அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

முல்லைத்தீவு மாவட்டத்தில் ரூ. 50 கோடியில் அபிவிருத்தி

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஐம்பது கோடி ரூபா செலவில் உள்ளூராட்சி மற்றும் உட்கட்டமைப்பு தொடர்பான பல்வேறு பாரிய அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக் கப்பட்டு வருவதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

யுத்தத்தின் போது கடுமையாக பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் வெகு விரைவில் முழுமையான சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தும் பொருட்டும், மக்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் பெற்றுக் கொடுக்கும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 115 உள்ளூர் வீதிகளை புனரமைக்கும் திட்டத் திற்கு 393 மில்லியன் ரூபாவும், பிரதேச சபைகளை நிர்மாணிப்பதற்கான ஒன்பது கட்டுமான பணிகளுக்கு 71 மில்லியன் ரூபாவும், ஏனைய நிர்மாண பணிகளுக்கு 36 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்துள் ளதாக முல்லைத்தீவு மாவட்டத்திற்கான பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கே.உதயராஜா தெரிவித்தார்.

வடக்கின் வசந்தம், வட மாகாணத்துக்கான அவசர புனரமைப்பு திட்டம் ஆகியவற்றின் ஊடாக வட மாகாண சபை இந்த அபிவிருத்தித் திட்டங்களை முன் னெடுத்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 115 உள்ளூர் வீதிகள் முழுமையாக புனரமைக்கப்படவுள்ளதுடன் புதுக்குடியிருப்பு, துணுக்காய், கரைத்துறைப்பற்றும் மற்றும் பாண்டியன் குளம் ஆகிய நான்கு பிரதேச சபைகளுக்கான அலுவலகங்களும், செம்மாலை கொக்கிளாய் பிரதேசத்திற்கான உப பிரதேச சபை அலுவலகங்களும் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ளன.

ஆசிய விளையாட்டுப் போட்டி நேற்று கோலாகல ஆரம்பம்

asia.jpg16ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆரம்ப விழா நேற்று 12ம் திகதி வெள்ளிக்கிழமை மிகவும் கோலாகலமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. எனினும் உதைபந்து போட்டிகள் கடந்த 07ஆம் திகதியே ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. விளையாட்டுப் போட்டிகளில் நீர் விளையாட்டுகள், வீதி சைக்கிள் ஓட்டப் போட்டிகள், டன்ஸி ஸ்போட்ஸ், ஜிம்நாஸ்டிக், ஜூடோ, குறி பார்த்து சுடல், பாரம் தூக்கும் போட்டிகள் மற்றும் வூஷ¤ போட்டிகள் என்பன இன்று ஆரம்பமாகின்றன.

15 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி 2006 ஆம் ஆண்டிலே கட்டார் நாட்டின் தோஹா நகரில் நடைபெற்றது. அந்தப் போட்டிகளில் வழமைபோல் சீனா 124 தங்கம், 70 வெள்ளி மற்றும் 49 வெண்கலப் பதக்கங்களுடன் முதலிடம் பெற்றதுடன், தென் கொரியா 44 தங்கம், 39 வெள்ளியும், 70 வெண்கலப் பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தினையும், யப்பான் 43 தங்கம், 51 வெள்ளி மற்றும் 57 வெண்கலப் பதக்கங்களுடன் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.

இலங்கைக்கு ஒரு வெள்ளிப் பதக்கமும், வெண்கலப் பதக்கங்கள் இரண்டும் கிடைத்தன. 36 நாடுகள் பங்குபற்றிய இந்த போட்டியில் இலங்கைக்கு 32 ஆவது இடம் கிடைத்தது.

ஆசிய நாடுகளிடையே நடைபெறும் பிரதான விளையாட்டுப் போட்டியான ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 16 ஆவது முறையாக இம்மாதம் 12ம் திகதி முதல் 27ம் திகதி வரையில் சீனாவின் குவென்ஷ¤ நகரில் நடைபெறுகின்றது. இந்த விளையாட்டுப் போட்டிகளில் 47 நாடுகளைச் சேர்ந்த 42 விளையாட்டுப் போட்டிகளில் பத்தாயிரத்திற்கும் அதிகமான வீரர்கள் கலந்துகொள்ள உள்ளதாக சீனாவிலிருந்து கிடைக்கும் தகவல்கள் குறிப்பிடுகின்றன. இலங்கை சார்பாக இம்முறை 22 நிகழ்ச்சிகளில் 138 வீரர்கள் கலந்துகொள்வதுடன், 29 அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளனர்.

