அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

அமைச்சர்கள், முக்கியஸ்தர்களின் பெயரைப் பயன்படுத்தி நிதி சேகரிப்பு சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது

அமைச்சர்கள் மற்றும் அரசியல் முக்கியஸ்தர்களின் பெயரை பயன்படுத்தி சட்ட விரோதமாக நிதி சேகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த குழு ஒன்றை பொலிஸார் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர்.

கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இந்தக் குழுவில் ஐவர் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர நேற்று தெரிவித்தார்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐவரில் தொழில் அமைச்சில் கடமை புரியும் இருவர், தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் ஊழியர்கள் இருவர் மற்றும் ஊழியர் சேமலாப நிதியத்தின் ஊழியர் ஒருவரும் அடங்குவதாக அவர் தெரிவித்தார்.

முக்கிய அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள் மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகர்கள் ஆகியவர்களின் பெயர்களை பயன்படுத்தியே இவர்கள் நிதிச் சேகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். அமைச்சர்களிடம் பல்வேறு வேலைகளை செய்து தருவதாக பொய் வாக்குறுதிகளை கூறியே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அமைச்சர்கள் மற்றும் முக்கியஸ்தர்களின் பெயரை பயன்படுத்தி பல்வேறு மோசடி நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக சில அமைச்சுக்கள் பொலிஸ் திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய பொலிஸ் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்ததோடு இது தொடர்பான தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் பொலிஸ் தலைமையகத்திற்கு அறியத் தருமாறும் வேண்டுகோள் விடுத்திருந்தது.

இது தொடர்பான முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளும் அனுமதியை கொழும்பு குற்றப் புலனாய்வு பொலிஸாருக்கு ஒப்படைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றும் முன்தினம் ஐந்து சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்

வவுனியா முகாம்களிலுள்ள உண்மை நிலையினை மூடிமறைக்கவே எமக்கு அனுமதி மறுக்கப்படுகிறது -ரோசி

rosy.jpg“பயங்கர வாதிகளை முறியடித்து யுத்த நிறுத்தத்தை மேற்கொண்டுள்ள இன்றைய சமகாலத்தில் வடக்கில் பாதிக்கப்பட்டு வவுனியா முகாம்களில் தங்கியுள்ள அப்பாவித் தமிழ் மக்களைச் சென்று பார்வையிட எமக்கு அனுமதி தர மறுப்பதானது அரசாங்கத்தின் சூழ்ச்சியையே எடுத்துக் காட்டுகின்றது. அத்துடன் அங்குள்ள யதார்த்தபூர்வ உண்மை நிலவரத்தை அரசு மூடிமறைப்பதாகவே எமக்கு எண்ணத் தோன்றுகிறது” என்று மேல் மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவி ரோசி சேனநாயக்க தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை முற்பகல் இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு இவர் தொடர்ந்தும் கூறியதாவது:

“இலங்கையில் மேல் மாகாணத்திலேயே அதிகமாக பல்லின மக்கள் வாழ்கின்றனர். அதுபோலவே மேல் மாகாணத்திலேயே அரச தரப்பில் பல்வேறு வகையிலான துஷ்பிரயோக செயற்பாடுகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. அரச வளங்கள், சொத்துக்கள் என இன்னோரன்ன அம்சங்களில் அரசாங்கம் துஷ்பிரயோகம் செய்து வருகின்றது. டாக்டர் ராஜித சேனாரட்ன துஷ்பிரயோக நடவடிக்கைகளை நிறுத்துவதாக ஊடகங்களுக்கு அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்தார். எனினும், அரச தரப்பே அதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது. வாசுதேவ நாணயக்காரவும் இது விடயமாக அண்மையில் ஜனாதிபதியிடம் இதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கூறியிருந்தார்.

