அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

தனக்கு அபூர்வ ஆற்றல் இருப்பதாக கூறி அழகான பக்தைகளை கவர்ந்திழுத்து பாலியல் வல்லுறவு! லண்டன் போலிச் சாமியார் கைது

mohana-sing.jpgதனக்கு அபூர்வ மந்திர ஆற்றல் இருப்பதாகக் கூறி பெருந்தொகையான பெண் பக்தைகளை தன் பக்கம் கவர்ந்திழுத்து, அவர்களில் அழகிய யுவதிகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் போலிச் சாமியார் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட சம்பவம் வட லண்டனில் இடம்பெற்றது.

மோகன்சிங் என தன்னைக் கூறிக் கொண்ட மைக்கல் லயன்ஸ் (51 வயது) என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டு, லண்டனிலுள்ள வூட் கிறீன் கிறவுண் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

மேற்படி நபர் தனக்கு திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய்லாமாவுடன் தொடர்பிருப்பதாகவும் அதீத ஆற்றல்கள் தனக்கு கிடைத்துள்ளதாகவும் கூறி, பெண் பக்தைகளை தன் பக்கம் கவர்ந்திழுத்துள்ளார். அவர்களில் 7 பேரை கடந்த 10 வருட காலமாக அவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட மேற்படி பெண்களில் ஒருவர் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கையில், தனக்கு ஆன்மிக சக்தியை வழங்குவதாகக் கூறி சாமியார் தன்னை நிர்வாணமாக்கி தகாத முறையில் நடந்து கொண்டதாகக் கூறினார்.

மற்றொரு பெண் சாட்சியமளிக்கையில், மேற்படி சாமியார் மாடிக்குடியிருப்பில் இருந்த அவரது இல்லத்திற்கு தன்னை அழைத்து சென்றதாகவும் தன் மீது நறுமண தெளிப்பான் ஒன்றைத் தெளித்து புரியாத வார்த்தைகளைக் கூறி முணுமுணுத்தபடி தனது கழுத்தை நெரித்துப் பிடித்து குற்றச் செயலை புரிந்ததாகவும் தெரிவித்தார்.

வட லண்டனில் பெல்சைஸ் பார்க் எனும் இடத்தில் வசிக்கும் மைக்கல் லையன்ஸ் என்ற இந்த போலிச் சாமியார், தன்மீது சுமத்தப்பட்ட பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

இந்நிலையில், அவர் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சட்டத்தரணியான பிலிப் சாட்ஸ் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கும் நிதியுதவிக்கு எதிராக வழக்கு

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தினால் 1.9 பில்லியன் டொலர் உதவி   வழங்கப்படுவதை ஆட்சேபித்து கொலம்பியா நீதி மன்றத்தில் நேற்றுமுன்தினம் வழக்குத் தாக்கல்செய்யப்பட்டுள்ளது.

தமிழர்கள் படுகொலைக்கெதிரான அமெரிக்கக் குழு, அமெரிக்க திறைசேரிச் செயலாளர் திமுதி கெய்த்னர், சர்வதேசயத்தின் அமெரிக்க நிறைவேற்று அதிகாரி மெக்லாண்டாசாகர் ஆகியோருக்கு எதிராகவே இவ்வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சுமார் 84 பக்கங்களைக் கொண்ட இந்த மனுவில் சர்வதேச நாணய நிதியத்தின்  ஆளுநர் உட்பட்டவர்களும் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  இலங்கையில் மனித உரிமைகள் பாரிய அளவில் மீறப்பட்டு வருகின்றன. தமிழர்கள் படுகொலைசெய்யப்பட்டு வருகின்ற நிலையில்  இலங்கைக்கு 19கோடி டொலர்கள் வழங்கப்படுவது அமெரிக்க அரசியலமைப்பை மீறும் செயலென அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் காணாமல் போதல் மற்றும் சட்டவிரோதக் கொலைகள் இடம்பெறுகின்றன. பொதுமக்கள் மீது குண்டுத் தாக்குதலை நடத்துவது ஜெனிவா உடன்படிக்கைக்கு எதிரானதாகும்.

