மலையகம்

மலையகம்

“பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கு முதலாளிமார் சம்மேளனம் இன்னும் இணக்கம் தெரிவிக்கவில்லை” – அமைச்சர் ரமேஷ் பத்திரன

“பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கு முதலாளிமார் சம்மேளனம் இன்னும் இணக்கம் தெரிவிக்கவில்லை” என பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

எனினும், சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சியில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தீவிரமாக ஈடுபட்டுவருகின்றார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“பெருந்தோட்டக் கம்பனிகளுடன் இவ்விவகாரம் தொடர்பில் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. எனினும் தீர்வு எட்டப்படவில்லை. இம்மாதத்துக்குள் முடிவொன்றை எடுப்பதற்கு எதிர்ப்பார்க்கின்றோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஜனவரி முதலாம் திகதி முதல் ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொடுக்கப்படுமென்ற உறுதிமொழியை அரசாங்கம் வழங்கியிருந்தது.

தமக்கு அடிப்படை நாட் சம்பளமாகவே ஆயிரம் ரூபாய் வேண்டுமென தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுபற்றி அரச தரப்பில் இருந்தோ அல்லது கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்க தரப்புகளிலிருந்தோ இன்னும் உரிய விளக்கம் வழங்கப்படவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அமைதியான சூழலை காண விஜயம் செய்யுங்கள்! : பிரபா கணேசன்

Praba_Ganesan_MPலண்டனில் (26-10-2010) நடைபெற்ற இந்திய வம்சாவளி மக்கள் மகாசபையின் (கோபியோ) சர்வதேசமாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் ஆற்றிய உரையின் சுருக்கம்.

லண்டனில் நடைபெறும் கோபியோ வருடாந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள எனக்கு அழைப்பு விடுத்த மேதகு பிரபு டில்ஜித் ரானா அவர்களுக்கு முதற்கண் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இம் மாநாடு புதிய சர்வதேச பொருளாதார ஒழுங்கும் வெளிநாட்டு இந்தியர்களும் என்ற விடயம் பற்றியும், வெளிநாட்டு இந்தியப் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் கலந்துரையாட உள்ளது. இவ்விரண்டு விடயங்களும் வெளிநாட்டு இந்தியர்களுக்கு மட்டுமன்றி முழு மனித இனத்துக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததொன்று என நான் கருதுகின்றேன்.

வளர்முக நாடு களுக்கும் செல்வந்த நாடுகளுக்கும் இடையே காணப்படும் பெரியள விலான இடைவெளியை அகற்றும் நோக்குடனேயே புதிய பொருளாதார கொள்கைகள் முன்வைக்கப்பட்டன. இக்கொள்கையானது நாடுகளின் இறைமை, சமத்துவம், சர்வதேச நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு என்பவற்றை அதிகளவில் வலியு றுத்தியது.

இதனால் உலகில் காணப்படும் ஏற்றத் தாழ்வுகள் ஒழித்துக்கட்டப்பட்டு யாவருக்கும் செல்வம் முறையாகப் பகிரப்படும். ஒட்டுமொத்த சர்வதேச சமூகமும் வளர்முக நாடுகளுக்கு தமது உதவிகளை வழங்க வேண்டும் என்பதும் இக் கட்டமைப்பின் பிரதான நோக்கமாகும்.

இலங்கை பாராளுமன்றத்தில், தலைநகரில் வாழும் தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதியாக நான் தெரிவு செய்யப்பட்டவன். இந்த மகாநாட்டில் அம்மக்கள் சார்பாக பங்கேற்கின்றேன்.

இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்தில் இலங்கை அரசும் இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமையையும் வாக்குரிமையையும் பறிக்கும் சட்டத்தைப் பாராளுமன்றம் நிறைவேற்றியது. ஏறத்தாழ ஒன்பது இலட்சம் இந்தியர்கள் ஓர் இரவில் நாடற்றவர்களாயினர். தொடர்ந்து வந்த காலப்பகுதியில் இந்திய அரசும் இலங்கை அரசும் செய்து கொண்ட ஒப்பந்தங்களின்படி ஏழு இலட்சம் பேர் இந்தியாவுக்குத் திரும்பிச் சென்றனர்.

இந்தியவம்சாவளி மக்களும் நீண்டகாலமாக நடாத்திய போராட்டங்கள், இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் என்பவற்றின் காரணமாக புதிய சட்டங்கள் இயற்றப்பட்டு அவர்களுக்கு குடியுரிமையும் வாக்குரிமையும் வழங்கப்பட்டது. ஆயினும் ஏறத்தாழ ஐந்து தசாப்த காலத்திற்கு அவர்கள் உரிமையற்றவர்களாக வாழ நேர்ந்ததை அவர்களுடைய சமூக தலைவர்கள் இலங்கை அரசாங்கங்களோடு இணைந்து தேசிய அபிவிருத்திப் பணியில் பங்குபற்றி ஒத்துழைத்ததன் காரணமாக இந்த நாட்டவர் பிரச்சினைக்கு தீர்வுகாண முடிந்தது.

