நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இரு குடும்பங்களைச் சேர்ந்த 6 பேர் அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்டனர். குடும்பச் சண்டை காரணமாக இந்த பயங்கரம் நிகழ்ந்துள்ளது. துப்பாக்கியால் சுட்டவரும் தற்கொலை செய்து கொண்டு விட்டார்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள அய்யன்கொள்ளி என்ற பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜன் (42). யாஹூ நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜீனியராக பணியாற்றி வந்தார். முன்பு மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இவர் பணியாற்றியுள்ளார். மனைவி ஆபா (34) மற்றும் அகில் என்ற 11 வயது மகன், நேஹா என்ற 4 வயது மகளுடன் கலிபோர்னியாவின் சான்டா கிளாரா நகரில் வசித்து வந்தார் தேவராஜன்.
ஆபாவின் சகோதரர் அசோகன் (35). இவரது மனைவி சுசித்ரா (25). இவர்களுக்கு 11 மாத கைக்குழந்தை உள்ளது. அசோகனும் என்ஜீனியர். அசோகன் குடும்பத்தினர் இந்தியாவில் வசித்து வந்துள்ளனர்.
குடும்பத் தகராறு காரணமாக அசோகனுக்கும், தேவராஜனுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக தெரிகிறது. இந் நிலையில், புதிய பிளாட் வாங்கினார் தேவராஜன். இதற்கு அண்ணன் குடும்பத்தை அழைத்திருந்தார் ஆபா. இதற்காக அசோகன் தனது மனைவி, மகளுடன் சான்டா கிளாரா வந்திருந்தார்.
நேற்று இரவு நடந்த விருந்தின்போது திடீரென தேவராஜனுக்கும், அசோகனுக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது. அப்போது யாரும் எதிர்பாராத வகையில் கைத் துப்பாக்கியை எடுத்து அசோகன் குடும்பத்தினரை சரமாரியாக சுட்டுத் தள்ளினார் தேவராஜன்.
இதில் அசோகன், அவரது மனைவி சுசித்ரா மற்றும் மகள் ஆகியோர் படுகாயமடைந்து விழுந்தனர். இதைப் பார்த்து ஆபா ஓடி வந்து தடுக்க முயன்றார்.அப்போது ஆபா, தனது இரு மகள்கள் ஆகியோரையும் சுட்டார் தேவராஜன். இதில் அவர்களும் படுகாயமடைந்தனர். பின்னர் தேவராஜன் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
ரத்தம் கொட்டிய நிலையி்ல் ஆபா வீட்டுக்கு வெளியே வந்து உதவி கோர முயன்றார். ஆனால் முடியாமல் அப்படியே விழுந்து விட்டார். படுகாயத்துடன் கீழே விழுந்து கிடந்த அவரைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த போலீஸார் தேவராஜன், சுசித்ரா, அசோகன், நேஹா, அகில் ஆகியோர் உயிரிழந்து கிடந்ததைப் பார்த்தனர். கைக்குழந்தை உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. அக்குழந்தைக்கு டாக்டர்கள் சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளித்தனர். ஆனால் அது சிறிது நேரத்திலேயே இறந்து விட்டது. படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தி்ல் மிதந்த ஆபா உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.