அத்துடன், பாலியன் வன்புணர்வுகள், மனிதநேயமற்ற செயல்கள், நீதியற்ற முறையில் ஆட்கள் தடுத்து வைக்கப்படுதல், கைதுகள், வைத்திய  வசதிகள்  வழங்கப்படாமை, பட்டினி, அரசியல் பிரதிநிதித்துவம் மறுப்பு, பேச்சுச் சுதந்திரமின்மை, சித்திரைவதைகள் என்பன இலங்கையில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த வழக்கின் பிரதிகள் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், திறைசேரி போன்றவற்றிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என தமிழர்கள் படுகொலைக்கெதிரான அமைப்பின் ஆலோசகர் புருஸ்பெய்ன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுகம்: கொள்கலன் சோதனைகளில் கடற்படையினரும்

கொழும்புத் துறைமுகத்துக்கு வரும் சகல கொள்கலன்களையும் தீவிர சோதனைக்கு உட்படுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுங்கத் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதனடிப்படையில் கொள்கலன்களைச் சோதனையிடும் பணியில் கடற்படையினரையும் ஈடுபடுத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது. சுங்கத்துறையினரை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி ஜனாதிபதி இதற்கான அறிவுறுத்தல்களைப் பெற்றுக்கொடுத்ததாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலா பிட்டிய தெரிவித்தார்.

சுங்கத் திணைக்களத்தின் வருமானத்தை அதிகரிப்பதுடன், பாதுகாப்பை வலுப்படுத்தவும், வினைத்திறன் மிக்க சேவையை வழங்கவும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

கப்பல் இறக்குமதி தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு சுங்கத் திணைக்களம், துறைமுக அதிகார சபை, இலங்கை முதலீட்டு சபை ஆகியவற்றை இணைத்த வலையமைப்பொன்றை ஏற்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

இதேவேளை சுங்கத் திணைக்களத்திற்குப் புறம்பாக வெளியில் கொள்கலன்களைச் சோதனையிடுவதற்கு பொதுவான ஓர் இடத்தை இனங்காணவும் ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

புதுமாத்தளனிலிருந்து மேலும் 540 பொதுமக்கள் புல்மோட்டை வருகை

green-ocean.jpgமுல் லைத்தீவு, புதுமாத்தளன் பகுதியிலிருந்து மேலும் 540 பொதுமக்கள் கப்பல் மூலம் புல்மோட்டைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். கடற்படையினரின் வழித்துணையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ‘கிரீன் ஓஷன்’ கப்பல் மூலம் இதுவரை 16 தடவைகள் பொது மக்கள் அழைத்து வரப்பட்டுள்ளதாக கடற்படையின் பதில் பேச்சாளர் கொமாண்டர் மஹேஷ் கருணாரட்ன தெரிவித்தார்.

நேற்று முன்தினம் இரவு இந்தக் கப்பல் புல்மோட்டையை வந்தடைந்ததாக அவர் மேலும் தெரிவித்தார். கடற்படையினரால் அழைத்து வரப்பட்ட 540 பொதுமக்களில் 229 பெண்கள், 167 ஆண்கள் மற்றும் 144 சிறுவர்களும் அடங்கு வதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

அழைத்துவரப்பட்டவர்களில் நோய்வாய்ப் பட்டவர்களுக்கு கடற்படையினர் அவசர முதலுதவி வழங்கிய பின்னர் புல்மோட்டை யிலுள்ள இந்திய மருத்துவக் குழுவினரிடம் சிகிச்சைக்காக ஒப்படைத்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