விளையாட்டுப் போட்டிக்காக குவென்ஷ¤ நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விளையாட்டு கிராமமானது, 2.73 சதுர கிலோ மீட்டர் பரப்பினைக் கொண்டுள்ளது. விளையாட்டு வீரர்கள், அதிகாரிகள் அடங்கலாக 14000 பேருக்கு அதில் தங்குமிட வசதியுண்டென ஏற்பாட்டாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஊடகவியலாளர்கள், தொழில்நுட்ப அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட விளையாட்டு வீரர்களுக்கு மேலதிகமாக 14000 பேர் அன்றாட கடமையில் ஈடுபடுவார்களென ஏற்பாட்டாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஜனாதிபதியின் பதவியேற்பு – கொழும்பு 01, 02, 03, 04 இல் விசேட விடுமுறை தினம்

தேசிய நிகழ்வாக நடத்தப்படும் ஜனாதிபதியின் பதவியேற்பு ஆரம்ப வைபவம் நடைபெறும் நவம்பர் 19 ஆம் திகதியன்று கொழும்பு 01, 02, 03, 04 ஆகிய பகுதிகளிலுள்ள தனியார் துறை அலுவலகங்களுக்கும் கொடுப்ப னவுடன் கூடிய விடுமுறை வழங்குமாறு தொழில் உறவுகள் அமைச்சர் காமினி லொக்குகே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜனாதிபதியின் இரண்டாவது பதவியேற்பு நிகழ்வு தேசிய நிகழ்வாக கொழும்பு காலி முகத்திடலுக்கு முன்னாலுள்ள ஜனாதிபதியின் செயலக வளவில் எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் கொழும்பு 01 கோட்டை, கொழும்பு 02, யூனியன் பிளேஸ், கொம்பனித்தெரு, கொழும்பு 03 கொள்ளுப்பிட்டி, கொழும்பு 04 பம்பலப்பிட்டி பகுதிகளிள் அமைந்துள்ள அனைத்து அரசாங்க அலுவலகங்கள், மற்றும் பாடசாலைகளை மூடுவதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எனவே ஜனாதிபதியின் பதவியேற்பு ஆரம்ப வைபவம் தேசிய அலுவலக நிகழ்வாக இருப்பதனாலும், அன்றைய தினம் ஏற்படக்கூடிய போக்குவரத்துத் தடங்கலைக் கருத்தில் கொண்டு மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் அமைந்துள்ள தனியார் துறை தாபனங்களின் பணியாளர்களுக்கு 19 ஆம் திகதியன்று கொடுப்பனவுடன் கூடிய லீவினை வழங்குமாறு உரிய தொழில்தருநர்களை தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன் என்றும் அமைச்சர் காமினி லொக்குகே கேட்டுக்கொண்டுள்ளார்.

அரசுடன் இணைந்து செயற்பாடு – மு. காவின் தீர்மானத்திற்கு அதியுயர் பீடம் அங்கீகாரம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் முழுமையாக இணைந்து செயற்படவுள்ளதாக அக்கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் பசீர் சேகு தாவூத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பை ஏற்று நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையினை யடுத்து அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு எடுத்த தீர்மானத்தினை கட்சியின் அதியுயர் பீடம் அங்கீகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

கடந்த 10 ஆம் திகதி ஜனாதிபதியுடன் கட்சியின் தலைவர் றவூப் ஹக்கீம் தலைமையில் இது தொடர்பான பேச்சுவார்த்தை இடம் பெற்றது. இதையடுத்து 11 ஆம் திகதி கட்சியின் அதியுயர் பீடம் கூடியது. இதன் போது இவ் விடயம் விரிவாக ஆராயப்பட்டது. எதிர்வரும் 16 ஆம் திகதி பாராளுமன்றத்தில் தலைவர் றவூப் ஹக்கீம் தனது உரையின் போது இதனை அறிவிக்கவுள்ளார் என்றார்.

