அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

வித்தியாதரன் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

vithyathara-01.jpgசுடரொளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என். வித்தியாதரன் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை உயர் நீதிமன்றத்தில் தனது சட்டத்தரணி ஊடாகத் தாக்கல்செய்துள்ளார்.

சட்டத்திற்குப் புறம்பான முறையில் தம்மை கைது செய்து தடுத்து வைத்திருப்பதாக வித்தியாதரன் தனது அடிப்படை உரிமை மீறல் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பணிப்பாளர் அநுர சேனாநாயக்க , கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு உதவி இன்ஸ்பெக்டர் எ.ஜி.ரி.பி. விஜெரட்ண, பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரட்ண, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர, சட்ட மா அதிபர் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்

இந்தியப் பிரதமரின் தலைமைச் செயலாளர் – ஜனாதிபதி இன்று சந்திப்பு

nayar.jpg இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்தியப் பிரதமரின் கொள்கை அமுல்படுத்தலுக்கான தலைமைச் செயலாளர் ரி.கே.ஏ. நாயிர் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடினார். ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவின் அழைப்பின்பேரில் ரி.கே.ஏ. நாயிர் நேற்று இலங்கைக்கு விஜயம் செய்தார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது ரி.கே.ஏ. நாயிரின் பாரியார், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க,  மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஆலோக் பிரசாத் ஆகியோருடன் வெளிவிவகாரம், நிதி, சுகாதாரம், கல்வி அமைச்சு, பெருந்தோட்டக் கைத்தொழில் ஆகிய அமைச்சுக்களின் செயலாளர்களும் கலந்துகொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புலிகள் இப்பொது 21 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பில்! அதில் 20 ச.கி.மீ. பாதுகாப்பு வலயம்!

khegeliya_rampukhala.jpgபுலிகள் இப்பொது 21 சதுர கிலோ மீற்றர் பிரதேசத்துக்குள் முடக்கப்பட்டுள்ளனர். அதில் 20 சதுர கிலோ மீற்றர் அரசினால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயமாகும் என தேசிய பாதுகாப்புக்கான ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோத அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது.

படையினரால் புலிகள் இப்போது ஒரு சதுர கிலோ மீற்றருக்குள் மட்டுப்படுத்தப்பட்டாலும் அவர்கள் பாதுகாப்பு வலயத்திலும் ஊடுறுவி அங்கிருந்தும் படையினர் மீது தாக்குதல் நடத்துகின்றனர். நேற்று அவாகள் அங்கிருந்து இலங்கை விமானப்படையின் பெல்  212 ரக ஹெலிகொப்டர்கள் மீது நடத்திய ஏவுகணைத் தாக்குதல் இதற்கான சான்றாகும்.

புலிகளின் செயற்பாடுகள் இப்பொது பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. புலிகளின் கடுமையான எதிர்ப்புக்களை வெற்றிகரமாக சமளித்துக்கொண்டு படையினர் நிதானமாக முன்னேறுகின்றனர்.

புலிகளிடம் சிக்கியுள்ள அப்பாவிப் பொதுமக்களின் நலனில் அக்கரையுள்ள சர்வதேச நிறுவனங்கள் இன்று ஆற்றவேண்டிய முக்கியமான பணி என்னவென்றால். புலிகளின் பிடியிலிருந்து தமிழ் மக்களை விடுவிப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்டு வரும் மனித நேய மற்றும் நலன்புரி நடவடிக்கைகளுக்கு அரசுடன் இணைந்த ஆதரவு வழங்குவதாகும் என்றும் அமைச்சர் ;கூறினார். 

புலிகளின் முக்கிய நான்கு தலைவர்கள் நேற்றைய மோதலில் பலி – பிரிகேடியர் உதய நாணாயக்கார

udaya_nanayakkara_brigediars.jpgபுதுக் குடியிருப்பு கிழக்குப் பிரதேசத்தில் படையினருக்கும் புலிகளுக்குமிடையில் நேற்று நடைபெற்ற கடும் மோதலென்றில் புலிகளின் முக்கிய நான்கு தலைவர்கள் கொல்லப்பட்டனர் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணாயக்கார தெரிவித்தார்.

நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோத அவர் இவ்வாறு கூறினார். இங்கு பிரிகேடியர் மேலும் கூறியதாவது.

புதுக்குடியிருப்பு கிழக்குப் பிரதேசத்தில் நிலைகொண்டுள்ள படையினர் மீது நேற்று அதிகாலை 5.30 மணியளவில் புலிகள் தீவிர தாக்குதல் நடத்தினர். படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 30 க்கும் அதிகமான புலிகள் கொல்லப்பட்டனர். இவர்களுள் வரதர் அண்ணன், காதர், சூரியன் மற்றும் ஈழவன் ஆகியோர் அடங்குவர்.

கிழக்கில் வாகரைப் பிரதேசத்தில் படையினர் நேற்று நடத்திய தேடுதல் நடவடிக்கையின்போது 5 கிலோ கிறாம் எடைகொண்ட கிளேமோர் குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது

புலிகளின் பிடியிலிருந்து இதுவரையில் 55286 பொது மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு வந்துள்ளனர். அவர்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் படையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

சாலை தெற்குப் பிரதேசத்தில் படையினரின் பயன்பாட்டுக்கான பாலமொன்றை அமைக்கும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். இதன் அமைப்புப் பணிகள் விரைவில் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் பிரிகேடியர் கூறினார்

வரிகுறைப்பினால் அரசாங்கத்துக்கு ஆயிரம் கோடி ரூபா நஷ்டம் – அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா

axman-yappa.jpg உலகளாவிய ரீதியில் பொருளாதார நெருக்கடி நிலவிய போதிலும் மக்கள் நலன் கருதி அத்தியவசிய உணவுப்பொருட்களுக்கான வரிகளை குறைத்ததால் அரசாங்கத்தக்கு ஆயிரம் கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

தகவல் ஊடகத்துறை அமைச்சில் இன்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கூறுகையில்:

மக்களுக்கு ஏற்படும் சுமையைத் தவிர்ப்பதற்கு பொருட்களின் விலை அதிகரிக்காமல் இருக்கச்செய்ய 13 வகையான அத்தியவசிய உணவுப்பொருட்களுக்கான வரியை அரசாங்கம் குறைத்தது. பால்மா ஒரு கிலோவுக்கு அறவிடப்பட்டு வந்த 96 ரூபா வரி ஐந்து ரூபாவாக குறைக்கப்பட்டது. பருப்பு ஒரு கிலோவுக்கு அறவிடப்பட்ட 36 ரூபா ஆறு ரூபாவாக குறைக்கப்பட்டது. இவ்வாறான வரி குறைப்பினால் அரசாங்கத்துக்கு ஆயிரம் கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டது.

உலகளாவிய ரீதியில் பொருளாதார நெருக்கடி நிலவும் வேளையிலேயே அரசாங்கம் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தேயிலை உரம், உரமானியம் மற்றும் சமுர்தி போன்ற நிவாரண உதவிகளையும் தொடர்ந்து வழங்கியும் வருகின்றோம். இதனால் இலங்கை நடுத்தர நிலையிலான ஒரு நாடாகத் திகழ்கின்றது.

பணம் இருந்தாலும் தேவையானபோது தேவையான பொருளை கொள்வனவு செய்யமுடியாது  என்ற நிலையை உணர்ந்ததால் விவசாய உற்பத்தியில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. அதன் பயனாக தற்போது நாட்டுக்கு எட்டு மாதங்களுக்குத் தேவையான அரிசி கையிறுப்பில் உள்ளது.