‘இரு நாள் மோதல்களில் 282 பேர் காயம்’- மருத்துவ அதிகாரி

puthukkudi.gifஇலங் கையின் வடக்கே மோதல்கள் நடக்கின்ற முல்லைத்தீவு மாவட்டத்தில் இயங்குகின்ற புதுமாத்தளன் மருத்துவமனையில் கடந்த 48 மணி நேரத்தில் மாத்திரம் எறிகணை வீச்சுக்களால் காயமடைந்த 282 பேர் வரை அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சந்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அதேவேளை புதுமாத்தளன் மருத்துவமனையில் 600க்கும் அதிகமான நோயாளர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையே, புதுமாத்தளனில் இருந்து திருகோணமலை மாவட்டம் புல்மோட்டைக்கு காயமடைந்தவர்கள் மற்றும் நோயாளர்களை ஏற்றி வந்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வழித்துணையுடனான கப்பலில் பயணித்த காயமடைந்தவர்கள் 5 பேர் வழியிலேயே மரணமடைந்ததாக திருகோணமலையில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இறந்தவர்களில் மூன்று பெண்களும், ஒரு ஆணும் ஒரு குழந்தையும் அடங்குகின்றனர்.

கிழக்கு மாகாணசபை 1,242 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கியுள்ளது

கிழக்கு மாகாணம் ஸ்தாபிக்கப்பட்டது முதல் இன்றுவரை 1,242 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ளதுடன் 269 தொண்டர் ஆசிரியர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டிருப்பதாக முதலமைச்சரின் செயலாளர் எஸ்.மாமங்கராஜா தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபையின் மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து மட்டக்களப்பு கச்சேரியில் சனிக்கிழமை மாலை ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் மாநாட்டில் அவர் உரையாற்றினார்.

முதலமைச்சரின் செயலாளர் தனதுரையில் மேலும் குறிப்பிடுகையில், போர்ச் சூழலினால் அழிந்து சிதைவுற்றிருக்கும் இம் மாகாணத்தினை விரைவாக கட்டியெழுப்ப வேண்டிய தேவை எழுந்துள்ளதால் ஊடகவியலாளர்கள் தமது பங்களிப்பினை முழுமையாக செய்து உதவுதல் வேண்டும்.

இம் மாகாணத்தில் 1,000 வேலையற்ற இளைஞர், யுவதிகளுக்கு ஐ.ஓ.எம்.நிறுவனத்தின் அனுசரணையில் தொழிற் பயிற்சியினை வழங்கி வாழ்வாதாரத்தினை முன்னேற்றுவதற்காக நடவடிக்கை எடுத்துள்ளோம்.

கிழக்கு மாகாணசபை ஸ்தாபிக்கப்பட்டு 10 மாதங்களே ஆகின்றன. அதற்குள் உள்ளூராட்சி மன்றங்களின் கீழ்வரும் 1,000 கிலோ மீற்றர் வீதி 1,760 மில்லியன் ரூபா செலவில் ஜெய்கா உதவியுடன் புனரமைக்கப்பட்டுள்ளது.

நெற்செய்கையும் அபிவிருத்தி கண்டுள்ளது. 2008-2009 காலப்பகுதியில் பெரும்போக நெல்செய்கையாக இம் மாகாணத்தில் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் ஏக்கரில் நெற் பயிரிடப்பட்டு அறுவடையும் முடிவடைந்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையின் அபிவிருத்தி சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. 200 மில்லியன் நெக்டெப் திட்ட உதவி இதற்கென பெறப்பட்டுள்ளது.

ஆயுர்வேத மருந்தகங்கள் இப்பிரதேசத்தில் பெரும் எண்ணிக்கையில் திறக்கப்பட்டிருப்பதுடன் கணிசமானோருக்கு இதில் தொழில் வாய்ப்பும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கின் மீன்பிடித்துறையினை முன்னேற்றும் வகையில் 22 இலட்சம் ரூபாய் பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள் மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஏ5 வீதி திறக்கப்பட்டு புனரமைக்கப்பட்டுள்ளதுடன் மக்கள் தமது போக்குவரத்தினை இலகுவாக மேற்கொள்ளவும் வழிசெய்து கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தொப்பிகலை, வாகரை பகுதியிலுள்ள 15 கோயில்கள் புனரமைக்கப்பட்டுள்ளன. கிழக்கு மாகாண சபையின் வேண்டுகோளின்பேரில் 1,000 கணினிகளை இந்திய அரசாங்கம் இப் பிரதேசப் பாடசாலைகளுக்கு வழங்குவதற்கு முன்வந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இங்கினியாகல மின் உற்பத்தி நிலையத்தில் பாரிய தீ; 4 மின்மாற்றிகள் நாசம்