எழுத்து மூல சாட்சியங்களை சமர்ப்பிக்கும் கால எல்லை நீடிப்பு

கற்றறிந்த பாடங்கள் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழுவிற்கு எழுத்துமூல சாட்சியங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலஎல்லை டிசம்பர் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கால எல்லைக்கு முன்னர் எந்தவொரு தனிநபரோ அல்லது அமைப்புக்களோ தாமாக முன்வந்து சாட்சியமளிக்க வேண்டுமென அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எழுத்துமூல மாக முன்வைக்கப்படும் சாட்சியங்கள் நன்கு ஆராயப்படுமென்றும், அதன் பின்னரே இறுதி அறிக்கை வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மோதல்களால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்துள்ளனர். மோதல்களால் பாதிக்கப்பட்ட மக்கள் சாட்சியமளிப்பதற்கு கூடுதல் சந்தர்ப்பம் வழங்க ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆணைக்குழுவின் அமர்வு நேற்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது. விரைவில் அம்பாறை, திருகோணமலையில் அமர்வு நடைபெறவுள்ளது.

வடக்கிலுள்ள 9 நீதிமன்றங்களை புனரமைக்க ரூ. 890 மில்லியன்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 890 மில்லியன் ரூபா கடனுதவியுடன் வடக்கிலுள்ள ஒன்பது நீதிமன்றங்களை மீளமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியது. இதன்படி, பருத்தித்துறை, முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி, வேலணை, மாங்குளம், சாவகச்சேரி, மல்லாகம் மற்றும் ஊர்காவற்துறை நீதிமன்றங்களுக்கு புதிதாக கட்டடங்கள் அமைக்கவும் புனரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் ‘கெயா’ திட்டத்தின் கீழ் 150 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட உள்ளதோடு அதன் ஒரு பகுதியாகவே இந்த கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஊர்காவற்துறையில் 150 மில்லியன் ரூபா செலவில் நீதிபதிகளுக்கான உத்தியோகபூர்வ வாசஸ்தலமும் நிர்மாணிக்கப்படும்.

சட்டவிரோதமாக இரு திருமணம் செய்தவருக்கு சிறைத் தண்டனை

நீர்கொழும்பு நிருபர்: சட்ட விரோதமாக இரண்டு திருமணங்களைச் செய்தவருக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருடமும் 8 மாத சிறையும் 1500 ரூபா அபராதம் செலுத்துமாறும் நீர்கொழும்பு பிரதான நீதிபதி ஜயகி அல்விஸ் விதித்துள்ளார்.

தூனகஹ, கடவலயைச் சேர்ந்த ஜே.எம்.சன்ஜீவ சம்பத் என்பவருக்கே இத் தண்டவை வழங்கப்பட்டது. இவர் 2001 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி மட்டக்குளி தேவஸ்தானத்தில் சட்டப்படி மட்டக்குளியை சேர்ந்த என்.சந்திமா நிலுகஷா என்வரே திருமணம் செய்துள்ளார்.

இவர் மீண்டும் 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மீண்டுமொரு திருமணம் செய்துள்ளதாக முதல் முனைவி பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். இவரின் வழக்கு விசாரணையின் போது இவர் குற்றத்தை ஒப்புக் கொள்ளவே நீதிபதி தண்டனை வழங்கியுள்ளார்.

சூதாட்ட சட்டமூலத்துக்கு 81 மேலதிக வாக்குகளால் சபை அங்கீகாரம்

சபை நிருபர்கள்: சூதாட்ட விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் 81 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.  பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை சூதாட்ட விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தை பிரதியமைச்சர் சரத் அமுனுகம சமர்ப்பித்து உரையாற்றி அதனை நிறைவேற்ற சபையின் அங்கீகாரத்தைக் கோரினார். இதன் பின் சூடான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

விவாத முடிவில் எதிர்க்கட்சிப் பிரதம கொறடா ஜோன் அமரதுங்க பெயர்கூறிய வாக்கெடுப்பைக் கோரினார். இதையடுத்து இடம்பெற்ற வாக்கெடுப்பில் சட்டமூலத்துக்கு ஆதரவாக 114 வாக்குகளும் எதிராக 33 வாக்குகளும் கிடைத்தன. இந்த வாக்கெடுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பனவற்றுடன் அரசதரப்பின் முன்வரிசை அமைச்சர்களில் 9 பேர் உட்பட இன்னும் சிலர் கலந்துகொள்ளவில்லை.

