“இனவாதமற்ற தேசிய ஒருமைப்பாடுக்காக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்.” – யாழில் அனுரகுமார திஸ்ஸநாயக்க !

இனவாதமற்ற தேசிய ஒருமைப்பாடுக்காக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் எனவும் இலங்கையில் தமிழ் மற்றும் சிங்களம் தொடர்பில் காணப்படும் பிளவுகள் ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டதாகவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம்(04) நடைபெற்ற ஆசிரியர் சேவை சங்கத்தின் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

 

அத்தோடு, இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக கூறி மக்களுடன் ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்காக தான் யாழ்ப்பாணத்துக்கு பயணத்தை மேற்கொள்ளவில்லை, எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

“ஆட்சியாளர்கள் நம்மை வேறு பிரிக்கும் அரசியலிலேயே தொடர்ந்தும் ஈடுபடுகிறார்கள், அரசியல் நலனுக்கான இனவாத அரசியலே அவர்களது முதன்மையான நோக்கமாக இருந்தது.

எமது மூதாதையர்கள் காலம் தொடங்கி அனைத்து ஆட்சியாளர்கள் இனவாதத்தை மக்கள் மனதில் விதைத்தார்கள்.இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் யுத்தத்தை எதிர்நோக்க வேண்டியிருந்தது.

 

இதனால் பாரியளவில் பாதிக்கப்பட்ட மக்களாக வடக்கு மக்கள் இருக்கிறார்கள். இன்றும் அவர்களில் போராட்டத்துக்கு நீதி கிடைக்கவில்லை. எனினும், எமது தலைமுறையினர் இவ்வாறு இருக்க கூடாது. எமது கட்சி எதிர்கால சந்ததியனரை மாற்றியமைக்கும். அவர்களின் சிந்தனைகளை மாற்றும்.

எதிர்கால சந்ததியினருக்கான சரியான பாதையை நாம் உருவாக்குவோம். எமக்கு இனவாத அரசியல் தேவையா? எமது சந்ததியினர் எதிர்நோக்கிய யுத்தத்தை எதிர்கால சந்ததியினர் எதிர்நோக்க வேண்டுமா?

 

இவ்வாறான பேதங்களும் போரும் அற்ற புதிய நாடு புதிய ஆட்சி உருவாக வேண்டும். இதுவே எமது நோக்கம். தேசிய மக்கள் சக்தியின் நோக்கம். இனவாதமற்ற தேசிய ஒருமைப்பாடுக்காக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *