையும் வைகோவையும் தவிர மற்ற அனைத்துக் கட்சித் தலைவர்களும் அடாது பெய்த மழையில் விடாது மனித சங்கிலி நடத்தினார்களே, அதை கபட நாடகம் என்று கூறினீரே, அந்த எட்டப்ப துரோகத்தை எப்படி அம்மா வரலாறு மன்னிக்கப் போகிறது?
 
* தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சித் தலைவரும் இலங்கைப் பிரச்சினைக்காக டெல்லி சென்று போர் நிறுத்தக் கோரிக்கை வைத்த போது, அவர்களோடு போக மறுத்தீரே, அதற்காக உம்மை வரலாறு மன்னிக்கப் போகிறதா?
 
* எம்.ஜி.ஆருக்கு நீர் செய்த துரோகங்களை வரலாறு மன்னித்தாலும் மன்னிக்கும். இலங்கைத் தமிழர்களுக்காக நீர் அடுக்கடுக்காக செய்து வரும் துரோகங்களை எந்தக் காலத்திலும் வரலாறு மன்னிக்காது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்க என்று குறிப்பிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • Kusumpan
    Kusumpan

    எல்லாம் முடிந்தபின்பு போர்நிறுத்தம் தானாகவரும். நீங்கள் தந்தியும் குடுக்கத் தேவையில்லை கடிதம் போடவேண்டிய அவசியமும் இல்லை. ஈழத்தமிழர் முறுவத் அழிந்தாலும் போர்நிறுத்தம் தானே.

    Reply
  • தி மு க தொண்டன்
    தி மு க தொண்டன்

    /ஜெயலலிதாவே, இலங்கையில் இப்போது ராஜபக்சே நடத்தும் யுத்தம் தமிழர்களை எதிர்த்து அல்ல, விடுதலைப்புலிகளைத் தான் என்று அபாண்டமாக பொய் சொன்னீரே, உம்மை வரலாறு மன்னிக்கும் என்று கனவு காண்கிறீரா?/- கலைஞர் கருணாநிதி.— “விடுதலைப் புலிகளை எதிர்த்துதான்” என்று எல்லோருக்கும் தெரியுமே!-அப்படிதானே இலங்கை அரசாங்கம்(ஒரு வெளிநாடு)உத்தியோகப் பூர்வமாக சொல்கிறது!-அதைத்தானே ஜெயலலிதாவும் சொல்கிறார்! -நீர் ஏன் புலம்புகிறீர்!. இதில் உங்களால் எதுவும் செய்ய முடியாது???, அவராலும் முடியாது என்றுதான் சொல்கிறார்!- இதை ஒத்துக் கொள்ள வேண்டியதுதானே!!. இப்போது இருக்கும் “உணர்ச்சி மயங்களை” திசைத் திருப்பும் “ஓட்டுனர் ஆசனத்தில்” “புலம்பெயர்ந்தவர்கள்” அமர்ந்திருக்கின்றனர் அவர்கள் சரியில்லை!, இனப்பிரச்சனையை அணுகுவதற்கு பதில், கண்டபடி உளருகின்றனர்!,–அதற்கு நீங்கள் இறையாகின்றீர்களா??, அல்லது “இதைதான் நீங்கள் விரும்புகின்றீர்களா??” -எங்களுக்கு பிரச்னை இல்லை ரத்தக் களரியுடன் கூடிய அடிபாட்டுக்கு நாங்கள் தயாராகவே இருக்கின்றோம்!!. தெளிவாக தெரிந்த விஷயத்தில், நீங்கள் ஏன் குழப்புகிறீர்கள்?? (அனுபவம் உள்ளவர் பொய் சொன்னால் உண்மையாகிவிடும் என்று குடும்ப இலாபத்திற்காக அனுபவத்தை விற்கிறீர்களா??)-நமக்கு தெரிந்த வகையில்,”கொன்றவன் ஆயிற்று செத்தவன் ஆயிற்று”-நம்மால் என்ன செய்ய முடியும்?-அல்லது “முரசொலி மாறனுடன், கட்சியினருக்கு தெரியாமல் குசு,குசு வென்று இலங்கைப் பிரச்சனைப் பற்றி பேசுவீர்களே அப்போது ஏதாவது தவறிழைத்து விட்டீர்களா??”-மடியில் கனமிருந்தால்தானே வழியில் பயமிருக்கும்??.

    Reply
  • accu
    accu

    அச்சச்சோ இவங்கட ஆய்க்கினை தாங்கமுடியல. இந்தத் தேர்தலை இலங்கையில் பிரச்சனை முடிந்தபின் வைத்திருக்கலாம்.

    Reply