அம்பலவன் பொக்கணை பகுதியில் செவ்வாய்கிழமை குண்டு தாக்குதல்கள் நடந்தவண்ணம் இருக்கின்றன என்றும், தாக்குதலில் காயமடைந்த பொதுமக்கள் அங்கு இன்னும் இயங்கிக்கொண்டிருக்கும் வலைஞர்மடம் மற்றும் முள்ளிவாய்க்கால் மருத்துவமனைகளை அணுகிக்கொண்டிருக்கிறார்கள் என்று அரச மருத்துவர் டாக்டர் சத்யமூர்த்தி தமிழோசையிடம் தெரிவித்தார்.
இந்த தாக்குதல்களில் சிவ மனோகரன் என்ற ஒரு இறுதியாண்டு மருத்துவ மாணவர் கொல்லப்பட்டார் என்றும் அவர் கூறினார்.
பொதுமக்கள் அரச பகுதிகளுக்கு இடம்மாறுவது குறித்த செய்திகள் பற்றி, கருத்துவெளியிட்ட அவர், தாம் இது குறித்து வரும் செய்திகளைக் கேள்விப்படுவதாகவும் ஆனாலும் எண்ணிக்கை குறித்து தம்மால் உறுதிப்படுத்த முடியாமல் இருப்பதாகவும் அவர் கூறினார்.
விடுதலைப்புலிகள் தப்பியோடும் பொதுமக்களை சுடுவதாக அரச தரப்பு வெளியிட்டுள்ள படங்கள் குறித்தும் தம்மால் உறுதிப்படுத்த முடியாமல் இருப்பதாக அவர் கூறினார். தமது பகுதிக்கு வரும் மக்களில் பலர் ஷெல் காயங்களுடனும் சிலர் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடனும் வருவதாக அவர் கூறினார்.