அண்மைக் காலங்களில் இந்திய வம்சாவளி மலையக மக்கள் பாராளுமன்றம், மாகாண சபைகளுக்கு தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்து வருகின்றனர். இலங்கையின் பிரதான கட்சிகள் அரசாங்கம் அமைக்கும் போது இந்திய வம்சாவளி மக்களின் பிரதிநிதிகள் அதில் பிரதான பங்கினை வகித்தனர். நீண்டகாலப் பிரச்சினையாக இருந்த குடியுரிமைப் பிரச்சினை தீர்க்க்பபட்ட பின்னர் இந்திய வம்சாவளி மக்கள் இலங்கையின் பிரதான தேசிய நீரோட்டத்தில் இணைந்து கொள்ள முடிந்தது.

1980 களின் பின்னர் எமது மக்கள் சில துறைகளிலாவது மேம் பாடு கண்டுள்ளனர். காலஞ்சென்ற தலைவர் தொண்டமானின் தலைமைத்துவமும் வழிகாட்டலும் இதற்குக் காரண மாயிருந்தது. அவர் அப்போதிருந்த அரசாங் கத்திற்கு ஆதரவு வழங்கி அரசின் ஒத்துழைப்பைப் பெற்று தனது மக்களின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு துணைபுரிந்தார்.

பொதுவாகவே இந்திய வம்சாவளி மலையகத் தலைவர்கள் ஐக்கிய இலங்கையை ஏற்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு தமது ஆதரவை வழங்கி வந் துள்ளனர். பாராளுமன்ற உறுப் பினர்களாக இருந்த அமரர்களான செளமியமூர்த்தி தொண்டமான், பெ. சந்திரசேகரன் அமைச்சர்களாக பணியாற்றினார்கள். தொடர்ந்து தற்போதைய அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இத்தகைய முறை யில் அமைச்சராகப் பணியாற்றி வருகின்றார்.

இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்கள் மத்தியில் நிறுவன ரீதியாக ஏற்பட்ட சில முன்னேற்றங்களை குறிப்பிட வேண்டும். இலங்கைவாழ் இந்திய வம்சாவளி மலையக மக்களுக்கென இரு ஆசிரிய பயிற்சிக் கல்லூரிகளும் ஒரு தொழில்நுட்ப கல்லூரியும் நிறுவப்பட்டுள்ளன. ஜெர்மனி, சுவீடன், நோர்வே போன்ற நாடுகளின் உதவியுடன் கல்வித்துறையில் முன்னேற்றம் காணப்பட்டு வருகிறது.

ஆரம்பக் கல்வி நிலையில் மாணவர்களின் சேர்வு வீதம் திருப்திகரமாகவுள்ளது. மக்களின் எழுத்தறிவு வீதங்களும் அதிகரித்து வருகின்றது. பெருந்தோட்ட மாவட்டங்களில் 600 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் எமது சமூகத்துக்கு கல்விச் சேவையாற்றி வருகின்றன. அண்மைக் காலங்களில் 10,000 ஆசிரியர்கள் வரை எமது சமூகத் திலிருந்து ஆசிரியர்களாக தெரிவாகி பணியாற்றி வருகின்றனர்.

மற்றொரு பிரதான முன்னேற்றம் அண்மைக்காலங்களில் இம்மக்கள் தமக்கென ஒரு பல்கலைக்கழகம் உருவாக்கப்படல் வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ளமையாகும். அறிவு சார்ந்த சமூகத்தில் தாமும் ஒரு அறிவார்ந்த சமூகமாக ஏற்றங்காண வேண்டும் என்ற உணர்வுகள் இந்தக் கோரி க்கையில் பொதிந்து காணப்படுவதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இந்திய வம்சாவளி மலையகச் சமூகத்தைச் சேர்ந்த அறிஞர்களான பேராசிரியர் சோ. சந்திரசேகரன், பேராசிரியர் எம். சின்னத்தம்பி, பேராசிரியர் எஸ். எஸ். மூக்கையா, கல்வியாளர் தை. தனராஜ், கலாநிதி எஸ். சந்திரபோஸ் ஆகியோர் இப் பல்கலைக்கழகத்திற்கான கருத்தாக்கச் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்திய அரசாங்கம் மலையக ஆசிரியர்களின் தொழிற் தகைமைகளை மேம்படுத்தும் முயற் சியில் செயற்பட்டு வருவதும் ஒரு குறிப்பிடத்தக்க விடயமாகும். ஆங்கில ஆசிரியர்களுக்கு இந்திய அரசாங்கத்தின் ஏற்பாட்டில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

அண்மைக்காலங்களில் இந்திய அரசு, ஆயிரக்கணக்கான இலங்கை வாழ் இந்திய வம்சாவளிகளுக்கு வெளிநாட்டு இந்திய பிரஜை என்ற அந்தஸ்தை வழங்கி வருகின்றது. இந்த நடவடிக் கையானது எமது சமூ கத்திற்கும் அவர்களுடைய பூர்வீகமான இந்திய கிராமங்களுடன் தொடர்புகளை வலுப்படுத்த உதவியுள்ளது.

இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்கள் இந்தியாவில் தொழில் முயற்சிகளைத் தொடங்கவும் இலங்கை இந்தியத் தொடர்புகளை மேம்படுத்தவும் உதவியுள்ளது. ஆரம்பக் காலத்தில் லலிதா கந்தசாமி- எஸ். கார்மேகம் உட்பட பலர் இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அவர்களுக்கும் இந்திய அரசாங்கத் திற்கும் நன்றியைக் கூற நான் விரும்புகின்றேன்.

இலங்கையில் கோபியோ இந்திய வம்சாவளி மக்களின் சகல தரப்பினரதும் ஏகோபித்த அங்கீகாரத்தையும் நல்லெண்ணத்தையும் பெற்றுக் கொண்டுள்ளது. இலங்கையிலுள்ள பல இன சூழலுக்கேற்ப அணுகு முறைகளை கையாண்டு பல்வேறு சமூகங்களுக்கிடையே நல்லெண்ணத்தை வளர்க்க உதவியுள்ளது. சர்வதேச கோபியோ அமைப்பு ஏனைய நாடுகளில் இயங்கும் கோபியோ அமைப்புகளுடன் இணைந்து பரஸ்பரம் செயலாற்றி வருகின்றது.

சில காலத்திற்கு முன்னர் எமது கலாசார மரபுகளை இனங்கண்டு கொள்ள ஒரு கலாசார மரபுரிமை கிராமத்தை ஏற்படுத்தும் எண்ணக் கருவை இலங்கை பத்திரிகைத்துறைத் தலைவர் குமார் நடேசன் முன்வைத்தார். முன்னாள் அமைச்சர் அமரர் பெ. சந்திரசேகரன் இச் செயற்றிட் டத்திற்கு பெரிதும் உதவினார். இலங்கைவாழ் இந்திய வம்சாவளி மலையக மக்களின் ஒருங்கிணைந்த ஒற்றுமையை ஏற்படுத்த இந்தச் செயற்றிட்டம் உதவும் என நான் எதிர்பார்க்கிறேன்.

இந்திய அரசானது பல சந் தர்ப்பங்களில் இலங்கையில் வாழும் பதினான்கு லட்சம் இந்திய வம்சாவளி மலையக மக்களை இலங்கைத் தமிழர்க ளுடன் இணைத்துப் பார்த்து இரு சாராரையும் ஒன்றாகக் கணிக்க முற்பட்டுள்ளது. இந்தத் தவறான அணுகுமுறையைப் பற்றி பலமுஆறை இந்திய அரசிடம் நாம் சுட்டிக் காட்டி யுள்ளோம். இலங்கைத் தமிழர்க ளின் உரிமைப் போராட்டங்களை பெரிதும் மதிக்கின்ற அதே வேளை எமது தனித்துவத்தை இந்திய அரசு அங்கீகரிக்க வேண்டும் என்று கோருகின்றோம். இலங்கை அரசு எமது தனி அடையாளத்தை ஏற்றுள்ளது.

இலங்கை வாழ் இந்தியவம்சாவளி மலையக மக்களின் மேம்பாட்டுக்கு உழைத்த பல இந்திய தலைவர்களை இவ்விடத்தில் நினைவுகூர விரும்புகின்றேன். கே. ராஜலிங்கம், செள. தொண்டமான், எம். ஏ. அkஸ் என்னுடைய தந்தை வி. பி. கணேசன், வெள்ளையன், சி. வி. வேலுப்பிள்ளை, எஸ். நடேசன், பெ. சந்திரசேகரன், இரா சிவலிங்கம் ஆகியோர் இவ்விடத்தில் குறிப் பிடத்தக்கவர்கள்.

அண்மையில் முடிவடைந்த போரின் பின் எமது நாடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் ஆசியாவின் அதிசிறந்த நாடாக உருவாகி வருகின்றது. தற்போது உருவாகியுள்ள அமைதிச் சூழலை பயன்படுத்தி நாட்டின் சகல இன மக்களும் மேம்பாடடையக் கூடிய ஒரு கொள்கைத் திட்டத்தை முன்வைத்து ஜனாதிபதி செயற்பட்டு வருகிறார்.

யுத்தத்தினால் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் மற்றும் யுத்தத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் மறுவாழ்வு அளிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். கிழக்கு மாகாணத்தில் தேர்தல்களை நடாத்தி ஜனநாயகத்தை நிலை நாட்டியுள்ளார். வட மாகாணத்திலும் விரைவில் தேர்தலை நடாத்தி தமிழ் தலைவர்கள் தலைமையில் ஒரு புதிய மாகாண அரசினை அரசாங்கம் ஏற்படுத்தவுள்ளது.

கடந்த பல தசாப்தங்களாக பல சொல்லொண்ணாத் துயரங்களையும், இடர்களையும் சந்தித்த இந்திய வம்சாவளி மலையக மக்கள் தற்போது அமைதியான வாழ்க்கையை நடாத்துகின்றனர்.

இலங்கையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இலங்கையின் முதலீட்டுச் சபையானது அவர்களுக்கு கவர்ச்சிகரமான முதலீட்டுத் திட்டமொன்றை வகுத்துள்ளது என்பதை இங்கு வந்துள்ள பேராளர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றேன். இலங்கையில் நிலவும் அமைதியான சூழலைக் கண்டுகொள்ள உங்கள் அனைவரையும் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு நான் அன்புடன் அழைப்பு விடுக் கின்றேன்.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஒன்பதாம் திகதி புதுடில்லியில் நடைபெறவுள்ள பிரவாசி பாரதிய திவாஷ் விழாவில் மீண்டும் உங்களைச் சந்திக்க முடியுமென நம்புகின்றேன். இந்த மகாநாடு வெற்றியடைய எனது வாழ்த்துக்கள். உலகெங்கும் வாழும் இந்திய வம்சாவளியினரின் எதிர்கால மேம்பாட்டுக்கான சிறந்த சிந்தனைகளும், கருத்துக்களும் இந்த மகாநாட்டில் பரிமாறிக்கொள்ளப்படும் என்பதே எனது நம்பிக்கை.

மன்னார் மாவட்டத்தில் 13 ஆயிரம் ஏக்கரில் இம்முறை நெற் செய்கை

paddy.jpgவடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அதிக நிலப்பரப்பில் நெற் செய்கை மேற்கொள்ளப்படுவது எதிர்வரும் பெரும் போகத்தின் போதேயாகும், என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கு மக்களின் பொருளாதார, வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதற்காக உலக வங்கியிடம் இருந்து கிடைத்த 6500 மில்லியன் ரூபா நிதி விவசாயத்தை ஊக்குவிக்கவே பயன்படுத்தப்பட்டது. இதன்படி இப்போது மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் நெற் செய்கைக்கான காணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் மேற்படி 5 மாவட்டங்களிலும் சிறிய நீர்ப்பாசன வசதிகள் திருத்தப்பட் டுள்ளன. மன்னார் மாவட்டத்தின் 13 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு இம்முறை நெற் செய்கைக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளது. வவுனியாவில் 900 ஏக்கர் நெற் செய்கைக்கு தயார் நிலையில் உள்ளது.

அரசின் அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தில் மலையக மக்கள் சார்ந்த சரத்து முன்வைப்பு

அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள அரசியலமைப்பு திருத்தத்தில் மலையக மக்கள் சார்ந்த சரத்தொன்றையும் முன்வைப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மலையகத்திலுள்ள அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புகள் ஆகியவற்றின் கருத்துக்கள், ஆலோசனைகள் திரட்டப்பட்டு ஒரு பொதுவான கோவையாக கருத்துக்கள் இதில் முன்வைக்கப்படவுள்ளன. தேர்தல் மாற்றம், உள்ளூராட்சித் துறை சீர்த்திருத்தம் உள்ளிட்ட மலையக மக்கள் சார்ந்த முக்கிய பல விடயங்கள் இதில் உள்ளடக்கப்படுமென இதற்கென நியமிக்கப்பட்டுள்ள விதந்துரைக் குழுவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பி.பிடி. தேவராஜ் தெரிவித்தார்.

மேற்படி சகல அமைப்புகளுடனும் தனித்தனியாகக் கலந்துரையாடிய பின் அனைத்து அமைப்புக்களையும் ஒன்றாக கூட்டி அதனூடான பொதுக் கருத்தே அரசியலமைப்புக்கான சரத்தாக முன்வைக்கப்படுமென குறிப்பிட்ட அவர், அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இதற்கென கடந்த வாரங்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, மனோகணேசன் தலைமையிலான கட்சி, திகாம்பரம் எம்.பி. தலைமையிலான கட்சி மற்றும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்களுடனும் பேச்சு நடத்தியுள்ளதாகத் தெரிவித்த அவர், ஏனைய அமைப்புக்களுடனும் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.

சமுதாய ஆலோசனைக் குழு என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள மேற்படி குழுவில் முன்னாள் அமைச்சர் பி.பி. தேவராஜ் தலைவராகவும் தொழிலதிபர் தெ.ஈஸ்வரன், குமார் நடேசன் ஆகியோரும் அங்கத்தவர்களாக உள்ளனர்.