அத்துரலிய ரத்தின தேரர்,எல்லாவெல மேதானந்த தேரர் ஆகியோர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

வெள்ளத்தில் மூழ்கிய கொழும்பு

parliament001.jpgகொழும்பு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நேற்று புதன்கிழமை மாலை முதல் பெய்த கடும்மழை காரணமாக கொழும்பு மாநகரசபைக்குட்பட்ட பெரும்பாலான பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கின. புறக்கோட்டை, ஆமர்வீதி, கொட்டாஞ்சேனை, பம்பலப்பிட்டி, கொள்ளுப்பிட்டி,  கறுவாத்தோட்டம்,பொரளை மயானபிரதேசம், பாராளுமன்றம் வீதி உட்பட பல பிரதேசங்களும் வெள்ளத்தால் மூழ்கியிருந்ததைக் காணக்கூடியதாகவிருந்தது.

கொழும்பு மாநகர எல்லைக்குள் பல பிரதான வீதிகளும் நீரில் மூழ்கியதால் இன்று பிற்பகல் வரை கொழும்பின் பல பகுதிகளிலும் பெரும் வாகன நெரிசல்கள் ஏற்பட்டிருந்தன. எவ்வாறிருப்பினும் இன்று மாலையாகும் போது பல வீதிகளிலும் வெள்ளம் வழிந்தோடியிருந்தது. வளிமண்டலவியல் திணைக்களப் பிரதிப் பணிப்பாளர் ஜயசேகர இன்று காலை 8.30 மணிவரையான பதிவுகளின் பிரகாரம் கொழும்பில் அதிகபட்சமாக 440.2 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியிருப்பதாகவும் கூறினார்.

பாராளுமன்றத்திற்கு பவள் கவச வாகனங்களில்

parliament002.jpgபாராளு மன்றத்திற்குச் செல்லும் பாதை இன்று பெய்த அடைமழையால் முற்றாக மூழ்கிப் போயுள்ளதன் காரணமாக இன்றைய பாராளுமன்ற அமர்வுகளுக்கு உறுப்பினர்கள் படகில் செல்ல வேண்டிய நிலையேற்பட்டது.  பாராளுமன்றத்திற்குச் செல்லும் பாதையில் மூன்றடிக்கும் உயரமான நீர் நிரம்பி அப்பிரதேசமெங்கும் வெள்ளம் தேங்கி நிற்கும் நிலையில் இன்றைய பாராளுமன்ற அமர்வுகள் கூட தாமதித்தே ஆரம்பமாகியிருந்தன.

பாராளுமன்றத்திற்கு தரை வழியாக செல்ல முடியாத நிலை காணப்பட்டதால் இராணுவமும், கடற்படையும் அவர்களுக்கு உதவ முன்வந்தன. அதன்படி பல பாராளுமன்ற உறுப்பினர்கள் படகு மூலம் பாராளுமன்றத்திற்குச் சென்றனர். இன்னும் சிலர் இராணுவத்தின் உயரமான பவள் கவச வாகனங்களில் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர்.  இவ்வாறாக பல சிரமங்களின் மத்தியில் பாராளுமன்றத்தைச் சென்றடைந்த போது மழை காரணமாக அங்கு மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது தெரிய வர பெரும் ஏமாற்றமாக இருந்தது.

வேறு வழியின்றி பாராளுமன்றத்தின் அனைத்துக் கதவுகளையும் திறந்து வைத்துக் கொண்டு வீடியோ கமெராக்களின் ஒளியில் பாராளுமன்ற அமர்வு நடைபெற்றது. எட்டு நிமிடங்களுடன் பாராளுமன்ற அமர்வு முற்றுப் பெற்றது.

parliament000.jpg