அக்மீமனை, கோணமுல்ல பகுதியில், இரு சிறுவர்களை கொலை செய்ததாகக் கருதப்படும் சந்தேக நபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியாகியுள்ளார். பொலிஸார் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்த முயற்சித்த போதே பொலிஸார் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது;
குறித்த நபர், ஐராங்கனி (வயது 10) என்ற சிறுமியையும், கவின் ரஷ்மிக் (வயது 3) என்ற சிறுவனை கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். இவரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட வேளையில், அச்சிறுவர்களை கொலை செய்வதற்காக உபயோகித்த ஆயுதங்களை மறைத்து வைத்திருப்பதாகக் கூறி அதனை காட்டுவதற்காகக் காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அக்காட்டுப்பகுதியில் மறைத்து வைத்திருந்த கைக்குண்டைத் திடீரென எடுத்து பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்துள்ளார். இதனையடுத்து, பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமுற்ற சந்தேக நபரை காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காது உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, அக்மீமனைக் காட்டினுள் இருந்து மற்றுமொரு சடலம் மீட்கப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணைகளை தென்பிராந்திய பொலிஸ் மா அதிபர் டி.டபிள்யூ. பிரதாப சிங்ஹ மேற்கொண்டு வருகிறார்.