இவ்வாறான நிலையில் எதிர்க் கட்சிகள் பொருட்களின் விலை அதிகரிக்கப் போவதாக பொய்யான பிரசாரத்தை செய்து வருகின்றன. சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 3.2 பில்லியனை கடனாகப்பெற உரிமை இருக்கின்றுது. கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக அந்த நிதியத்திடமிருந்து கடன் எதுவும் பெறப்படவில்லை. உலக நாடுகள் மத்தியில் நிலவும் பொருளாதார நெறுக்கடியை கவனத்தில் கொண்டே இந்தக்கடனை எடுக்க முற்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

புதுவருடத்தை முன்னிட்டு முல்லைத்தீவுக்கு 1000 மெ. தொன் உணவுப் பொருட்கள்!

sb_diwarathnass.jpg தமிழ், சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு அடுத்த வார இறுதியில் முல்லைத்தீவு பிரதேசத்துக்கு 1000 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் அனுப்பப்படவுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் எஸ்.பி. திவாரத்ன தெரிவித்தார்.

இவை கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்படவுள்ளதோடு முல்லைத்தீவு பிரதேசத்துக்கு ஒரே தடவையில் அனுப்பப்படும் ஆகக் கூடுதலான அளவு உணவுப் பொருள் தொகுதி இதுவாகும். இதேவேளை, யாழ். குடாநாட்டுக்கு ஏ-9 வீதி ஊடாக அத்தியாவசிய உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லும் இரண்டாவது வாகனத் தொடரணி நேற்று கொழும்பிலிருந்து புறப்பட்டுச் சென்றது.

உணவு மற்றும் துணி வகைகள் அடங்கிய 300 மெற்றிக் தொன் அளவான இந்தப் பொருட்கள் 20 லொறிகளில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அதற்கு முன்னர் அப்பிரதேசத்துக்குத் தேவையான மருந்துப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதியைச் சந்திக்காது! கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் அறிவிப்பு

sampandar-pr-con.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இன்று இடம்பெறவிருந்த சந்திப்பில் தமது கட்சி கலந்து கொள்ளாது என தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் சற்று நேரத்துக்கு முன்னர் அறிவித்துள்ளார்.
 
தமிழ்க் கட்சிகளின் பிரதிநதிகளை இன்று சந்தித்துக் கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தார். எனினும் வடக்கில் இடம்பெற்று வரும் படை நடவடிக்கைகள் நிறுத்தப்படும் வரை ஜனாதிபதியுடன் தமது கட்சி எந்தச் சந்திப்பையும் மேற்கொள்ளாது எனவும் ஆர். சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டினை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று கொழும்பு ஜானகி ஹொட்டலில் இடம்பெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே சம்பந்தன் எம்.பி முல்லைத்தீவு மாவட்டத்தில் 300,000 பொதுமக்கள் இடம்பெயர்ந்து வாழ்கின்றனர். மோதல் இடம்பெறும் பகுதிகளில் ஷெல் தாக்குதல்களினாலும், விமானத் தாக்குதல்களினாலும் தினமும் பல பொது மக்கள் உயிரிழக்கின்றனர்.காயமடைகின்றனர். முல்லைத்தீவில் இடம்பெயர்ந்த மக்களுக்கு போதுமான உணவு இல்லை, குடிப்பதற்கு சுத்தமான நீர் இல்லை, மருந்துகள் இல்லை. இதன் காரணமாக இறப்புக்கள் கூட சம்பவிக்கின்றது.

மக்கள் இவ்வாறு பாதிக்கப்படும் போது நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து கலந்துரையாடுவது அர்த்தமற்றது. எனவே முல்லைத்தீவில் நிலவும் மனிதாபிமான நெருக்கடிகள் முடிவிற்கு கொண்டு வரப்பட வேண்டும். அவ்வாறான சூழ் நிலையில் நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையடுவது அர்த்தமுள்ளதாகும்” என தெரிவித்தார்.

