பயங்கரவாதம் தற்போது தொழிலாளர் வர்க்கத்துக்கும் அச்சுறுத்தலாகியுள்ளது என்பதை சர்வதேச தொழிலாளர் அமைப்பு கவனத்திற் கொள்ளவேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
தொழிற்தளங்களில் மாத்திரமின்றி தொழிலாளர்களின் சமூகநீதியைப் பாதுகாக்கும் வகையில் சகல விதமான பயங்கரவாதத்துக்கும் எதிராக சர்வதேச தொழிலாளர் அமைப்பு செயற்படல் அவசியமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 90வது ஆண்டு நிறைவு நிகழ்வு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது,
பயங்கரவாதம் நாட்டில் ஒழிக்கப்பட்டுள்ளது. நாட்டின் நிலப்பரப்பில் இரண்டு பகுதியிலும் சனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினருக்கும் அற்றுப்போயிருந்த சுதந்திரம் மீளப் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதம் அமைதியான சமூகத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதுடன் அதன் முன்னேற்றத்தின் எதிரியாகவே உள்ளது. எமது படையினர் பயங்கரவாதத்தை துடைத் தெறிந்து விட்டனர். இதன் மூலம் எமது நாட்டு மக்கள் நாட்டின் சகல பகுதிகளிலும் சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.
எனது அரசாங்கம் ஆட்சிக்கு வந்த கடந்த மூன்று வருட காலப் பகுதியில் நாம் பாரிய பயங்கரவாதத்துக்கெதிரான சவால்களுக்கு முகம் கொடுத்துள்ளோம். அதற்கான பதிலடியையும் கொடுத்துள்ளோம். கலந்துரையாடல்கள் பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண நாம் முற்பட்ட போதும் பயங்கரவாதிகள் அதனை நிராகரித்துவிட்டனர்.
அதன் பின்னரே அரசாங்கம் அதன் உரிமையைக் கையிலெடுத்தது. பலத்தைப் பாவித்து பயங்கரவாதத்துக்குப் புரியும் பாஷையில் பதிலடி கொடுக்க நேர்ந்தது. விவசாயிகள் அவர்களது பிள்ளைகள் பாதிக்காதவாறு மிக அவதானத்துடனேயே நாம் எமது நடவடிக்கைகளை மேற் கொண்டோம்.
இதனால் எமக்குக் கடினமான தீர்மானங்களை எடுக்க, நேர்ந்ததுடன் இறுதியில் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் வெற்றி காண முடிந்துள்ளது. பயங்கரவாதம் இன்று முழு உலகிலும் வியாபித்துள்ளது. வளர்முக நாடுகள் மற்றுமின்றி வறுமை நிலை நாடுகளையும் அது பாதித்து வருகிறது.
பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் கடந்த 90 வருடங்களுக்கு முன் சர்வதேச தொழிலாளர் அமைப்பு உருவாக்கப்பட்ட போது பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்கவில்லை. ஆனால் அது இன்று தொழிலாளர் வர்க்கம் உட்பட பல்வேறு துறைகளையும் பாதித்து வருகிறது.
தொழிலாளர்களின் மேம்பாட்டிற்காக உழைக்கும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு சகல துறையிலும் அச்சுறுத்தலாகிவரும் பல்வேறு வித பயங்கரவாத அச்சுறுத்தலுக்கும் தமது கவனத்தை செலுத்துதல் அவசியம்.
தற்போதைய உலகப் பொருளாதார நெருக்கடியில் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பங்களிப்பு அவசியமானது. யாரோ விடும் தவறினால் அதன் பாதி ப்பை அபிவிருத்தி காணும் நாடுகளும் முகம்கொடுக்க நேர்கிறது. இத்தருணத்தில் இத்தகைய அமைப்புக்கள் எமது சமூகத்தை பாதுகாப்பதுடன் சரியான திசையில் வழிநடத்தவும் முன்வர வேண்டும்.
2006ம் ஆண்டில் எமது அரசாங்கம் ‘மஹிந்த சிந்தனை’ பத்தாண்டுக் கொள்கைத் திட்டத்தை முன்வைத்தது. மக்களுக்கான கெளரவத்தையும் தொழில் வாய்ப்பையும் பெற்றுக் கொடுப்பதில் இது முன்னுரிமையளிக்கின்றது. இத்திட்டங்களில் நாம் வெற்றியடைந்து வருவதையும் குறிப்பிட்டாக வேண்டுமெனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.