அரச வளங்களையும், உடைமைகளையும் துஷ்பிரயோகம் செய்பவர்களைக் கைது செய்வதற்கான எவ்வித நடவடிக்கைகளையும் அரசாங்கம் இதுவரை மேற்கொள்ளவில்லை. இன்றைய ஆட்சியாளர்கள் தமது குடும்ப நலன்களுக்காகவும் சுயதேவைகளுக்காகவுமே அரசாட்சி புரிகின்றனர். மக்கள் குறித்து எவ்வித அக்கறையும் இவர்களுக்குக் கிடையாது. மக்களிடமிருந்து வரிகளை பெற்று இன்றைய அரசாங்கத்தின் அமைச்சர் களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது பொக்கட்டுக்களை நிரப்புகின்றனர்.

அதேநேரம் எண்ணெய், காஸ் உட்பட அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளையும் காலவரையறையின்றி தமக்கேற்றாற்போல் அடிக்கடி அதிகரிக்கின்றனர். இதன் மூலம் மக்களது பணமே சூறையாடப்படுகின்றது.

மூன்று தசாப்த காலத்திற்கு பின்னர் நாட்டை அபிவிருத்தியின் பால் இட்டுச் செல்ல நல்ல சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. இந்த அரிய சந்தர்ப்பத்தை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுவே எமது வேண்டுகோள். காலத்தை இழுத்தடிக்காது உடனடியாகவே தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை அரசு பெற்றுக் கொடுப்பதோடு நாட்டில் இடம்பெறும் லஞ்ச ஊழல் செயற்பாடுகளை நிறுத்த வேண்டும். அவற்றில் ஈடுபடுவோரை அரசு சட்டத்தின் முன் கொண்டு வந்து உரிய தண்டனையைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.

ஊடக செயற்பாட்டுக்கு இடையூறினை ஏற்படுத்தாது சுதந்திரமான முறையில் ஊடகவியலாளர்கள் தமது ஊடகப் பணியினை மேற்கொள்ள அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும். நாட்டில் இடம்பெறும் மிக மோசமான செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதியும் அவரது சகபாடிகளும் தமது இதயங்களை ஒருகணம் தொட்டுப் பார்த்துச் சிந்திக்க வேண்டும். மக்களுக்கான வாழும் உரிமையை அரசு வழங்க வேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார்.

மேற்குலக தலையீடு குறித்து கமெனெய் எச்சரிக்கை

தமது நாட்டின் உள்விவகாரங்களில் மேற்குலக நாடுகள் தலையிடுவது குறித்து இரானின் அதியுயர் மதத்தலைவர் அயோத்துல்லா கமெனெய் கடுமையாக எச்சரித்துள்ளார்.

அப்படியான தலையீடுகளுக்கு எதிராக தமது நாடு பதிலடி கொடுக்கும் என்று அவர் கூறியுள்ளதாக இரானின் அரச தொலைக்காட்சி தெரிவிக்கிறது. நாட்டின் அண்மையில் நடைபெற்ற சர்ச்சைக்குரிய அதிபர் தேர்தலுக்கு பிறகு இடம்பெற்ற அமைதியின்மைக்கு மேற்குலக நாடுகளே காரணம் என்று இரான் அரசு குற்றம் சுமத்துகிறது.

அதிலும் குறிப்பாக பிரிட்டனையும், அமெரிக்காவையும் இது தொடர்பில் இரான் விமர்சித்திருந்தது. கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற சர்ச்சைக்குரிய அதிபர் தேர்தலுக்கு பிறகு நடைபெற்ற வீதி போராட்டங்களை இரானிய அதிகாரிகள் அடக்கினர்.

கரையோர பாதுகாப்பு திணைக்களம்

மீன்பிடி நீரியல் வள அமைச்சின் கீழ் இயங்கிவரும் கரையோர பாதுகாப்பு பிரிவை தனியாக கரையோர திணைக்களமாக மாற்றி செயற்பட வைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இத்திணைக்களம் பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு அமைச்சின் கீழ் இயங்கவுள்ளது.