அரசியலமைப்பு திருத்தத்தில் தேர்தல் மாற்றம், உள்ளூராட்சித் துறை மாற்றம் உள்ளிட்ட மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சார்ந்த விடயங்களும் ஆலோசனைகளாக முன்வைக்கப் படவுள்ளன.

இது தொடர்பில் பல அரசியல் கட்சிகள், தொழிற் சங்கங்களின் ஆலோசனைகள் அறிக்கைகளாகக் கிடைக்கப்பெற்றுள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தோட்ட தொழிலாளர் மேலதிக வேலை செய்ய தேவையில்லை பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம்

விடுமுறை தினங்களில் ஒன்றரைநாள் சம்பளம் வழங்குவதால் அதற்காக தோட்டத் தொழிலாளர்கள் மேலதிக வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை. அவ்வாறு தோட்ட நிர்வாகம் நிர்பந்திக்குமானால் அதற்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென இ.தொ.கா. தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

இது தொடர்பில் தொழிற்சங்கக் கூட்டமைப்பு முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சு நடத்தி தொழிலாளர்களுக்கு நியாயம் கிட்ட வழிவகை செய்யுமெனவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.

போயா ஞாயிறு தினங்கள் உட்பட விடுமுறை தினங்களில் தோட்டத் தொழிலாளர்கள் வேலை செய்வார்களேயானால் அவர்களுக்கு ஒன்றரைச் சம்பளம் வழங்க வேண்டுமென்ற நடைமுறை காலங்காலமாக இருந்து வருகிறது. அத்துடன் தொழிற்சங்கக் கூட்டமைப்பு மற்றும் முதலாளிமார் சம்மேளத்துடனான கூட்டு ஒப்பந்தத்திலும் இவ்விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது. தோட்ட நிர்வாகங்கள் இதனை கவனத்திற்கொண்டு செயற்படுவது முக்கியம்.

எவ்வாறாயினும் விடுமுறை நாட்களில் வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களை, தாம் கூடிய சம்பளம் வழங்குவதால் மேலதிக வேலை செய்ய வேண்டுமென தோட்ட நிர்வாகங்கள் நிர்பந்தித்து வருகின்றன. இதன் மூலம் சில தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களை ஏமாற்றியும் வருகின்றன.

இது தொடர்பில் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்ட போதே பிரதியமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் ஊவா மாகாண சபை உறுப்பினருமான கே. வேலாயுதம் தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை ஒருபோதும் அனுமதிக்க முடியாது அது தொடர்பில் முதலாளிமார் சம்மேளத்துடன் பேச்சு நடத்தி தீர்வு காணப்படும். அதேவேளை தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பிலும் பேச் சுவார்த்தை நடத்தத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மலையக எல்லை மீள் நிர்ணயம்: யோசனைகளை 31ம் திகதிக்குள் சமர்ப்பிக்க இ. தொ. கா. முடிவு

up-country.jpgமலை யகத்தில் உள்ள பொதுநிர்வாக உள்ளூராட்சி மன்றங்களின் எல்லைகளை மீள் நிர்ணயம் செய்வது தொடர்பான ஆலோசனைகளை அரசாங்கத்திற்குச் சமர்ப்பிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைமையிலான மலையக அமைப்புகள் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

இதற்கமைய, நுவரெலியா மாவட்டத்தின் நிர்வாகக் கட்டமைப்புகளின் எல்லை மீள் நிர்ணயம் தொடர்பான ஆலோசனைகளை எதிர்வரும் 31ஆம் திகதி எல்லை மீள்நிர்ணய ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்போவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் – பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

இரத்தினபுரி, கண்டி, பதுளை, மாத்தளை ஆகிய மாவட்டங்கள் தொடர்பான ஆலோசனைகளைச் சமர்ப்பிப்பதற்கு ஒரு மாத காலம் அவகாசம் கோரவுள்ளதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார். மலையகத்தில் தமிழ் மக்கள் மிகச் செறிவாக வாழும் நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச சபை, மாகாண சபை, பாராளுமன்றம் ஆகியவற்றுக்குக் கணிசமான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. அதேபோன்று தான் இங்கு குறிப்பிட்ட ஏனைய மாவட்டங்களிலும்,

எவ்வாறாயினும், நுவரெலியா மாவட்டத்தில் தற்போது ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளே உள்ளன. இதனைப் பன்னிரண்டாக அதிகரிக்க வேண்டுமென இ. தொ. கா. தலைமையில் கூடி தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மலையக மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வாய்ப்புகளைத் தோற்றுவிக்க முடியும் என பிரதியமைச்சர் சிவலிங்கம் கூறினார். கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும், ஏனைய மாவட்டங்கள் தொடர்பில் ஒரு மாத காலத்தில் யோசனை வரைவு தயாரிக்கப்படுமென்றும் அவர் குறிப்பிட்டார். தேர்தல் தொகுதி, உள்ளூராட்சி மன்ற எல்லை ஆகியவற்றின் திருத்தங்களுடன் கூடிய அரசியலமைப்பு மாற்றத்தை எதிர்வரும் ஜுலை மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளமை தெரிந்ததே.

