அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

சர்வதேச நாணய நிதிய கடனுதவிக்கு அமெரிக்கா நிபந்தனை

hillary_clinton.jpgஇலங்கை கோரியிருக்கும் 190 கோடி டொலர்கள் கடனுதவியை சர்வதேச நாணயநிதியம் வழங்குவதற்கு ஆதரவளிப்பதற்கு ஒபாமா நிருவாகம் நிபந்தனையொன்றை விதித்திருக்கிறது. உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களை இலங்கை அரசாங்கம் சர்வதேச தராதரங்களுக்கு இசைவாக நடத்துகிறது என்று வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் உறுதிப்படுத்தாத பட்சத்தில் இலங்கைக்கான உத்தேச 190 கோடி டொலர் சர்வதேச நாணய நிதியக் கடனுதவிக்கு அமெரிக்கா ஆதரவை அமெரிக்க நிதியமைச்சர் அளிக்க முடியாது.

அமெரிக்க செனட் சபையினால் விரைவில் பரிசீலனைக்கு எடுக்கப்படவிருக்கும் இராஜாங்கத் திணைக்களத்தின் ஒதுக்கீட்டுச் சட்டமூலமொன்றில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை நேரங்களில் தொலைபேசி பாவனையை கட்டுப்படுத்த சுற்றுநிருபம் கொண்டுவரப்பட்டுள்ளது

images-teli.jpgபாடசாலை நேரங்களில் ஆசிரியர்களின் கையடக்கத் தொலைபேசி பாவனையை கட்டுப்படுத்தும் வகையில் சுற்று நிருபமொன்று கொண்டுவரப்பட்டுள்ளதாக மத்திய மாகாண தமிழ்க் கல்வியமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மத்திய மாகாண தமிழ் மொழிப் பாடசாலைகளின் அதிபர்களுக்கான கூட்டமொன்று கடந்த செவ்வாய்க்கிழமை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்; பாடசாலை நேரங்களில் ஆசிரியர்கள் கையடக்கத் தொலைபேசியைப் பாவிப்பது மாணவர்களின் கற்றல் மற்றும் கற்பித்தல் நட வடிக்கைகளைப் பாதிக்கும். எனவே பாடசாலைகளில் கையடக்கத் தொலைபேசி பாவனை தொடர்பாக ஓர் ஒழுங்கு முறையைக் கொண்டுவரவேண்டியுள்ளது. ஆசிரியர்களின் கையடக்கத் தொலைபேசி பாவனை எந்த வகையிலும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கக் கூடாது. எனவே இது தொடர்பில் சுற்று நிருப மொன்றை வெளியிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பாடசாலைகளில் ஒழுக்கம் பேணப்பட வேண்டும். அதிபருக்கும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையில் நல்லுறவுகள் இருக்க வேண்டும். பாடசாலைகளில் பௌதிக வளங்கள் அதிகரிக்கப்பட்டு கல்வி நிலை உயர்வடைவது போல் ஒழுக்க விழுமியங்களும் வளர்ச்சிகாண வேண்டும்.

இன்று பாடசாலைகளில் மாணவனால் அதிபர் தாக்கப்படுகின்றார். இதனால் ஒழுக்கம் குறித்து தீவிரமாக ஆராய வேண்டியுள்ளது. மலையக மாணவர்கள் க.பொ.த.சாதாரணப் பரீட்சையில் சித்தியடையும் சதவீதம் அதிகரிக்குமானால் மட்டுமே உயர்தர வகுப்புக்களில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை மட்டுமன்றி பல்கலைக்கழகம் நுழையும் மாணவர் எண்ணிக்கையும் அதிகரிக்கும். எனவே, இந்திய தூதரகத்தின் உதவியுடன் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் வேலைத்திட்டமொன்று மேற் கொள்ளப்படவுள்ளது.

இவ்வேலைத்திட்டத்தின் கீழ் இவ்வருடம் கணிதம், விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் முதலான பாடங்கள் அமுல்படுத்தப்பட்டாலும் எதிர்காலத்தில் ஏனைய பாடங்களையும் கவனத்தில் கொள்ளப்படும். மத்திய மாகாணப் பாடசாலைகளில் ஆசிரிய இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த இடமாற்றங்கள் மூலம் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படமாட்டாது.