அரசியல் தீர்வு மூலம் தமிழர்களின் பிரச்சினைகளிற்கு சாதகமான அரசியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் பட்சத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கும் எனவும் சம்பந்தன் எம்.பி தெரிவித்தார். இது தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது. அக்கடிதத்தில் ,அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு வலயத்திற்கு அப்பால் மோதல்கள் இடம்பெறுவதாக இராணுவம் தெரிவிக்கின்றது.

எனினும் இவ்வலயத்தின் மீது விமானத்தாக்குதல்களும், எறிகணைத் தாக்குதல்களிம் மேற்கொள்ளப்படுவதால் சாராசரியாக தினமும் 40 முதல் 50 வரையான பொதுமக்கள் உயிரிழப்பதுடன்,காயமடைகின்றனர். அப்பகுதிகளில் இருந்து சர்வதேச தொண்டு நிறுவனங்களையும் அரசாங்கம் வெளியேற்றியுள்ளதுடன் உணவு, மருந்து, தற்காலிக குடில்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவதில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.உண்மை நிலையை அறிவதற்கு ஊடகங்கள் அனுமதிக்கப்படுவதில்லை

மோதல் இடம்பெறும் பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகள் சேதமடைந்துள்ளமையால் செயற்பட முடியாதுள்ளனர்.மருந்துப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகின்றது. அரசாங்கம் அப்பகுதிகளுக்கு போதுமான மருந்துப் பொருட்களை அனுப்பவில்லை.தற்காலிக குடில்கள் கூட மோசமான காலநிலையால் பாதிக்கபடுகின்றது.

இப்பகுதிகளில் 300,000 பொதுமக்கள் இருக்கின்றனர்.ஐ.நா மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்களின் கணிப்பின் படி 200,000 மக்கள் அப்பகுதிகளில் வாழ்கின்றனர்.அரசாங்கம் 70,000 பொதுமக்கள் இருப்பதாக தெரிவிக்கின்றது .எனவே அரசாங்கத்தால் அனுப்பப்படும் உணவு மற்றும் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றமையால் பட்டினிச் சாவு ஏற்பட்டு பல் சிறுவர்கள் கூட உயிரிழந்துள்ளனர்.

இவ்வருடம் ஏற்கொள்ளப்பட்ட விமான மற்றும் எறிகணைத் தாக்குதல்கள் காரணமாக 3000 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர், அத்துடன் 8000 பொதுமக்கள் காயமடைந்தும் உள்ளனர்.எனவே பொதுமக்கள் வெளிப்படையாக தாகுதல்களுக்கு இலக்காகின்றமை தெரியவருகின்றது.இம்மக்களுக்கு போதிய உணவு மற்றும் மருந்து அனுப்பாமல் அவற்றை தமிழ் மக்களிற்கு எதிரான போர் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது.

எனவே இவ் மனிதாபிமான அவலங்களை கருத்திற் கொண்டு இராணுவ நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்த வேண்டும், போதுமான உணவு, மருந்துப்பொருட்கள் போதுமானளவு கிடைக்கப்பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும், ஐ.நா மற்றும் ஐ.சி.ஆர்.சி உட்பட ஏனைய சர்வதேச தொண்டு நிறுவனங்களை அப்பகுதிகளில் சுதந்திரமாக செயற்பட அனுமதிக்க வேண்டும்” என ஜனாதிபதிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை புலிகள் பொதுமக்களை பாதுகாப்பான பிரதேசத்திற்கு வெளியேற விடாது தடுக்கின்றனரா என ஊடகவியலாளர் ஒருவர் கேட்டதற்கு, அம்மக்கள் ஏன் வன்னியை விட்டு வெளியேற வேண்டும், அம்மக்கள் அப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.

அங்கே மேற்கொள்ளப்படும் விமானத் தாக்குதல்கள், எறிகணைத் தாக்குதல்கள் காரணமாகவே மக்கள் வெளியேறுகின்றனர்.சர்வதேச சட்ட விதிகளிற்கு அமைவாக மோதல்களின் போது பொது மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்” என சம்பந்தன் தெரிவித்தார்.