இது தொடர்பான சட்டமூலம் இவ்வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் பெறப்படுமென மீன்பிடி அமைச்சு தெரிவித்துள்ளது.  சட்டவிரோத மீன்பிடி, கள்ளக்கடத்தல், போதைப்பொருள் கடத்தல், ஆட்களை கடத்தல் போன்ற குற்றங்களை தடுப்பதற்கும், கடலில் சந்தேகத்துக்குரியவாறு நடமாடுபவர்களை கைது செய்வதற்கும் இத்திணைக்களத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் சந்தேகத்துக்கிடமான படகுகளை சோதனையிடுவதற்கும் இத்திணைக்களத்துக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்குள் கடல்வழியாக போதைப்பொருட்கள், கடத்தல் பொருட்கள் கடத்திவரும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் இத்திணைக்களம் அவசியம் செயற்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கை மீனவர்கள் இந்தியக்கடல் எல்லைக்குள் செல்லும் சம்பவங்கள் அதிகரிப்பதாலும் வெளிநாட்டு மீனவர்கள் இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறி வருவதாலும் இந்தப்பிரிவை திணைக்களமாக மாற்ற வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சட்டவிரோத ஆயுதங்களை கையளித்த இளைஞர்களுக்கு பிரதிபொலிஸ் மா அதிபர் பாராட்டு

kattankudy_arms.gifகிழக்கு மாகாணத்தில் சட்ட விரோத ஆயுதங்களை களையும் நடவடிக்கையில் முதற் கட்டமாக காத்தான்குடி பிரதேசத்தில் ஆயுதங்களை எம்மிடம் ஒப்படைத்தது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். இதனை முன்னுதாரணமாக எடுத்து ஏனைய பிரதேசங்களிலுமுள்ள சட்டவிரோத ஆயுதங்களைகளையும் பணி படையினரால் தீவிரப்படுத்தப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் எரிசன்குணதிலக தெரிவித்தார்.

காத்தான்குடியில் நடைபெற்ற ஆயுதம் கையளிப்பு வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதி பொலிஸ் மா அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் கடந்த 3 வருடங்களாக இடம்பெற்ற கொடூர யுத்தத்தை ஜனாதிபதி முடிவுக்கு கொண்டுவந்துள்ளார். இதன் மூலம் பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் அச்சமின்றி வாழும் சூழல் உருவாக்கியுள்ளது.

இதன் அடிப்படையில் முப்படையினரைத் தவிர எந்த ஒரு தனிநபரிடமும் சட்டவிரோத ஆயுதம் வைத்திருக்க அனுமதிக்கப்போவதில்லை. இந்த சட்டவிரோத ஆயுதங்களையே நாம் களைந்து வருகின்றோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டத்தையும், அமைதியையும், ஒழுங்கையும் நிலை நாட்டுவதில் பொலிஸார் தீவிரமான முறையில் காத்திரமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு அங்கமாக காத்தான்குடியில் சட்ட விரோத ஆயுதங்களை ஒப்படைத்த இளைஞர்களையும், இதற்காக ஒத்துழைப்பு வழங்கிய பள்ளிவாசல் சம்மேளனத்தினரையும், அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வையும் பாராட்டுகின்றேன்.

நாம் அனைவரும் ஒருதாய் பிள்ளைகள். எமக்கிடையே எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாடு. இனிவரும் காலங்களில் இந்தப் பிரதேசங்களில் எவ்விதமான கொலைகளோ, கொள்ளைகளோ, கப்பம் பெறும் நடவடிக்கைகளோ இடம்பெற ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் இதற்கான சகல நடவடிக்கைகளும் படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

யாழ். வவுனியா உள்ளூராட்சித் தேர்தல்; கண்காணிப்புப் பணிகளில் பெப்ரல் இயக்கம்

யாழ்ப் பாணம் மற்றும் வவுனியா உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை கண்காணிப்பதற்குப் பெப்ரல் இயக்கம் முடிவு செய்துள்ளது.