திடீர் அனர்த்த மாவட்டமாக நுவரெலியா பிரகடனம் – பிரதேச செயலர்கள், கிராமசேவர்களின் விடுமுறைகள் அனைத்தும் ரத்து

fo.jpgமலைய கத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழையின் காரணமாகவும், மண்சரிவு அபாயம் உள்ளதனாலும் நுவரெலியா மாவட்டம் திடீர் அனர்த்தம் ஏற்படும் மாவட்டமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

fo.jpgதேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகமும் வானிலை அவதான நிலையமும் விடுத்துள்ள எச்சரிக்கைகளை அடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ பீ. ஜி. குமாரசிறி ‘தினகரனு’க்குத் தெரிவித்தார். அதேவேளை, பிரதேச செயலாளர்கள், கிராமசேவை அலுவலர்கள் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளின் விடுமுறைகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் அரச அதிபர் தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த சில தினங்களாகத் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் சாமிமலை, கவுரகலை பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றங்கரையோரமாகவுள்ள கவுரகலையில் 33 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவர்கள் தற்காலிகமாக பொதுக் கட்டடமொன்றில் தங்க வைக்கப்பட்டு நிவாரணம் வழங்கப்படு கின்றது.

இதேநேரம், கினிஸ்தன்னை பிளக் வோட்டர் பகுதியில் மண்சரிவு ஏற் பட்டுள்ளது. இதனால், அந்தப் பகுதியிலிருந்து சில குடும்பங்கள் அப்பு றப்படுத்தப்பட்டுள்ளன. கொத்மலை, பூண்டுலோயா – தவலந்தன்னை வீதியிலும் மண்சரிவு ஏற்பட்டதால் அந்தப் பகுதியிலிருந்து ஒரு குடும்பம் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக மழைபெய்தால் நுவரெலியாவுக்கான புதிய வீதியின் 52ஆம் மைல்கல் பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாகவும் அரசாங்க அதிபர் குமாரசிறி தெரிவித்தார்.

மண்சரிவு, வெள்ளப்பெருக்கு தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய மாற்று நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கவென எதிர்வரும் திங்கட்கிழமை காலை 9 மணிக்கு விசேட கூட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளதாகவும் அரச அதிபர் தெரிவித்தார். பிரதேச செயலாளர்கள், பொறியியலாளர்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட சகலரையும் நுவரெலியா மாவட்டச் செயலகத்துக்கு அழைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இது இவ்வாறிருக்க அதிக மழை வீழ்ச்சியின் காரணமாக இந்தப் பகுதிகளில் உள்ள நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. காசல்ரீ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளதாகவும் இதனால் நீர்த்தேக்கத்திற்குக் கீழ்ப் பிரதேசத்தில் உள்ள மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத் தமிழ் எம்.பி.க்களின் கவனத்துக்கு : த.மனோகரன்

up-country.jpgமத்திய மாகாணத்திற்குட்பட்ட நுவரெலியா மாவட்ட மொத்த மக்கள் தொகையில் 60 வீதத்திற்கும் அதிகமானவர்கள் தமிழர்கள் என்பது எவரும் அறிந்ததே. யாழ்ப்பாண மாவட்டத்திற்கு அடுத்ததாக நுவரெலியா மாவட்டத்திலிருந்தே அதிகமான தமிழர்கள் நடந்து முடிந்த பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ளனர். அதாவது, ஆளும் கட்சி சார்பில் மூவரும் எதிர்க்கட்சி சார்பில் இருவரும் தெரிவாகியுள்ளனர். அத்துடன், ஆளும்கட்சி, எதிர்க்கட்சி சார்பாக நுவரெலியா மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடியதாக தலா ஒருவர் வீதம் இருவர் தேசியப் பட்டியல் மூலம் நியமனம் பெற்றுள்ளனர். அதன்படி நுவரெலியா மாவட்டத் தமிழ்மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடியதாகப் பாராளுமன்றத்தில் ஏழு பிரதிநிதிகள் உள்ள அதேவேளை, அவர்களில் ஒருவர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராகவும் ஒருவர் பிரதியமைச்சராகவும் உள்ளனர்.

மேலும், இம்மாவட்டத்திலுள்ள அம்பகமுவ, நுவரெலியா, கொத்மலை, வலப்பனை, ஹங்குரங்கெத்த ஆகிய ஐந்து பிரேதசசபைகளில் அம்பகமுவ, நுவரெலியா ஆகிய இரு பிரதேசசபைகளின் தலைவர்களாகத் தமிழர்களே பதவியிலுள்ளதுடன், சகல பிரதேசசபைகளிலும் கணிசமான தமிழர்கள் அங்கம்வகிக்கின்றனர்.

அத்துடன், மாவட்டத்திலுள்ள ஒரே மாநகரசபையான நுவரெலியா மாநகரசபையின் பிரதி முதல்வராகத் தமிழர் ஒருவரே செயற்படுவதுடன், மாவட்டத்தில் இரு நகரசபைகளான அட்டன் டிக்கோயா மற்றும் லிந்துல தலவாக்கலை ஆகிய நகரசபைகளின் தலைவர்களாகவும் தமிழர்களே உள்ளனர்.

அரசியல் அமைப்புகளில் மக்களின் பிரதிநிதிகளாக இடம்பெற்று செயற்படுவதானது, தாம் சில பதவிகளைப் பெற்றுக்கொள்வது என்ற கருத்து நாட்டில் பரவலாக அரசியல்வாதிகளிடமுள்ளது. இது மறுக்கவோ, மறைக்கவோ முடியாத உண்மை நிலை.

அரசியல் அமைப்புகளில் மக்களின் பிரதிநிதிகளாக அவர்களது வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டவர்கள் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கவும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்து உறுதிப்படுத்தவும் செயற்பட வேண்டும். அதுவே அவர்களின் பொறுப்பு. அதற்காகவே மக்கள் அவர்களைத் தம்சார்பாகத் தமது பிரதிநிதிகளாகத் தெரிவு செய்துள்ளனர் என்பது புரிந்துகொள்ளப்பட வேண்டும்.

நுவரெலியா மாவட்டத்தின் தமிழ்மக்களால் பாராளுமன்றத்திற்கும் மாகாணசபைக்கும் மாநகர, நகர, பிரதேசசபைகளுக்கும் தமது பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ஒவ்வொருவரும் தமிழ்மக்களின் மொழி, கல்வி, தொழில், சுகாதாரம், இருப்பிடம் உட்பட பல அடிப்படை விடயங்களில் கவனம் செலுத்த வேண்டிய கடப்பாடு கொண்டவர்கள்.

அவர்களுக்குரிய கடப்பாட்டில் மொழியுரிமையைப் பேணுவது முக்கிய இடம் வகிக்கின்றது. இந்த நாட்டின் அரசகரும மொழிகளில் தமிழ்மொழியும் ஒன்று. ஒரு தமிழர் தனது அரசாங்கத் தொடர்புகளையும் அன்றாடக் கடமைகளையும் தமிழ்மொழியில் ஆற்றிக்கொள்ளும் உரிமை அரசியலமைப்பின் கீழ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், அரசியலமைப்பால் வழங்கப்பட்டுள்ள இந்த மொழியுரிமையை மேலும் வலியுறுத்தும் முகமாக நுவரெலியா மாவட்டத்தின் ஐந்து பிரதேசசபைகளின் எல்லைக்குள்ளும் தமிழ் மொழியை நிர்வாக மொழியாகச் செயற்படுத்த வேண்டுமென்று விசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, நுவரெலியா, அம்பகமுவ, வலப்பனை, கொத்மலை, ஹங்குரங்கெத்த ஆகிய நுவரெலியா மாவட்டத்திலுள்ள ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளிலும் தமிழ்மொழி நிர்வாக மொழியாகச் செயற்படுத்தப்படவேண்டுமென்று 1999 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் திகதி 1105/25 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கு முன்பே பொது நிர்வாக அமைச்சு ஊடாக பல்வேறு தமிழ்மொழியின் செயற்பாடு தொடர்பான சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்மொழியின் நிர்வாக உரிமை தொடர்பாகவும் செயற்படுத்தும் முறைமை தொடர்பாகவும் தெளிவான விளக்கங்கள், வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளபோதும் நடைமுறையில் தமிழ்மொழிப் புறக்கணிப்பு ஏன் இடம்பெறுகின்றது என்பது பற்றி ஆராயவேண்டும். இதற்கு முதற்படியாகத் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் நுவரெலியா மாவட்டத்தைக் கவனத்தில் கொள்வது பொருத்தமாயமையும்.

நுவரெலியா மாவட்டத்திலுள்ள சகல அரச அலுவலகங்களிலும் மொழிப் பிரச்சினையால் தமிழ்மக்கள் பல்வேறு சிரமங்களுக்குள்ளாகின்றனர். அரச அலுவலகங்களில் பணி புரிபவர்கள் சிங்கள மொழி மூலம் பணியில் சேர்ந்தவர்கள், உயர் அதிகாரிகளும் அவ்வாறே இந்நிலையில் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பணியாற்றும் தமிழ் அலுவலர்கள் தமிழ்மொழியில் கடமையாற்றும் வாய்ப்போ வசதியோ அற்றவர்களாக வெறும் தொடர்பு அலுவலராகவே அதாவது, மொழி பெயர்ப்பாளர்களாகச் செயற்படவேண்டியுள்ளது.

மாநகர,நகரப் பிரதேசங்களின் நிலையும் அதுவே.  தமிழர்கள் அரசியல் ரீதியாக குறிப்பிட்ட அரசியல் அமைப்புகளில் அதிகாரம் செலுத்தினாலும் நிர்வாக மொழியாகத் தமிழை நடைமுறைப்படுத்த முடியாத நிலையில் கையாலாகாத நிலையிலேயே உள்ளனர்.மேற்படி அமைப்புகளில் அதிகாரம் செலுத்தும் தகைமையில் உள்ளவர்கள் இது தொடர்பில் சிந்திக்கவேண்டும்.அதிகாரம் செலுத்தச் சட்டப்படி உரிமையிருந்தும் ஏவலாளாக இருப்பது சமூகத்தின் மதிப்பை கீழிறக்கம் செய்துவிடும். ஏனையவர்கள் ஆளும் இனமாகவும் சட்டப்படி உரிமைகளிலிருந்தும் தமிழர்கள் ஆளப்படும் இனமாகவும் கருதப்படுவது மட்டுமல்ல, கொள்ளப்படவும் வழியமைத்துவிடும். தற்போது நடைமுறையில் நுவரெலியா மாவட்டத்தில் தமிழர்கள் அரசியல் ரீதியாகக்கூடிய பிரதிநித்துவங்களைக் கொண்டவர்களாகவிருந்த போதும் யதார்த்த நிலையில் மொழியுரிமை இழந்து ஆளப்படும் மக்கள் கூட்டமாகவேயுள்ளனர்.

அரசியல் தனிப்பட்ட கொள்கை வேறுபாடுகளுக்கப்பாலிருந்து நுவரெலியா மாவட்டத் தமிழ்மக்களின் அடிப்படை உரிமையான மொழியுரிமையை எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம், பேணலாம், உறுதிப்படுத்தலாம் என்பது தொடர்பில் சகல தமிழ்மக்கள் பிரதிநிதிகளும் கவனம் செலுத்த வேண்டும். பொறுப்புணர்ந்து செயற்பட மக்கள் பிரதிநிதிகள் முன்வருவார்களா?

நன்றி: தினக்குரல்

ஆறுமுகன் அமைச்சுப் பதவி ஏற்பதில் இன்னும் முடிவில்லை

arumugam.jpgஇலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஆறுமுகன் தொண்டமான் எம். பி, அமைச்சுப் பதவி ஏற்பது தொடர்பில் இன்னமும் முடிவுகள் எட்டப்படவில்லையெனக் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த அமைச்சரவையில் வகித்த அமைச்சுப் பொறுப்புகள் இந்தமுறை எவருக்கும் மீள வழங்கப்படாததால், இளைஞர் வலுவூட்டல், சமூக பொருளாதார அமைச்சைப் பெறுவது சாத்தியமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆறுமுகன் தொண்டமான் எம். பிக்குக் கால் நடை அபிவிருத்தி அமைச்சு வழங்கப்பட்ட போதிலும் அதனை அவர் ஏற்கவில்லையெனத் தெரிய வருகிறது. இந் நிலையில் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக காங்கிரஸின் முக்கியஸ்தர் ஒருவர் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார். இன்று அல்லது நாளை தொண்டமான் அமைச்சர் பதவி ஏற்பார் எனத் தெரிய வருகிறது.

தோட்ட தொழிலாளருக்கு இன்று விசேட விடுமுறை – அமைச்சர் ஆறுமுகன்

தோட்டத் தொழிலாளர்கள் அனைவருக்கும் இன்று வியாழக்கிழமை வாக்களிப்பதற்கு விசேட விடுமுறை வழங்கப் பட்டுள்ளது. எனவே, தொழிலாளர்கள் அனைவரும் காலையிலேயே வாக்குச் சாவடிக்குச் சென்று தமது வாக்கினை பதிவு செய்யுமாறு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்; இறுதி நேர நெருக்கடியை தவிர்க்கும் பொருட்டு காலையிலேயே வாக்காளர்கள் தத்தமது வாக்குச்சாவடிகளுக்கு சென்று தமது வாக்கினை பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு வாக்களிக்கும் ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படும். வாக்களித்த பின்னர் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்ல முடியும்.

அவ்வாறு வேலைக்குச் சென்ற பின்னர் தொழிலாளர்களுக்கு தோட்டத் நிருவாகம் வேலை வழங்க மறுப்புத் தெரிவித்தாலோ, அல்லது சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க மறுப்புத் தெரிவித்தாலோ, உடனடியாக இ. தொ. கா. தலைமை காரியாலயம், கிளைக் காரியாலயம் அல்லது என்னுடனோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.