அம்பாறை, இங்கினியாகல பகுதியிலுள்ள மின் உற்பத்தி நிலையத்தில் நேற்று திங்கட் கிழமை காலை ஏற்பட்ட பாரிய தீயினால் நான்கு பாரிய மின்மாற்றிகள் எரிந்து முற்றாக நாசமாகியுள்ளன.  இதனால் பாரிய நஷ்ட மேற்பட்டுள்ளதுடன், அம்பாறையின் பல பகுதிகளிலும் மின் விநியோகம் நீண்ட நேரம் தடைப்பட்டிருந்தது.

இங்கினியாகலயில் நீர் மின் உற்பத்தி நிலையமொன்றுள்ளது. இந்த உற்பத்தி நிலையத்திலேயே  தீவிபத்து ஏற்பட்டது.  இதையடுத்து விமானப்படை, பொலிஸார் மற்றும் இராணுவ தீயணைப்பு பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டது.

மின் நிலையத்திலுள்ள தீயணைப்பு பிரிவால் பாரிய தீயை உடனடியாக அணைக்க முடியாது போகவே தீ பல்வேறு பகுதிகளுக்கும் பரவி கொளுந்துவிட்டெரியத் தொடங்கியது.  வெளியிலிருந்து தீயணைப்பு பிரிவுகள் அங்கு வந்து சேருவதற்கிடையில் பாரிய தீ பரவி மின் நிலையதிலுள்ள, குறைந்தது நான்கு பிரதான மின்மாற்றிகளை முற்றாக அழித்து நாசமாக்கியுள்ளது.

இந்த நிலையில் அங்கு வந்து சேர்ந்த விமானப்படையினர் தீயணைப்பு பிரிவு காலை முதல் பலமணி நேரமாக தீயை அணைக்க போராடிக்கொண்டிருந்தது. பொலிஸ் தீயணைப்புப் பிரிவும் இணைந்து இந்த தீயணைப்பு முயற்சியில் நீண்ட நேரம் போராடின. எனினும் அதற்கிடையில் மின் உற்பத்தி நிலையத்தின் ஒரு பகுதியை தீ முற்றாக அழித்து நாசமாக்கியுள்ளது. இதனால் பாரிய நஷ்டமும் ஏற்பட்டுள்ளது.

இங்கு ஏற்பட்ட தீயை அடுத்து அம்பாறை மாவட்டம் முழுவதும் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதுடன்  பின்னரே அக்கரைப்பற்று, திருக்கோவில், கோமாரி பகுதிக்கும் அதனை அண்டிய பகுதிகளுக்கும் மின் விநியோகம் சீர் செய்யப்பட்டது.

எனினும், மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் (30) மாலை வரை மின்விநியோகம் தடைப்பட்டே இருந்தது. மின் உற்பத்திநிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்தப் பாரிய தீ பரவி மிகப் பெரும் நஷ்டத்தை அங்கு ஏற்படுத்தியுள்ளதாகவும் இது தொடர்பாக மின்சார சபையும், பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வவுனியாவில் பாதுகாப்பு அதிகரிப்பு

army-refg.jpgமுல் லைத்தீவு மாவட்டத்தில் உக்கிரமாக மோதல்கள் நடைபெறுகின்ற போர்ப்பிரதேசத்தில் இருந்து கடந்த சில தினங்களாக மீண்டும் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு வந்துள்ளதாக இராணுவம் தெரிவித்திருக்கின்றது.

இதுவரையில் இவ்வாறு 61 ஆயிரம் பேர் வந்துள்ளதாகவும், இவர்களில் பெரும்பான்மையானவர்கள் வவுனியா மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் நலன்புரி நிலையங்களிலும், நிவாரண கிராமங்களிலும் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்திருக்கின்றது.