மலையக மாணவர்களின் கல்வியை மேம்படுத்த ஓர் கூட்டு முயற்சி அவசியமாகும். அதிபர். ஆசிரியர் மற்றும் பெற்றோர் யாவரும் பங்களிப்புச் செய்ய வேண்டும். நாம் அமைச்சு மட்டத்தில் உதவிகளை நல்குவோம் என்றார். இக்கூட்டத்தில் மாகாண தமிழ்க் கல்வி அமைச்சின் உதவிக் செயலாளர் சதீஸ். முன்னாள் மாகாண சபைத் தலைவர் துரைமதியுகராஜா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இரு பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்து இளம்தாய் தற்கொலை – அநுராதபுரம் பகுதியில் சம்பவம்

குடும்பத் தகராறு காரணமாக இளம் தாயொருவர் தனது இரு சிறு பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்த சம்பவமொன்று வியாழக்கிழமை இரவு மதவாச்சி கொக்கடியகொல்லாவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கணவன்மனைவிக்கிடையிலான நீண்டநாள் தகராறையடுத்தே வியாழக்கிழமை இரவு வீட்டின் முன்பாக உள்ள கிணற்றினுள் தனது இரு சிறு பிள்ளைகளையும் தள்ளிவிட்ட தாயார் பின்னர் தானும் கிணற்றினுள் குதித்து தற்கொலை செய்துள்ளார்.

நேற்றுக்காலை இந்தக் கிணற்றில் தண்ணீர் அள்ளச் சென்றவர்கள் கிணற்றில் சடலங்கள் மிதப்பதை அவதானித்துள்ளனர்.

இதுபற்றி பொலிஸாருக்கு அறிவிக்கவே அங்கு விரைந்த பொலிஸார் சடலங்கள் மூன்றையும் கிணற்றினுள்ளிருந்து வெளியே எடுத்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் தாயாரான அனுஷா தில்கானி ஜெயரட்ன (29 வயது), ஜெகான் சந்தீப (6 வயது), அஷான் நெத்சர (3 வயது) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

இறந்த மூவரது சடலங்கள் பின்னர் பிரேத பரிசோதனைக்காக மதவாச்சி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டன.

இது தொடர்பான விசாரணைகளை மதவாச்சி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அநுர கொடித்துவக்கு தலைமையிலான பொலிஸ் குழு நடத்திவருகிறது.

முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளரை விடுவிக்க கல்வியமைச்சர் உறுதியளிப்பு

புல்மோட்டை முகாமில் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளர் தெய்வேந்திரன் மற்றும் மடு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுகந்தி ஆகியோரை அங்கிருந்து விடுவித்து வவுனியா முகாம்களில் தங்கியுள்ள மாணவரின் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்திற்கு உறுதியளித்துள்ளார். சங்கத்தின் தூதுக்குழு சங்கத்தின் தலைவர் நா.இராஜநாதன் தலைமையில் அமைச்சரை அவரின் அலுவலகத்தில் கடந்த வியாழக்கிழமை சந்தித்துப் பேசியது. அப்போது தூதுக்குழு, புல்மோட்டை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள இரண்டு வலயக் கல்வி பணிப்பாளர்களின் நிலை குறித்து அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவந்தது.

அதன்போதே அமைச்சர் முன்கண்டவாறு உறுதியளித்ததாக, தூதுக்குழுவில் இடம்பெற்றுவரும் சங்கத்தின் பொதுச் செயலாளருமான த.மகாசிவம் பத்திரிகை அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

சந்திப்பின் போது எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி பத்திரிகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

மாரி காலம் தொடங்குவதற்கு முன்பு, முகாம்களிலுள்ள இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்துவது என்ற நோக்குடன் அரசு அக்கறையுடன் செயற்பட்டு வருகிறது. ஆகவே சகல ஆசிரியர்களும் தமது சொந்த இடங்களுக்கு மீளக் குடியமரச் செல்லும் வாய்ப்புக் கிடைக்கும் என்று அமைச்சர் கூறினார்.

ஜூலை 21 ஆம் திகதி வவுனியா முகாமில் கல்வி அமைச்சினால் சகல தளபாடங்களுடன் கூடிய 20 புதிய வகுப்பறைகள் திறந்து வைக்கப்படவுள்ளன. அந்நிகழ்வில் கலந்து கொள்ளும்படி இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத் தலைவருக்கும் பொதுச் செயலாளருக்கும் கல்வி அமைச்சர் சந்திப்பின்போது அழைப்பு விடுத்தார்.

யுத்தத்தின் போது கொல்லப்பட்ட ஊனமடைந்த, படுகாயமடைந்த ஆசிரியர்களுக்கு அவர்களின் அடுத்த உரிமையாளருக்கும் பொது நிர்வாக சுற்றறிக்கை 21/88 இன் அடிப்படையில் 55 வயது வரை சம்பளம், ஓய்வூதியம், நட்டஈடு வழங்க உடன் நடவடிக்கையெடுக்க வேண்டும் என்று சங்கம் அமைச்சரைக் கேட்டுக் கொண்டது. இது பற்றிய விபரங்களைத் திரட்டி உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார்.

