ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இன்று இடம்பெறவிருந்த சந்திப்பில் தமது கட்சி கலந்து கொள்ளாது என தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் சற்று நேரத்துக்கு முன்னர் அறிவித்துள்ளார்.
தமிழ்க் கட்சிகளின் பிரதிநதிகளை இன்று சந்தித்துக் கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தார். எனினும் வடக்கில் இடம்பெற்று வரும் படை நடவடிக்கைகள் நிறுத்தப்படும் வரை ஜனாதிபதியுடன் தமது கட்சி எந்தச் சந்திப்பையும் மேற்கொள்ளாது எனவும் ஆர். சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டினை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று கொழும்பு ஜானகி ஹொட்டலில் இடம்பெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே சம்பந்தன் எம்.பி முல்லைத்தீவு மாவட்டத்தில் 300,000 பொதுமக்கள் இடம்பெயர்ந்து வாழ்கின்றனர். மோதல் இடம்பெறும் பகுதிகளில் ஷெல் தாக்குதல்களினாலும், விமானத் தாக்குதல்களினாலும் தினமும் பல பொது மக்கள் உயிரிழக்கின்றனர்.காயமடைகின்றனர். முல்லைத்தீவில் இடம்பெயர்ந்த மக்களுக்கு போதுமான உணவு இல்லை, குடிப்பதற்கு சுத்தமான நீர் இல்லை, மருந்துகள் இல்லை. இதன் காரணமாக இறப்புக்கள் கூட சம்பவிக்கின்றது.
மக்கள் இவ்வாறு பாதிக்கப்படும் போது நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து கலந்துரையாடுவது அர்த்தமற்றது. எனவே முல்லைத்தீவில் நிலவும் மனிதாபிமான நெருக்கடிகள் முடிவிற்கு கொண்டு வரப்பட வேண்டும். அவ்வாறான சூழ் நிலையில் நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையடுவது அர்த்தமுள்ளதாகும்” என தெரிவித்தார்.
அரசியல் தீர்வு மூலம் தமிழர்களின் பிரச்சினைகளிற்கு சாதகமான அரசியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் பட்சத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கும் எனவும் சம்பந்தன் எம்.பி தெரிவித்தார். இது தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது. அக்கடிதத்தில் ,அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு வலயத்திற்கு அப்பால் மோதல்கள் இடம்பெறுவதாக இராணுவம் தெரிவிக்கின்றது.
எனினும் இவ்வலயத்தின் மீது விமானத்தாக்குதல்களும், எறிகணைத் தாக்குதல்களிம் மேற்கொள்ளப்படுவதால் சாராசரியாக தினமும் 40 முதல் 50 வரையான பொதுமக்கள் உயிரிழப்பதுடன்,காயமடைகின்றனர். அப்பகுதிகளில் இருந்து சர்வதேச தொண்டு நிறுவனங்களையும் அரசாங்கம் வெளியேற்றியுள்ளதுடன் உணவு, மருந்து, தற்காலிக குடில்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவதில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.உண்மை நிலையை அறிவதற்கு ஊடகங்கள் அனுமதிக்கப்படுவதில்லை
மோதல் இடம்பெறும் பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகள் சேதமடைந்துள்ளமையால் செயற்பட முடியாதுள்ளனர்.மருந்துப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகின்றது. அரசாங்கம் அப்பகுதிகளுக்கு போதுமான மருந்துப் பொருட்களை அனுப்பவில்லை.தற்காலிக குடில்கள் கூட மோசமான காலநிலையால் பாதிக்கபடுகின்றது.
இப்பகுதிகளில் 300,000 பொதுமக்கள் இருக்கின்றனர்.ஐ.நா மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்களின் கணிப்பின் படி 200,000 மக்கள் அப்பகுதிகளில் வாழ்கின்றனர்.அரசாங்கம் 70,000 பொதுமக்கள் இருப்பதாக தெரிவிக்கின்றது .எனவே அரசாங்கத்தால் அனுப்பப்படும் உணவு மற்றும் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றமையால் பட்டினிச் சாவு ஏற்பட்டு பல் சிறுவர்கள் கூட உயிரிழந்துள்ளனர்.
இவ்வருடம் ஏற்கொள்ளப்பட்ட விமான மற்றும் எறிகணைத் தாக்குதல்கள் காரணமாக 3000 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர், அத்துடன் 8000 பொதுமக்கள் காயமடைந்தும் உள்ளனர்.எனவே பொதுமக்கள் வெளிப்படையாக தாகுதல்களுக்கு இலக்காகின்றமை தெரியவருகின்றது.இம்மக்களுக்கு போதிய உணவு மற்றும் மருந்து அனுப்பாமல் அவற்றை தமிழ் மக்களிற்கு எதிரான போர் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது.
எனவே இவ் மனிதாபிமான அவலங்களை கருத்திற் கொண்டு இராணுவ நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்த வேண்டும், போதுமான உணவு, மருந்துப்பொருட்கள் போதுமானளவு கிடைக்கப்பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும், ஐ.நா மற்றும் ஐ.சி.ஆர்.சி உட்பட ஏனைய சர்வதேச தொண்டு நிறுவனங்களை அப்பகுதிகளில் சுதந்திரமாக செயற்பட அனுமதிக்க வேண்டும்” என ஜனாதிபதிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலை புலிகள் பொதுமக்களை பாதுகாப்பான பிரதேசத்திற்கு வெளியேற விடாது தடுக்கின்றனரா என ஊடகவியலாளர் ஒருவர் கேட்டதற்கு, அம்மக்கள் ஏன் வன்னியை விட்டு வெளியேற வேண்டும், அம்மக்கள் அப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.
அங்கே மேற்கொள்ளப்படும் விமானத் தாக்குதல்கள், எறிகணைத் தாக்குதல்கள் காரணமாகவே மக்கள் வெளியேறுகின்றனர்.சர்வதேச சட்ட விதிகளிற்கு அமைவாக மோதல்களின் போது பொது மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்” என சம்பந்தன் தெரிவித்தார்.