இரு உள்ளூராட்சி மன்றங்களுக்குமான தேர்தலைக் கண்காணிக்கும் பணியில் சுமார் நூறு உள்ளூர் கண்காணிப்பார்களை ஈடுபடுத்தத் தீர்மானித்திருப்பதாக பெப்ரல் இயக்கத்தின் பதில் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி நேற்றுத் தெரிவித்தார்.

இதேநேரம் ஊவா மாகாண சபைத் தேர்தலைக் கண்காணிக்கும் பணியில் சுமார் எழுநூறு பேரை ஈடுபடுத்தத் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், ஊவா மாகாண சபைக்கும், யாழ்ப்பாணம் மாநகர சபைக்கும், வவுனியா நகர சபைக்கும் என தேர்தல் ஆகஸ்ட் மாதம் 8ம் திகதி நடைபெறவிருக்கின்றது.

இத்தேர்தலைக் கண்காணிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கின்றோம். அந்தடிப்படையில் யாழ். மாநகர சபைக்கான தேர்தலை கண்காணிக்கும் பணியில் 75 பேரையும், வவுனியா நகர சபைக்கான தேர்தலைக் கண்காணிக்கும் பணியில் 25 பேரையும் ஊவா மாகாண சபைத் தேர்தலைக் காண்காணிக்கும் பணியில் 700 பேரும் ஈடுபடுத்தப்படவிருக்கின்றனர்.

அதேநேரம் தேர்தல் தினத்தில் யாழ்.மாநகர சபைக்கான தேர்தலை கண்காணிக்கும் பணியில் மூன்று நடமாடும் வாகனங்களும், வவுனியா நகர சபைத் தேர்தலைக் கண்காணிக்கும் பணியில் இரண்டு நடமாடும் வாகனங்களும், ஊவா மாகாண சபைத் தேர்தலைக் கண்காணிக்கும் பணியில் 20 நடமாடும் வாகனங்களையும் ஈடுபடுத்தவுள்ளோம்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களுள் 51 பேர் 12 ஆம் திகதி நாடு திரும்புவர் – பிரதியமைச்சர் நியோமல்

இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 164 இலங்கை மீனவர்களில் 51 பேர் எதிர்வரும் 12 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாக கடற்றொழில் நீரியல்வள பிரதி அமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்தார்.

ஏனையோர் அவர்களுக்குரிய விசாரணைகள் நிறைவடைந்ததும் படிப்படியாக நாடு திரும்புவார்கள். இதற்கான நடவடிக்கைகளை கடற்றொழில் நீரியல் வள அமைச்சும் வெளிவிவகார அமைச்சும் இணைந்து மேற்கொண்டு வருவதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

ஏனையோர் அவர்களுக்குரிய விவாரணைகள் நிறைவடைந்ததும் படிப்படியாக நாடு திரும்புவார்கள். இதற்கான நடவடிக்கைகளை கடற்றொழில் நீரியல் வள அமைச்சும் வெளி விவகார அமைச்சும் இணைந்து மேற்கொண்டு வருவதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

இந்தியக் கடல் எல்லையில் அத்துமீறிப் பிரவேசித்துள்ளமை உட்பட பல்வேறு காரணங்களுக்காக இந்தியக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக பிரதியமைச்சரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, பல்வேறு சந்தர்ப்பங்களிலும் இலங்கை மீனவர்கள் இந்தியக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இந்திய அரசாங்கத்தின் சட்ட திட்டங்களுக்கமைய விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