போக்குவரத்து அமைச்சர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம்

dalas_alahapperuma.jpgயாழ். பிராந்தியத்தில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்காக ஏப்ரல் மாத முதல்வாரத்தில் போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும தலைமையிலான பதினொரு பேர் கொண்ட உயர் குழு யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளது.

இவர்கள், கோண்டாவில், பருத்தித்துறை, காரைநகர் டிப்போக்களுக்கு விஜயம் செய்வதுடன், அமைச்சரின் விஜயத்தின் நல்லெண்ண சமிக்ஞையாக, கோண்டாவில் டிப்போ முதல்தர டிப்போவாக தரமுயர்த்தப்பட்டு பத்து புதிய பஸ்கள் டிப்போவுக்கு வழங்கப்படவுள்ளன.

இலங்கை தமிழர் பிரச்சினை, ராஜீவ் கொலை என்பன தொடர்பில் இந்தியா நடவடிக்கை: ராகுல் காந்தி

rahul.jpgஇலங்கை தமிழர் பிரச்சினை மற்றும் தனது தந்தை ராஜீவ் காந்தி கொலை வழக்கு ஆகியன தொடர்பில் இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாக ராஜீவ் காந்தியின் மகனும் காங்கிரஸ் கட்சியின் இந்திய மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநில காங்கிரசாருடன் தேர்தல் குறித்து ஆலோசனைகள் நடத்துவதற்காக ராகுல் காந்தி புதுச்சேரி சென்றிருந்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய காங்கிரஸ பிரமுகர்கள் தவிர வேறு எவரும் அனுமதிக்கப்படவில்லை. அத்துடன் ஊடகவியலாளர்களும் அனுமதிக்கப்படவில்லை. இக்கூட்டத்திற்கு பின்னர் ராகுல் காந்தி ஊடகவியலாளர்களைச் சந்தித்தார்.

இதன்போது ராஜீவ் காந்தி விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் வழக்கு பற்றியும், இலங்கை தமிழர் பிரச்சினை பற்றியும் ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த அவர், “இரண்டு விடயங்கள் குறித்தும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தந்தை கொலை செய்யப்பட்ட வழக்கில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. தற்போதும் நடவடிக்கை எடுத்து வருகிறது” என்றார்.

கடந்த மூன்று தினங்களில் 75 இலங்கை மீனவர்கள் இந்திய கடற்படையினரால் கைது

இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடிக்கச் சென்ற மற்றுமொரு இலங்கை மீனவர்கள் குழு ஒன்றை இந்திய கரை யோர பாதுகாப்புப் படையினர் நேற்று முன்தினம் (24) இரவு கைது செய்துள்ள தாக மீன்பிடித்திணைக்கள உதவிப் பணிப் பாளர் லால் பெரேரா தெரிவித்தார். 7 படகுகளில் சென்ற சுமார் 30 மீனவர்கள் இவ்வாறு கைதாகியுள்ளனர்.

கடந்த மூன்று தினங்களில் மாத்திரம் 75 மீனவர்கள் இந்தியக் கரையோரப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களின் 15 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதுவரை சுமார் 200 மீனவர்களும் 37 படகுகளும் இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

இவர்கள் தமிழ்நாடு, ஆந்திரா, சென்னை மற்றும் நிகோபார், அந்தமான் தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக லால் பெரேரா கூறினார்.

இதேவேளை விடுதலை செய்யப்பட்ட 27 இலங்கை மீனவர்கள் நேற்று (25) இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட ஏற்பாடாகியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இவர்களின் 4 படகுகளும் விடுவிக்கப்பட்டுள்ளன. இவர்கள் வெள்ளிக்கிழமை இலங்கை வந்தடைவரென எதிர்பார்க்கப்படுகிறது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனைய மீனவர்களை விடுதலை செய்வது தொடர்பாக சென்னை பிரதி உயர்ஸ்தானிகராலயத்துடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் லால் பெரேரா தெரிவித்தார்.