ஏ-9 வீதியூடாக அடுத்த வாரம் முதல் சொகுசு பஸ் சேவை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் ஏ-9 பாதையூடாக அடுத்த வாரத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையிலான சொகுசு பஸ் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மக்கள் எதிர்நோக்கும் போக்குவரத்து தொடர்பான கஷ்டங்களை ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுவந்ததையடுத்தே இந்த சொகுசு பஸ் சேவை நடத்தப்படவுள்ளது. இதன்படி முதற்கட்டமாக 5 சொகுசு பஸ் வண்டிகள் இச்சேவையில் ஈடுபடுத்தவுள்ளதுடன் காலப்போக்கில் கூடுதலான பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்படும்.

இந்த சொகுசு பஸ் சேவையின் முதல் பயணம் அடுத்த வாரம் கொழும்பில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த நிகழ்வில் அமைச்சர்கள் மற்றும் சமயத் தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

வடக்கு மாகாண பிரதம செயலகம் மாங்குளம் நகரில் அமையும் – ஆளுநர் சந்திரசிறி

chandrasiri.jpgவடக்கு மாகாணசபையின் பிரதம செயலக வளாகம் மாங்குளம் நகரில் அமைக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மாகாண மக்கள் இலகுவாக தங்கள் கருமங்களை நிறைவேற்றிக் கொள்ள அவர்கள் வாழும் இடத்தில் நிர்வாகம் இருக்க வேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி தெரிவித்தார்.

திருகோணமலை, வரோதய நகரில் தற்போது அமைந்துள்ள வடக்கு மாகாண சபையின் பிரதம செயலகத்தில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் ஆளுநர் , மாகாண அமைச்சர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் மத்தியில் ஆளுநர் உரையாற்றினார். இந்நிகழ்வு பிரதம செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

ஆளுநரின் செயலாளர் திருமதி ஆர்.விஜயலட்சுமி அறிமுகவுரையை நிகழ்த்தினார். இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணசபை இரண்டாகப் பிரிக்கப்பட்ட பின்னர் வடக்கு மாகாணசபைக்கான பிரதம செயலகம் திருகோணமலை வரோதய நகரில் அமைக்கப்பட்டு செயல்படுகிறது. வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களும் முற்றாக விடுவிக்கப்பட்டுவிட்டன. வளர்ச்சிப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதற்கு முன்னோடியாக வடக்கு மாகாணசபையின் பிரதம செயலகத்தை மாங்குளம் நகரில் அமைப்பதென அடையாளம் காணப்பட்டுள்ளது.

முக்கியமான பணியாக “வடக்கின் வசந்தம்’ செயற்றிட்டமும் ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தி, புனர்வாழ்வு அளிக்கும் பணியும் எம்முன்னே உள்ளன. யாழ்ப்பாணம், வவுனியா மாவட்டங்களில் பணியாற்றிய நிறைய அனுபவம் பெற்ற புதிய ஆளுநரின் தலைமையில் இப்பணி முன்னெடுக்கப்படும் என்று ஆளுநரின் செயலாளர் திருமதி விஜயலட்சுமி தெரிவித்தார்.

வன்னியில் 80% பகுதிகளில் கண்ணிவெடிகள் இல்லை; மீள்குடியேற்றத்தை உடனடியாக மேற்கொள்ள முடியும்: த.தே.கூட்டமைப்பு

வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கண்ணிவெடிகளை அகற்றும் தாமதமடைவது இடம்பெயர்ந்த சுமார் 3 இலட்சம் தமிழ் மக்களை அவர்களின் சொந்தக் கிராமங்களில் மீள்க்குடியேற்றுவதை தாமதிக்கச் செய்யும் என்று தமிழ் அரசியல் தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மீள்குடியேற்றத்தை பிற்போடுவதற்கான சாட்டாக கண்ணிவெடி அகற்றும் விடயம் அமையுமென அண்மையில் இந்திய அரசாங்கத்துடனான தமது சந்திப்பின்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் தெரிவித்திருந்தனர்.

80 வீதமான பகுதிகள் கண்ணிவெடிகளற்றவையாக உள்ளன. அதனால் வன்னி யுத்தவலயப் பகுதிகளில் அனேகமான இடம்பெயர்ந்த மக்களை அரசாங்கம் மீளக்குடியமர்த்த வேண்டும் என்று யாழ். மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பா.உ. சுரேஸ் பிரேமச்சந்திரன் த இண்டியன் எக்ஸ்பிரஸ் செய்திச் சேவைக்கு கூறியுள்ளார்.