இலங்கையின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த இவர்கள் ஒவ்வொரு கால கட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் என்பதால் அதற்கேற்பவே அவர்களது விசாரணைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்கிணங்க படிப்படியாக அவர்கள் விடுவிக்கப்படுவர் எனவும், இவர்களை விடுவிப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம் மிகுந்த கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நுரைச்சோலை அனல் மின் திட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்வுக்கு பாதிப்பில்லை – ஜனாதிபதி ராஜபக்ஷ

he_at_norochcholai-2009-07-05.jpgநுரைச் சோலை அனல் மின்நிலைய நிர்மாணத்தினால் அப் பிரதேசத்திலுள்ள சொத்துக்களுக்கோ அல்லது பிரதேசவாசிகளின் இயல்பு வாழ்க்கைக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாதென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உறுதியளித்திருக்கிறார்.  நுரைச்சோலை மின் உற்பத்தி நிலைய நிர்மாணப் பணிகளை நேரில் பார்வையிட சனிக்கிழமை அங்கு சென்றிருந்த போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியிருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்திருக்கிறது.

மின் உற்பத்தி நிலையத்தை சூழவுள்ள பகுதிகள் பசுமை பிரதேசமாக பிரகடனப்படுத்தப்படுமென்றும் ஜனாதிபதி ராஜபக்ஷ இதன் போது குறிப்பிட்டிருக்கிறார். இதன் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்ததும் நாட்டின் மின் விநியோகத்திற்கு மேலும் 900 மெகாவற் மின்சக்தி சேர்க்கப்படுமென்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்திருக்கிறது.

அத்துடன், அந்தந்த பிரதேசங்களில் உரிய அபிவிருத்தி திட்டங்களை அமுல்படுத்த வேண்டியது முக்கியமென்றும் எதிர்பார்க்கப்படும் அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு அனைத்து துறையிலும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டுமென்றும் நிகழ்வில் பங்கு கொண்ட மதகுருமார்கள் உள்ளிட்ட பிரதேசவாசிகள் மத்தியில் மகிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

இதேநேரம், மின்உற்பத்தி நிலைய நிர்மாணத்திட்டதுடன் அந்த பிரதேசத்தின் உட்கட்டமைப்பு வசதிகளையும் அபிவிருத்தி செய்யவும் அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாகவும் ஜனாதிபதி ராஜபக்ஷ இதன் போது மேலும் தெரிவித்திருக்கிறார்.

தவறான அறிக்கைக்காக தமிழரிடம் மன்னிப்புக் கோரியுள்ள ஏ.பி.சி.

தவறான விதத்தில் செய்தி வெளியிட்டதற்காக அவுஸ்திரேலியாவின் ஏ.பி.சி.தொலைக்காட்சி தமிழர்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளது.
மே 18 இல் 7.30 இல் ஒளிபரப்பான செய்தி அறிக்கையில் இலங்கைத் தமிழரின் வரலாறு தொடர்பாக தவறான விதத்தில் அறிக்கையிட்டதாக பார்வையாளர் ஒருவர் புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து ஏ.பி.சி.தொலைக்காட்சி மன்னிப்புக் கேட்டுள்ளது.

200 வருடங்களுக்கு முன்னர் பிரிட்டிஷாரால் பெருந்தோட்டத் துறைக்கு கொண்டுவரப்பட்ட தொழிலாளர்களின் பரம்பரையினர் இலங்கைத் தமிழர்கள் என்று ஏ.பி.சி.தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது. இலங்கையில் சிறுபான்மைத் தமிழ் மக்களில் ஒருபகுதியினர்

தொழிலாளர்களின் வம்சாவளியினராக இருக்கின்ற போதும் அநேகமானோர் 2 ஆயிரம் ஆண்டுகால இலங்கைத் தமிழ் கலாசார பரம்பரையினராகும். ஏ.பி.சி.யின் கெய்ரன் டொய்ல் இந்தத் தவறை ஏற்றுக்கொண்டுள்ளார். உங்கள் கவலையை ஏ.பி.சி. ஏற்றுக்கொள்கிறது. தமிழ் மக்களின் வரலாறு தொடர்பாக தவறாக குறிப்பிடப்பட்டதையும் தவறான வழிகாட்டலுக்கு இட்டுச்செல்வதாக அமைந்திருந்ததையும் ஏ.பி.சி.ஏற்றுக்கொள்கிறது. இதற்கு ஏ.பி.சி.மன்னிப்புக் கோருகிறது என்று தெரிவிக்கப்பட்டிருப்பதாக கிரீன் லெவ்ற் வீக்லியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கி.பி.2 ஆம் நூற்றாண்டிலிருந்தே தீவில் இலங்கைத் தமிழ் மக்கள் இருந்து வருவதை ஏ.பி.சி.விளங்கிக்கொள்கிறது. அநேகமான இலங்கைத் தமிழர்கள் யாழ்ப்பாண இராச்சியத்தின் வம்சாவளியினர் என்றும் ஏ.பி.சி.குறிப்பிட்டுள்ளது.

கண்ணிவெடி அகற்றும் பதினாறு தொழிலாளர்கள் ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்டனர்;

ஆப்கானிஸ்தான் நாட்டில் தீவிரவாதிகள் பதித்து வைத்த கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஐ. நா. சபை உதவி பெற்ற நிறுவனம்ஒன்று ஈடுபட்டு உள்ளது. இந்த நிறுவனத்தில் வேலை செய்த தொழிலாளர்கள் 16 பேர் கோஸ்ட் மாநிலத்தில் இருந்து பக்டியா மாநிலத்துக்குச் செல்வதற்காக பயணம் செய்த போது கடத்திச் செல்லப்பட்டனர்.

அடையாளம் தெரியாத ஆயுதம் தாங்கியவர்கள் தான் அவர்களை கடத்திச் சென்றனர். இந்த கடத்தல் லோகார் கார்டெஸ் சாலையில் நடந்தது. தலிபான்களின் வேலையாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

எனினும் இந்த சம்பவத்துக்கு எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. ஆட்களை கடத்துவது என்பது தீவிரவாதிகளுக்கு லாபம் தரும் தொழிலாக இருக்கிறது. கடத்தப்பட்டவர்களை மீட்ப தற்காக பெரும் தொகையை பணயத் தொகையாக அவர்கள் பெறுகிறார்கள்.

ஆப்கானிஸ்தானில் கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் கண்ணிவெடியில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேர் பலியானார்கள். அல்லது காயம் அடைந்தனர். பாகிஸ் தானுக்கு அருகாமையிலுள்ள பகிற்ரா மாகாணத்திலே இக்கடத்தல் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. ஸ்வாட் பிரதேச ராணுவ நடவடிக்கைகளில் தோல்வியை நெருங்கும் தலிபான்கள் இத்தொழிலாளர்களைக் கடத்தியுள்ளனர்.

இதனூடாக ஆப்கான் பாகிஸ்தான் அரசுகளைப் பணியவைக்கும் வேலைகளில் தலிபான்கள் ஈடுபடலாம். கடத்தப்பட்டோர் உள்ளூர் தொழிலாளர்களாகவுள்ளதால் சர்வதேச சமூகம் இக்கடத்தல் விடயத்தில் அதிக அக்கறை செலுத்தாது எனக் கருதப்படுகின்றது.

ஆப்கானிஸ்தானிய கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளில் 1800 வெளிநாட்டுப் பணியாளர்களும் எட்டாயிரம் உள்ளூர் வாசிகளும் ஈடுபட்டுள்ளனர். இது வரை மூன்றில் இரண்டு பகுதிகளில் கண்ணிவெடிகள் அகற்றப் பட்டு துப்பரவு செய்யப்பட்டுள்ளன. 2001 ஆம் ஆண்டிலிருந்து இது வரை 21 வெளிநாட்டு தொழிலாளர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இடம்பெற்ற கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர் களூடாக கடத்தப்பட்டோரை விடுவிக்க முயற்சிகள் செய்யப்படவுள்ளன.