வவுனியா பிரதேசத்தில் உள்ள பல பாடசாலைகளில் இடம்பெயர்ந்து வந்துள்ளவர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் அதேவேளை, வவுனியா நகரம் உள்ளிட்ட முக்கிய பிரதேசங்கள் பலத்த பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

வீதிச் சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், இடம்பெயர்ந்தவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் நலன்புரி நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது, இதற்கிடையில் வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்தி்ற்குச் செல்லும் முக்கிய வீதியான ஏ9 வீதியில் படையினரும், யாழ்ப்பாணத்திற்கான அத்தியாவசிய உணவுப் பொருள் விநியோக நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதனால், இராணுவ வாகனத் தொடரணிகள் செல்லும் போது, இந்த வீதியின் போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது

வரி விலக்களிப்பின் மூலம் அரசுக்கு ரூ.8 பில். நஷ்டம்

வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்காக 2008ஆம் ஆண்டு வரிவிலக்கு அளிக்கப்பட்டதன் மூலம் அரசாங்கத்திற்கு 8 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக அரச வருவாய்த்துறை அமைச்சரும், பிரதி நிதியமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

அத்தியாவசிய பொருள்களுக்கான வரி நீக்கப்பட்டு வர்த்தக பண்டங்களுக்கான வரி மட்டுமே விதிக்கப்பட்டதாக அமைச்சர் நேற்று (31) நிதியமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை சில மாதங்களுக்கு முன்பு 24% ஆக இருந்த பணவீக்கம், தற்போது 7% ஆகக் குறைந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

அரசாங்கம் தொடர்ந்தும் அத்தியாவசிய பொருள்களின் விலையைக் குறைப்பதற்கான நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

பாதுகாப்பு வலயத்துக்கு 1200 மெட்ரிக் தொன் உணவூப் பொருட்கள் – நாளை அனுப்பி வைக்க அரசு ஏற்பாடு!

green-ocean.jpgபாதுகாப்பு வலயத்தில் புலிகளின் பிடியில் சிக்கியுள்ள பொது மக்களுக்கு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு 1200 மெட்ரிக் தொன் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் நாளை ஏப்ரல் 01 திகதி அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. பாதுகாப்புச் செயலாளர் மற்றும் முப்படையத் தளபதிகள் ஆகியோரின் கோரிக்கைக்கு இணங்க இப்பொருட்களை பாதுகாப்பு வலயத்துக்கு அனுப்பி வைக்க ஜனாதிபதி பணிப்பரை வழங்கியுள்ளார்.

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷவின் மேற்பாவையில் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம், இலங்கைக் கடற்படை உயர் அதிகாரிகள், திருகோணமலை அரச அதிபர், மற்றும் சர்வதேச செஞ்சிலுவை அதிகாரிகள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

இதன்படி அத்தியாவசிய சேவைகள் ஆனைணாயர் நாயகத்தின் ஏற்பாட்டில் சிட்டி ஒவ் டப்ளின்| என்ற கப்பல் மூலம் 1200 மெட்ரிக் தொன் உணவவுப் பொருட்களும் மருந்துப் பொருட்களும் நாளை அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரிசிää பருப்பு, சீனி, மரக்கறி எண்ணெய், கோதுமை மா, குழந்தைப் பாலுணவு, சரக்குத்தூள், சோயா,வெள்ளைப்பூடு, தேயிலை,  மரக்கறி வகைகள் மற்றும் சுகாதார உபகரணங்களும் சுகாதரா அமைச்சினால் வழங்கப்பட்ட 55 வகையான மருந்து வகைகளும் இன்று புறப்படும் கப்பலில் அனுப்பிவைக்கப்படவுள்ளன.

அத்துடன் யுனிசெப் நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ள பொருட்களும் இதில் அனுப்பிவைக்கப்படும். படுக்கை விரிப்புக்கள்,  பிளாஸ்டிக் பொருட்கள்,  நுளம்பு வலைகள்,  சமையலறைப் பயன்பாட்டுப் பொருட்கள்,  ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஆடைகள்,  துவாய்கள் மற்றும் சவர்க்காரம் என்பன இதில் அடங்கும்.

ஏப்ரல் மாத நடுப்பகுதியில் மேலும் ஒரு தொகை உணவுப் பொருட்களை இதே கப்பலில் மீண்டும் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்  அறிவிக்கப்பட்டுள்ளது.