இதேவேளை வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு இந்திய கண்ணிவெடி அகற்றும் குழுவை அனுப்பி வைக்குமாறு கொழும்பு விடுத்த கோரிக்கை தொடர்பாக இலங்கையும் இந்தியாவும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளன. இந்திய இராணுவத்திலிருந்து 500 பேர் கொண்ட கண்ணிவெடி அகற்றும் குழுவினரை இலங்கைக்கு இந்தியா அனுப்புமென கடந்த புதன்கிழமை கூட்டுப்படைத தலைமை அதிகாரி சரத் பொன்சேகா கூறியிருந்தார். இலங்கையில் ஏற்கனவே இந்திய கண்ணிவெடி அகற்றும் குழுவினர் உள்ளனர். சர்வார்த்தா கொரிகோன் ஆகிய இந்தக் குழுக்கள் ஓய்வுபெற்ற இராணுவத்தினரை உள்ளடக்கியதாகும். மன்னார் மாவட்டத்தமில் அவர்க்ள பணியாற்றுவதாக நம்பப்படுகிறது.

இலங்கைக்கு கடன் வழங்கும் விடயத்தில் சர்வதேச சமூகத்தின் அபிப்பிராயம் பரிசீலனைக்கு எடுக்கப்படும்

சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை விண்ணப்பித்திருக்கும் 1.9 பில்லியன் டொலர் கடனுதவி தொடர்பாக நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை இறுதிச் சந்திப்பை மேற்கொள்ளவுள்ள நிலையில், இந்த விடயத்தில் “சர்வதேச சமூகத்தின் சகல அபிப்பிராயங்களும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்’ என்று நாணய நிதியப் பெண் பேச்சாளர் கரோலின் அட்கின்சன் கூறியுள்ளார்.

இன்னர் சிற்றி பிரஸ் கேள்வியொன்றை எழுப்பியிருந்தது. வடக்கில் செலவிடப்படும் நிதியானது இந்த மக்களை சிறையில் வைத்திருப்போருக்காக செலவிடப்படுவதாக அறிக்கைகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக என்ன பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளீர்கள். இதுதொடர்பாக நாணய நிதியத்தின் பதில் என்ன? என்று இன்னர் சிற்றி பிரஸ் கேட்டிருந்தது. அதிகாரிகளுடன் சிறப்பான முறையில் கலந்துரையாடல்களை நாணய நிதியம் மேற்கொள்வதாக அட்கின்சன் பதிலளித்தார். ஆனால், எந்தவொரு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அவர் கருத்துத் தெரிவித்திருக்கவில்லை. பிரிட்டிஷ் அதிகாரிகள் அறிக்கைகளை எடுத்திருந்தனர். இலங்கையின் விண்ணப்பமானது முன்னகர்த்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதேசமயம், அமெரிக்காவின் நிலைப்பாடு மாற்றமடைந்துள்ளது. ஒபாமாவின் நிர்வாகமானது ஊடகங்களை உன்னிப்பாக அவதானிக்கின்றது. ஜூலை 13 இல் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் முன்பக்க செய்தியாகவும் மறுநாள் ஆசிரியர் தலையங்கமாகவும் இந்த விடயம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இலங்கைக்கான 1.9 பில்லியன் கடனுக்கு இப்போது சாத்தியம் குறைவாகவே காணப்படுவதை இந்தப் பத்திரிகையின் செய்தியும் ஆசிரியர் தலையங்கமும் சுட்டி நிற்கின்றன.

அடிக்குறிப்பு: ஐ.நா. பொதுச் சபை ஆவணத்தில் சர்வதேச நாணய நிதியம் தொடர்பான விமர்சனம் மற்றும் புவியியல் ரீதியான சமநிலை என்பன தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்தின் நிலைப்பாடு என்ன? என்று இன்னர் சிற்றி பிரஸ் கேள்வியெழுப்பியது. நாணய நிதியத்தின் நிலுவையாக இருக்கும் கடன் விண்ணப்பங்கள் தொடர்பான கேள்விகளை தடைசெய்தல் தொடர்பாகவும் கேள்வியெழுப்பப்பட்டது. உதாரணமாக இலங்கைக்கான கடன் வழங்குவது இன்னமும் நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. இது தொடர்பாக ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறதே தவிர நேரடியான பதில் கிடைக்கவில்லை என்று இன்னர் சிற்றி பிரஸ் கூறியுள்ளது.

பாக்கு நீரிணை மீது பாலம் குறித்து மீண்டும் பேச்சு

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாக்கு நீரிணையூடாக பாலமொன்றை நிர்மாணிக்கும் யோசனை குறித்து கொழும்பில் இடம்பெறவுள்ள பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்க (சார்க்) போக்குவரத்து அமைச்சர்கள் மாநாட்டில் ஆராயப்படுமென தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் அமால் குமாரகே கூறியுள்ளார்.

இந்தப் பாலமானது இலங்கையானது பிராந்தியத்தில் தனது அடையாளத்துவத்தை மீளப்பெறவும் கண்டத்தில் ஓர் அங்கமாக இருப்பதற்கும் உதவியாக அமையுமென்றும் அவர் கூறியுள்ளார். மணல்மேடுகளை உள்ளடக்கியதாக தற்போது இருந்து வரும் ஆதாம் பாலத்தின் மீது இந்தப் பாலம் அமைவது இரு நாடுகளுக்குமிடையில் கிட்டத்தட்ட தொப்புள்கொடி உறவை ஏற்படுத்தும் விடயமாக அமையுமென்று அவர் கூறியுள்ளார்.

இந்தியாவுடன் தரைவழி தொடர்பை நாம் ஏற்படுத்திக்கொண்டால் பயணத்துறையில் புரட்சியை ஏற்படுத்தியதாக அமையுமென்று கைத்தொழில் நிர்மாண சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கொன்றில் உரையாற்றுகையில் அமால் குமாரகே கூறியுள்ளார். இலங்கையின் வட, கிழக்குப் பகுதியில் போக்குவரத்தை மேம்படுத்துவது தொடர்பாக இந்தக் கருத்தரங்கு இடம்பெற்றது. இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் பாலத்தை நிர்மாணிக்க குறைந்தது 10 வருடங்களாவது எடுக்குமென்று தெரிவித்த குமாரகே இதனை நீண்டகால திட்டமாக கருதி செயற்படவேண்டுமென்று குறிப்பிட்டார்.

அடுத்தவாரம் கொழும்பில் தெற்காசிய போக்குவரத்து அமைச்சர்கள் ஒன்றுகூடவுள்ளனர். அச்சந்திப்பின்போது இலங்கை இந்திய பாலம் அமைக்கும் விடயம் ஆராயப்படுவது நிகழ்ச்சிநிரலில் இருப்பதாக அவர் கூறினார்.

இந்த யோசனையின் ஆரம்பகட்டத்தில் வீதி, பாலம் அமைப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருந்தது. இப்போது புகையிரதப்பாதை அமைப்பதற்கு முன்னுரிமை கொடுப்பது பற்றி சிந்திக்கப்படுகிறது.தூரத்தைக் கவனத்தில் கொண்டால் உபகண்டத்தை இலங்கையுடன் போக்குவரத்திற்கு இணைப்பதில் புகையிரதப்பாதை சிறந்த விடயமாக காணப்படுகிறது. குறுகியகால அடிப்படையில் இரு நாடுகளும் கொழும்புக்கும் தூத்துக்குடிக்கும் இடையில் அதிவேகப்படகு சேவைகளை மேற்கொள்ளமுடியுமென்றும் குமாரகே கூறியுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் வேலைவாய்ப்பு கோரி போராட்டம்

இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்கக் கோரி வேலையற்ற பட்டதாரிகளில் ஒரு தொகுதியினர் இம்மாதம் முதலாம் தேதி முதல் மட்டக்களப்பு நகரில் தொடர்ந்து கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.

பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் இந்தப் போராட்டத்தில் இன்றுடன் 19 வது நாளாக தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்

கடந்த 4 வருடங்களாக தங்களைப் போல் வேலையற்றிருக்கும் பட்டதாரிகளுக்கு பல்வேறு தரப்பினரால் அளிக்கப்பட்ட உறுதி மொழிகள் இது வரை நிறைவேற்றப்படாததை சுட்டிக் காட்டும் இப்பட்டதாரிகள், தங்களுக்கு வேலை வாயப்பு கிடைக்கும் வரை இப்போராட்டததை தொடர உத்தேசித்துள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் சுமார் 1500 வேலையற்ற பட்டதாரிகள் இருப்பதாக சுட்டிக் காட்டும் கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவரான குமாரசாமி ஜெயராஜா எதிர் வரும் செவ்வாய்க்கிழமை கிழக்கு மாகாண சபை அமர்வின் போது சாதகமான முடிவொன்றை தாம் எதிர் பார்ப்பதாகவும் கூறுகின்றார்.