கிழக்கு மாகாணம் ஸ்தாபிக்கப்பட்டது முதல் இன்றுவரை 1,242 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ளதுடன் 269 தொண்டர் ஆசிரியர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டிருப்பதாக முதலமைச்சரின் செயலாளர் எஸ்.மாமங்கராஜா தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபையின் மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து மட்டக்களப்பு கச்சேரியில் சனிக்கிழமை மாலை ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் மாநாட்டில் அவர் உரையாற்றினார்.
முதலமைச்சரின் செயலாளர் தனதுரையில் மேலும் குறிப்பிடுகையில், போர்ச் சூழலினால் அழிந்து சிதைவுற்றிருக்கும் இம் மாகாணத்தினை விரைவாக கட்டியெழுப்ப வேண்டிய தேவை எழுந்துள்ளதால் ஊடகவியலாளர்கள் தமது பங்களிப்பினை முழுமையாக செய்து உதவுதல் வேண்டும்.
இம் மாகாணத்தில் 1,000 வேலையற்ற இளைஞர், யுவதிகளுக்கு ஐ.ஓ.எம்.நிறுவனத்தின் அனுசரணையில் தொழிற் பயிற்சியினை வழங்கி வாழ்வாதாரத்தினை முன்னேற்றுவதற்காக நடவடிக்கை எடுத்துள்ளோம்.
கிழக்கு மாகாணசபை ஸ்தாபிக்கப்பட்டு 10 மாதங்களே ஆகின்றன. அதற்குள் உள்ளூராட்சி மன்றங்களின் கீழ்வரும் 1,000 கிலோ மீற்றர் வீதி 1,760 மில்லியன் ரூபா செலவில் ஜெய்கா உதவியுடன் புனரமைக்கப்பட்டுள்ளது.
நெற்செய்கையும் அபிவிருத்தி கண்டுள்ளது. 2008-2009 காலப்பகுதியில் பெரும்போக நெல்செய்கையாக இம் மாகாணத்தில் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் ஏக்கரில் நெற் பயிரிடப்பட்டு அறுவடையும் முடிவடைந்துள்ளது.
கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையின் அபிவிருத்தி சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. 200 மில்லியன் நெக்டெப் திட்ட உதவி இதற்கென பெறப்பட்டுள்ளது.
ஆயுர்வேத மருந்தகங்கள் இப்பிரதேசத்தில் பெரும் எண்ணிக்கையில் திறக்கப்பட்டிருப்பதுடன் கணிசமானோருக்கு இதில் தொழில் வாய்ப்பும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
கிழக்கின் மீன்பிடித்துறையினை முன்னேற்றும் வகையில் 22 இலட்சம் ரூபாய் பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள் மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஏ5 வீதி திறக்கப்பட்டு புனரமைக்கப்பட்டுள்ளதுடன் மக்கள் தமது போக்குவரத்தினை இலகுவாக மேற்கொள்ளவும் வழிசெய்து கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தொப்பிகலை, வாகரை பகுதியிலுள்ள 15 கோயில்கள் புனரமைக்கப்பட்டுள்ளன. கிழக்கு மாகாண சபையின் வேண்டுகோளின்பேரில் 1,000 கணினிகளை இந்திய அரசாங்கம் இப் பிரதேசப் பாடசாலைகளுக்கு வழங்குவதற்கு முன்வந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.