தமிழர்களுக்கு ஏன் பொது வேட்பாளர் தேவை..? – சிவஞானம் சிறீதரன் விளக்கம் !

தமிழர் ஒருவர் ஜனாதிபதியாக அல்ல துணை ஜனாதிபதியாக கூட தெரிவுசெய்யப்பட முடியாதென்பதை அறிந்துதான் அனைவரும் செயற்படுவதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் தேசிய பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இங்கு பொது வேட்பாளர் யார் என்பது முக்கியமல்ல.

வடக்கிலும் கிழக்கிலும் வாழுகின்ற தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாஷைகள் இந்த பொது வேட்பாளர் மூலம் உலகறியச் செய்யப்பட வேண்டும். தமிழர்கள் தங்களது பாரம்பரிய பூமியில் இறைமையோடு வாழ்ந்தவர்கள் அத்தோடு அவர்களுக்கு அவர்களது இறைமையை மீட்டுக்கொடுக்கும் வகையிலான சமஷ்டித் தீர்வினை இந்த பொது வேட்பாளர் முன்வைப்பார்.

தமிழர்களின் அரசியல் தீர்வுக்கான ஒருகளமாக நாங்கள் இந்த ஜனாதிபதி  தேர்தலில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி அவருக்கான ஆதரவைக் கேட்போம்.

எங்கள் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான ஒரு சர்வஜன வாக்கெடுப்பாகவே பொது வேட்பாளர் களமிறக்கப்படுவதைத் தமிழர்கள் பார்க்கின்றார்கள். தமிழர் ஒருவர் ஜனாதிபதியாக அல்ல துணை ஜனாதிபதியாக கூட தெரிவுசெய்யப்பட முடியாதென்பதை அறிந்தேதான் எல்லோரும் செயற்படுகின்றார்கள்.

இங்கு முக்கியமானது தமிழர்கள் தங்களது அபிலாஷைகளுக்கான அங்கீகாரத்தை இந்த பொது வேட்பாளர் மூலம் கோருகின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *