அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

ஐ.தே.கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி கூட்டமைத்து போட்டியிடுவது குறித்து ஆராய்வு

sri-lanka-election-01.jpgமேல் மாகாணசபைத் தேர்தலில் கூட்டமைத்து போட்டியிடுவது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசனுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

எதிர்க்கட்சி தலைவரின் வாசஸ்தலமான கேம்பிரிஜ் டெரஸில் புதன்கிழமை இடம்பெற்ற இச்சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது.இதன்போது ஜனநாயக மக்கள் முன்னணி வேட்பாளர்கள் குறித்த கோரிக்கையை மனோ கணேசன் முன்வைத்துள்ளார். அதனை சாதகமான ரீதியில் பரிசீலிப்பதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணி வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

ஆசியாவில் வேலைவாய்ப்பின்மை 9 கோடி 70 இலட்சமாக அதிகரிக்கும்

economics.jpgஉலகப் பொருளாதார வீழ்ச்சி காரணமாக வேலை இழந்த ஆசிரியர்களின் தொகை இவ்வருடத்தில் 9 கோடியே 70 இலட்சமாக அதிகரிக்கும் சாத்தியமுள்ளதென சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் நேற்று புதன்கிழமை எச்சரித்துள்ளது. இது தொடர்பில் சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

கடந்த ஆண்டில் வேலை இழந்த ஆசிரியர்களின் தொகையை விட இவ்வருடம் வேலையிழப்போர் தொகை 7.2 மில்லியன் அதிகமாகும். இதன்படி பிராந்திய ரீதியில் கடந்த ஆண்டில் 4.8 சதவீதமாகவிருந்த வேலையற்றோர் தொகை இவ்வாண்டில் 5.1 சதவீதமாக உயர்வடையவுள்ளது.

அண்மைய வருடங்களில் உலகப் பொருளாதாரத்தில் முக்கிய பங்கொன்றை ஆசியா வகிக்கின்ற போதிலும் மொத்த சனத்தொகையில் மூன்றிலொரு பகுதியினர் நாளொன்றிற்கு ஒரு அமெரிக்க டொலருக்கும் குறைவான வருமானத்தையே பெறுகின்றனர்.

ஆசியாவில் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் இளவயதினரின் அதாவது வேலைதேடும் பருவத்தினரின் சனத்தொகைக்கேற்ப இங்கு 51 மில்லியன் புதிய வேலைவாய்ப்புகளை இவ்வருடத்திலும் அடுத்த வருடத்திலும் உருவாக்க வேண்டிய தேவை உள்ளது.

இதில் இப்பிராந்தியத்தில் பாரிய பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளை இந்தியாவில் 20.3 மில்லியன் வேலைவாய்ப்புகளும் சீனாவில் 10.9 மில்லியன் வேலைவாய்ப்புகளும் இந்தோனேசியாவில் 3.6 மில்லியன் வேலைவாய்ப்புகளையும் உருவாக்க வேண்டியுள்ளது.

எனினும், வேகமாக அதிகரித்து வரும் வேலை தேடுவோரின் சனத்தொகைக்குப் போதுமான புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான வாய்ப்பு மிகக் குறைந்தளவிலேயே காணப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆசியாவின் வெளிநாட்டு வருமானத்தில் செல்வாக்குச் செலுத்தும் அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடியும் ஆசியர்களுக்கான வேலைவாய்ப்புகளை குறைக்குமென உலக வங்கியின் அறிக்கையை மேற்கோள் காட்டி சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.

கிழக்கு ஆசியா மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கு அமெரிக்காவிலிருந்து 44 வீத வெளிநாட்டு வருமானமும் தெற்காசியாவுக்கு 28 வீத வெளிநாட்டு வருமானமும் கிடைப்பதாகவும் இவ் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது

முதலீட்டாளாகளே கிழக்கை நோக்கி வாருங்கள்!- முரளீதரன் எம். பி.

karuna-mp.jpgமுதலீட்டா ளர்கள் அச்சமின்றி கிழக்குக்கு விஜயம் செய்து தொழிற்துறைகளில் முதலீடுகளை  மேற்கொள்ளலாம் என்று பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளீதரன் (கருணாஅம்மான்) அழைப்பு விடுத்தார். கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் குமார வெல்கமவின் தலைமையில் அவரது அமைச்சில் நடைபெற்ற  கிழக்கு மாகாணத்தில் முதலீட்டு வாய்ப்புக்கள் என்ற தொணிப்பொருளிலான செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்தார்.

நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்காக பல பகுதிகளிலம் முதலீடுகளை மேற்கொண்டு வரும் முதலீட்டாளர்களே கிழக்கை நோக்கி வாருங்கள். அங்கு உங்கள் முதலீடுகளைச் செய்து கிழக்கு மாகாணத்தின் முன்னேற்றத்துக்காக ஒத்துழைப்பு வழங்குங்கள். நீங்கள் எவ்வித அச்சமும்கொள்ளத் தேவையில்லை அங்கு பூரண அமைதி நிலவுகின்றது என்பதற்கு நாம் உத்தரவாதம் அளிக்கின்றோம்.

வடக்கு கிழக்கில் அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படாமைக்கு சம்பந்தப்பட்ட பிரதேசங்களில் இருந்த பிரதிநிதிகளே காரணமே அன்றி அரசாங்கம் அல்ல. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கிழக்கையும் கிழக்கு மக்களையும் நன்கு கவனிப்பார்; என்பதில் எனக்கு பூரண நம்பிக்கை இருக்கிறது.

பல தசாப்தங்களின் பின்னர் ஜனாதிபதியின் ஆலோசணைக்கு இணங்க வடக்கிலும் கிழக்கிலும் பாரிய அபிவிருத்தித்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த சந்தர்ப்பத்தில் இப்பிரதேசங்களில் உங்களுக்கும் முதலீடுகளைச் செய்வதற்கு வாய்ப்பக்கிட்டியுள்ளது. கிழக்குக்கு ஒரு முறை வந்து பாருங்கள். அங்கு நீங்கள் விரும்பிய உங்களுக்குத் தகுதியான துறைகளில் உங்கள் முதலீடுகளைச் செய்யுங்கள். உங்களுக்குத் தேவையான வசதிகள் அரசாங்கத்தால் செய்து கொடுக்கப்படும். பயிர்ச்செய்கைக்கு ஏற்ற மண்வளத்தை கிழக்கு மாகாணம் கொண்டுள்ளது.

சுற்றுலா ஹோட்டல்கள், தொழிற்சாலைகள்,  மீன்பிடித்துறை சார் தொழிற் துறைகள், விவசாயத்துறை  என எந்தத் துறையிலும் உங்கள் முதலீடுகளைச் செய்யலாம் அவற்றுக்கு வேண்டிய காணிகள் மற்றும் உதவிகளை வழங்க நாம் காத்திருக்கிறோம் என விநாயகமூர்த்தி முரளீதரன் மேலும் தெரிவித்தார்.

மருந்துவகைகளுக்கான தேசிய கொள்கைத்திட்டம் இல்லாமையால் பெருமளவு நிதி துஷ்பிரயோகம் – சுகாதார சேவைகள் சங்கம் குற்றச்சாட்டு

medicine.jpgமருந்து வகைகளுக்கான தேசிய கொள்கைத் திட்டத்தை அமுல்படுத்தத் தவறியதன் மூலம் நிதியை துஷ்பிரயோகம் செய்ய அனுமதித்தமைக்கு சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா நேரடியாக பதிலளிக்க வேண்டுமென்று அகில இலங்கை சுகாதார சேவைகள் சங்கத்தின் தலைவர் காமினி குமாரசிங்க தெரிவித்துள்ளார். இக்கொள்கைத் திட்டத்தை அமுல்படுத்த முடியாமற் போனமை காரணமாக பெதடீன் கைய்ட்றோசோல் ஹட் மற்றும் மோர்ப்பின் போன்ற வலிநிவாரண மருந்துவகைக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதையும் சுகாதார சேவைகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இருதய நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கான அறுவைச் சிகிச்சையின் போது வலி நிவாரண மாத்திரைகளாக பெதடீன் உபயோகிக்கப்படுகிறது. இந்த மருந்துகள், அரசாங்க வைத்திய சாலைக்கு விநியோகிக்கப்படாமையால் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சைகளை வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

அத்துடன், வைத்திய சாலைகளின் அவசர சிகிச்சைப் பிரிவு, அறுவைச்சிகிச்சைப் பிரிவு மற்றும் அனைத்து மருத்துவப் பிரிவின் சிகிச்சைப் பணிகளும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குமாரசிங்க தெரிவித்தார். சுகாதார அமைச்சு ஒரு மாதத்துக்கு முன்னர் கொள்வனவு செய்த ஒருதொகுதி பெதடீன் மருந்துகள் காலாவதியானவை என தெரிய வந்ததையடுத்து பாவனையில் இருந்து அவை அகற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

காலாவதியான இம்மருந்துகளை அப்புறப்படுத்த நிர்ப்பந்திக்கப்பட்டதன் காரணமாக சுகாதார அமைச்சுக்கு பெருமளவு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, வைத்தியசாலைகளில் மோர்ப்பின் மருந்தை பாவிக்குமாறு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த மருந்தின் கையிருப்பு முடிவடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் பால்மா தொழிற்சாலை உருவாக்க திட்டம் – அமைச்சர் சீ. பி. ரத்னாயக்க

cp-ratnayaka.jpgமட்டக் களப்பில் சேகரிக்கப்படுகின்ற பசும்பாலை அம்பேவல தொழிற்சாலைக்குக் கொண்டு சென்று பால்மாவாக மாற்றி மீண்டும் மட்டக்களப்புக்கு கொண்டு செல்வதை விடுத்து அங்கேயே பால்மா தொழிற்சாலையை உருவாக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். 

பாலின் பாவனையை அதிகரிப்பதற்காக கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் சந்தர்ப்பத்தில் பசுவதை அதிகரித்து வருகிறது. இதனை உடனடியாக கட்டுப்படுத்தும் நோக்கிலேயே விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படுகிறது என கால்நடை அபிவிருத்தி அமைச்சர் சீ. பி. ரத்னாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்து, பெளத்த, இஸ்லாம், கிறிஸ்தவ மதகுருமார் மற்றும் இறைச்சிக்கடை உரிமையாளர் சங்கத்தினர், இறைச்சி வகை உண்பவர்களின் சங்கத்தினர் போன்றவர்களின் ஆலோசனைகளுடனேயே விலங்குகள் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்படுகிறது. தேசிய மட்டத்தில் பசும்பால் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதே இதன் பிரதான நோக்கம் எனவும் கால்நடை அபிவிருத்தி அமைச்சர் சீ. பி. ரத்னாயக்க தெரிவித்தார். விலங்குகள் திருத்தச் சட்டத்தை நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துப் பேசும் போதே அமைச்சர் சீ. பி. ரத்னாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் சீ. பி. ரத்னாயக்க திருத்தச் சட்டத்தை சமர்ப்பித்து பேசினார்.

பசுவை ஒரு தாயாகவே கருதுகிறோம். நல்ல ஆரோக்கியமான நபராக உருவாவதற்கு தாயின் பால் போன்றே பசுவின் பால் எமக்கு கிடைக்கிறது. தாயாக புனிதமாக போற்றப்பட வேண்டிய பசுவை மிகவும் கொடூரமாக கொல்லும் இழிவு நிலைக்கு மனிதர்கள் ஆளாகிவிட்டார்கள். எமது சமூகம் அந்தளவுக்கு முரட்டுத்தனமும், தன்னலமும் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

ஒரு குடும்பத்திற்குத் தேவையான பாலை வழங்கும் பசுவை பலாத்காரமாக கடத்துகிறார்கள். அல்லது களவாடுகிறார்கள். இதனால் இக் குடும்பத்தின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. அது மட்டுமல்ல அக் குழந்தைகளின் தாய் களவாடப்படுகிறார். கொல்லப்படுகிறார். சட்ட ரீதியாக இதற்கு கிடைக்கும் தண்டனை என்ன? வெறும் 500 ரூபா அல்லது 50 ரூபா மட்டும் தான். இந்த நிலை மாற வேண்டும். குறிப்பாக பொலிஸ் மா அதிபருடனும், இது தொடர்பாக பேசி இருக்கிறோம். லொறிகளில் சட்ட விரோதமாக அளவுக்கதிகமான மாடுகளை ஏற்றி வருவதை தடை செய்தல் அவ்வாறு ஏற்றி வரும் நபர்களை கைது செய்தல் மாடுகளை கைப்பற்றுதல், போன்ற நடவடிக்கைகளுடன் அதி கூடிய தண்டனைகள் பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பசுக்களை வளர்ப்பவர்களுக்கு காப்புறுதித் திட்டமும் அமுல் படுத்தப்படல் வேண்டும். இலங்கையில் பால்மா இறக்குமதிக்காக 60,000 மில்லியன் ரூபா செலவிடப்பட்டது. எனினும் பாலின் பாவனையை அதிகரிக்கச் செய்ததன் பின்னர் 45,000 மில்லியன் ரூபாவுக்கு குறைந்துள்ளது என்றும் அமைச்சர் சீ. பி. ரத்னாயக்க கூறினார்.

புலிகள் இயக்கம் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு இலங்கை வரவேற்பு

anura-piriyadarshana-yappa.jpgபுலிகள் இயக்கம் தொடர்பாக இந்திய மத்திய அரசாங்கம் கொண்டுள்ள நிலைப்பாட்டை அரசாங்கம் வரவேற்றுள்ளது. இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி லோக்சபாவில் தெளிவு படுத்தியுள்ளமையை அரசாங்கம் வரவேற்பதாக அமைச்சரவைப் பேச்சாளரான தகவல் ஊடக்கத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

“இந்தியாவின் நிலைப்பாட்டை பாராளுமன்றத்தில் தெளிவுபடுத்தியபோது அமளி துமளி ஏற்பட்டதாக அறிகிறோம். என்றாலும் புலிகள் இயக்கம் தொடர்பில் இந்தியா எடுத்துள்ள நிலைப்பாடு பாராட்டுக்குரியது” என்று அமைச்சர் தெரிவித்தார். அமைச்சரவையின் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் யாப்பா இதனைத் தெரிவித்தார்.

பொருளாதார முன்னெடுப்பு செயற்திட்டமொன்றை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ளது.

glperisss.jpgஇது தொடர்பான யோசனைகள் அடங்கிய பிரேரணையொன்றை, நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவைக்குச் சமர்ப்பித்துள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி, சர்வதேச வர்த்தக அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் பொருளாதார முன்னெடுப்பு யோசனைகள் தொடர்பில் அமைச்சரவை இன்னும் ஆராய்ந்து வருவதாகவும், விரைவில் தீர்மானமொன்று மேற்கொள்ளப் படுமென்றும் அமைச்சர் தெரிவித்தார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு அமைச்சர் இந்தத் தகவல்களைத் தெரிவித்தார். நிதி நிறுவனங்களில் (பினான்ஸ், லீசிங்) தவணைக் கட்டண முறையில் வாகனங்களைக் கொள்வனவு செய்து, செலுத்த முடியாத நிலையில் உள்ள சாதாரண மக்களுக்கு நிவாரணமளிக்கும் திட்டமொன்றையும் ஜனாதிபதி முன்மொழிந்துள்ளதாக பேராசிரியர் பீரிஸ் தெரிவித்தார்.

இதேவேளை மேல் மாகாணத்தில் பொருளாதாரம் 14% வளர்ச்சிப் பாதையை எட்டியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். முழு நாட்டினதும் பொருளாதாரம் 6.4% வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வருகின்றவேளையில் மேல் மாகாணத்தில் சகல துறைகளிலும் பொருளாதாரம் அபரிமித வளர்ச்சியைக் கண்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

இந்த வளர்ச்சியானது இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருளாதார வளர்ச்சி வேகத்துக்கு நெருக்கமானது என்று தெரிவித்த அமைச்சர் பீரிஸ், நாட்டில் நிரந்தர சமாதானம் நிலைநாட்டப்பட்டதன் பின்னர், பாரிய அபிவிருத்தியை மேற்கொள்ள வேண்டும்.

ஏ-9 பாதை திறக்கப்படுவதாலும், கிழக்கு மாகாணத்தில் இது வரை செய்கை பண்ணப்படாதிருந்த ஆயிரக்கணக்கான காணிகளில் விவசாயம் மேற்கொள்ளப்படுவதாலும், இலங்கையில் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. உதாரணமாக “எயார்ரெல்” நிறுவனத்தைக் குறிப்பிடலாம்.” என்று தெரிவித்த பேராசிரியர் பீரிஸ், “உலக பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரமான நிலையில் பேணுவதற்கு முடிந்துள்ளது.

வங்கிக் கூட்டமைப்பை வலுவாக்குவதற்குத் தக்கதருணத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் மூலம், வங்கி முறைமையில் மக்கள் நம்பிக்கைகொள்ளும் நிலை மேம்பட்டுள்ளது. உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதித் துறையினருக்குப் பாரிய ஊக்குவிப்புக் கொடுப்பனவு வழங்கப்படுகிறது” என்றும் தெரிவித்தார்.

சர்வதேச பிரதிநிதிகள் பாராளுமன்றம் வருகை

sri-lanka-parliment.jpgசர்வதேச அபிவிருத்தி மதிப்பீடு பயிற்சி கருத்திட்ட அங்கத்தவர்கள் வியாழக்கிழமை பாராளுமன்றம் வந்திருந்தனர்.

சபாநாயகர் கலரியில் அமர்ந்து சபை நடவடிக்கைகளை பார்த்துக்கொண்டிருந்த இவர்களை சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்கு பண்டார சபைக்கு அறிமுகப்படுத்தி நல்வரவு கூறி வரவேற்றதுடன், சபையிலிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் மேசையைத் தட்டி அவர்களை வரவேற்கும் முகமாக ஆதரவு வெளியிட்டனர்.

கொழும்பைத் தாக்கவந்த புலிகளின் இரு விமானங்களும் வீழ்த்தப்பட்டன- படைத்தரப்பு தகவல்: இருவர் பலி, 52 பேர் காயம்.

colombo1.jpgகொழும்பில் தாக்குதல்களை மேற்கொள்ளவென வந்த புலிகளின் இரு விமானங்கள் படையினரால் நேற்று (20.02.2009) இரவு  சுட்டு வீழ்த்தப்பட்டதாக விமானப் படை ஊடகப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார்.

ஒரு விமானம் கட்டுநாயக்க பிரதேசத்தில் வைத்து விமானப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் மற்றைய விமானம் கொழும்பில் உள்நாட்டு இறைவரி திணைக்கள கட்டடத் தொகுதியில் மோதி வீழ்ந்ததாகவும்  அவர் மேலும் தெரிவித்தார். கட்டுநாயக்க படைத்தளத்துக்கு அருகே சுட்டுவீழ்த்தப்பட்ட விமானத்தில் விமானமோட்டி ஒருவர் சடலத்தை படையினர் கைப்பற்றியுள்ளதாக விமானப் படைப் பேச்சாளர் ஜனக நாணயக்கார தெரிவித்துள்ளார். இந்த விமானம் அங்கே வீழ்ந்தபோது பொதுமக்கள் ஆறு பேர் காயமடைந்ததாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணியில் பாதுகாப்புக் கருதி கட்டுநாயக்க விமானநிலையத்தில் சில விமான சேவைகள் நிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (20.02.2009) இரவு 9.30 மணியளவில் விடுதலை புலிகளின் இருவிமானங்கள் கொழும்பு நகருக்குள் உள்நுழைந்ததையடுத்து கொழும்பு நகரில் பொருத்தப்பட்ட வான்காப்பு பொறிமுறைகள் தானாகவே இயங்கத் தொடங்கியுள்ளன. இதனைத் தொடர்ந்து கொழும்பு நகரில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

புலிகளின் ஒரு விமானம் இலங்கை இறைவரித்திணைக்கள கட்டிடத்தின்  மோதுண்டு உடைந்து விழுந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். கட்டடத்தின் 12-13 வது மாடிப்பகுதியின் பின் புறமாக விமானம் மோதுண்டதாலும் குண்டு வெடித்ததாலும் இருவர் பலியானதுடன், 52 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் ஹெக்டர் வீரசிங்க தெரிவித்துள்ளார். விமானத்தின் உடைவுகளைப் பார்வையிடுவதற்காக வேண்டி தேசிய பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்~ நல்லிரவு அவ்விடத்துக்குச் சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறைவரித் திணைக்கள அலுவலகம் கொழும்பிலே விமானப் படை தலைமையகத்திற்கு அருகில் அமைந்துள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.
விமானப் படை தலைமை அலுவலகத்தை இலக்கு வைத்தே விடுதலைப் புலிகளின் வானூர்தி தாக்குதலை நடத்தியிருக்கலாம் எனவும் இலக்குத் தவறி அதற்கு முன்பாகவுள்ள உள்நாட்டு இறைவித் திணைக்கள கட்டடத்தின் மீதுவிழுந்திருக்கலாம் எனவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்துள்ள இலங்கை வங்கிக் கட்டடம் உட்பட பல கட்டடங்களும் சேதமடைந்திருக்கின்றன. சம்பவத்தையடுத்து பாதையை மூடித் தடை விதித்துள்ள படையினர் இடிபாடுகளுக்குள் யாராவது சிக்கியிருக்கலாம் என்பதால் தேடுதலை தொடர்ந்து மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:
neelp-pulikal.jpgசிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள சிறிலங்கா வான் படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்கவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 10:00 மணிக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் புலிகளின் கரும்புலிகள் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். வான்படையின் தலைமையகமும் கட்டுநாயக்க வான்படை தளமும் தமிழ் மக்கள் மீதான வான் தாக்குதல்களுக்கு முக்கிய பங்கை வகிக்கும் வானூர்தி தளங்களாகும்.

தமிழ் மக்கள் தொடர்ச்சியான வான் குண்டுத் தாக்குதல்களுக்கு இலக்காகி பல நூற்றுக்கணக்கில் கொல்லப்படுவதற்கு இத்தளங்கள் முக்கிய பங்கை வகித்து வருகின்றமை என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும். இத்தளங்கள் மீது வெற்றிகரமான தாக்குதல்களை நடத்திய வான் புலிகளின் கரும்புலிகளா கேணல் ரூபன் லெப்.கேணல் சிரித்திரன ஆகியோர்களின் திறமையான வீரச்செயல்களுக்கு அண்மையில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் ‘நீலப்புலிகள்’ என்ற தேசிய விருதும் இந்த இரண்டு மாவீரர்களுக்கும் வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இந்த வெற்றிகரமான வான் தாக்குதல்களில் வீரச்சாவை தழுவிக்கொண்ட இரண்டு மாவீரர்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது வீரவணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கின்றனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

colombo-01.jpg

colombo-04.jpg

041.jpg

colombo-06.jpg

ltte_aircraft-2009-02-21.png

புகைப்படங்கள் www.lankadeepa.lk,   www.army.lk   இணையத்தளஙகளிலிருந்து பெறப்பட்டவை.

வக்கீல்கள் ஆவேசம்:போலீஸ் ஓய்வறையை எரித்தனர்

court-tamilnadu.jpgசென்னை ஐகோர்ட்டில் நேற்று போலீசாருக்கும் வக்கீல்களுக்கு பயங்கர மோதல் ஏற்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.தாம்பரம் கோர்ட்டில் வக்கீல்கள் சங்க தலைவர் ஸ்ரீராம் தலைமையில் வக்கீல்கள் இன்று காலை ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கோர்ட் வளாகத்தில் உள்ள போலீஸ் ஓய்வறையை அடித்து நொறுக்கினர். அங்கிருந்து மேஜை, நாற்காலிகளை வெளியில் கொண்டுவந்துபோட்டு தீ வைத்து கொளுத்தினர். கோர்ட் முன்பு ஜிஎஸ்டி சாலையில் மறியல் செய்து வாகனங்களை தடுத்தனர். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.