இளைஞன் ஒருவருக்கு விதைப்பை ஒன்றை இழக்கச் செய்த சம்பவம் தொடர்பிலான வழக்கு இன்று (16) மதவாச்சி நீதவான் நீதிமன்றில் பரிசீலிக்கப்பட்டது.
இதன்போது, இந்த வழக்கை எதிர்வரும் 24ஆம் திகதி மீளப் பரிசீலிக்குமாறும், சந்தேகநபர்களை அன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறும் மதவாச்சி நீதவான் இமேஷா மதுபானி தர்மதாச உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பான அனைத்து விசாரணைகளையும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அனுப்புமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 7ஆம் திகதி மதவாச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதவாச்சி பொலிஸின் இரு உத்தியோகத்தர்களின் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த இளைஞன் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சத்திரசிகிச்சை மூலம் அவரது ஒரு விதைப்பை அகற்றப்பட்டதாக கூறப்பட்டது.
தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் இன்று (16) மதவாச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இந்த வழக்கில் சுயாதீன கண்காணிப்புக் குழுவாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஆஜராகியிருந்ததமை குறிப்பிடத்தக்கது.