அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

யாழ். தென்மராட்சியில் ஏர்பூட்டு விழா – விவசாயிகளுடன் பசில் ராஜபக்ஷ பங்கேற்பு

யாழ். தென்மராட்சியில் தனங்கிளப்பு, மறவன்புலவு கிராமசேவகர் பிரிவுகளில் சுமார் 10 வருடங்களுக்கு மேல் செய்கை பண்ணப்படாமல் தரிசு நிலங்களாக இருந்த 1124 ஏக்கர் வயற்காணிகளில் செய்கை பண்ணப்படும் ஏர்பூட்டு விழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், வடக்கின் வசந்தம் அபிவிருத்தி திட்டத்தின் ஒழுங்கமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ எம். பி. விவசாயிகளுடன் இணைந்து ஏர்பூட்டு விழாவில் கலந்து கொண்டார்.

மறவன் புலவு கிராம சேவகர் பிரிவிலிருந்து 560 விவசாயிகளும், தனங்கிளப்பு கிராமசேவகர் பிரிவிலிருந்து 540 விவசாயிகளும் கலந்துகொண்டனர். நேற்றைய ஏர்பூட்டு விழாவுக்காக 60 உழவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

1124 ஏக்கர் நிலத்தையும் உழுவதற்காக இவை ஆயத்த நிலையில் வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு விவசாயிகளுக்கும் உழுவதற்காக தலா 4000 ரூபா வீதம் வழங்கப்பட்டதுடன் தேவையான விதை நெல் மற்றும் உரம் இலவசமாகப் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் விவசாயத்தை ஊக்குவிப்பதற்கான பசுமை புரட்சி (வகா சங்கிராமய) வேலைத்திட்டத்திற்கமைவாக வடக்கில் தரிசு நிலங்களாகக் கிடக்கும் விவசாய நிலங்கள் யாவற்ற¨யும் கண்டறிந்து விளை நிலங்களாக மாற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன் ஒரு அங்கமாகவே தென்மராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தென்மராட்சி விவசாயிகள் மழையை நம்பி அடுத்த பெரும் போகத்திற்கான ஆரம்ப வேலைகளை நேற்று ஆரம்பித்தனர். வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறியின் ஏற்பாட்டின் கீழ் நடைபெற்ற இவ்விழாவில் சமூக சேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். அரச அதிபர் கே. கணேஸ் உட்பட உயரதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

இவ்விழாவைத் தொடர்ந்து யாழ். கச்சேரியில் நடைபெற்ற வடக்கின் அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டத்திலும் பசில் ராஜபக்ஷ கலந்து கொண்டார்.

மன்னார் வளைகுடாவில் அரிதாகும் பல்லி மீன்கள்

fish-2222.jpgமீனவர் வலைகளிலிருந்து தப்பிச் செல்லும் உடல் அமைப்பு கொண்ட பல்லி மீன்கள் மன்னார் வளைகுடா பகுதியில் அரிதாகக் காணப்படுவதாகக் கூறப்படுகின்றது. மன்னார் வளைகுடா பகுதியில் காணப்படும் அரிய வகை உயிரினங்களில் பல்லி மீனும் ஒன்று.

பல்லியைப் போன்று உடல் அமைப்பு கொண்ட இவை, மற்ற மீன்களைப் போல் உடலமைப்பை ஒத்திருந்தாலும், செயலில் வித்தியாசமானவை. இந்த மீன்கள் வலைகளில் சிக்குவதில்லை. நெருங்கிவரும் ஆபத்தை உணரும் தன்மை இதற்கு உண்டு. எனவே வலைகளில் அகப்படாது இது தப்பித்துக் கொள்ளும். கடலின் ஆழ் பகுதியில் காணப்படும் பல்லி மீன்களை, மன்னார் வளைகுடா பகுதியில் காண்பது தற்போது அரிதாக உள்ளதாகக் கூறப்படுகின்றது.

எனினும் தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தும் வேளை, அவ்வப்போது இவை பிடிபடுகின்றன. வெளிநாடுகளில் அதிகமாகக் காணப்படும் இவ்வகை மீன்கள், ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு இடம்பெயர்பவை. இந்த மீனைத் தேடிக் கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்குப் பெரும்பாலும் ஏமாற்றமே மிஞ்சும்.

மீன்களை உண்டு வாழும் சில கடல் வாழ் உயிரினங்களே, இவற்றின் அழிவுக்குக் காரணம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வகை மீன்களைக் காக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், அதனால பெரிய அளவில் பயன் கிடைப்பதில்லை என்றும் கூறப்படுகின்றது.

காலி, கராபிட்டிய வைத்தியசாலை: ரூ. 400 இலட்சம் செலவில் நரம்பியல் சிகிச்சை பிரிவு

40 மில்லியன் ரூபா (400 இலட்சம் ரூபா) செலவில் காலி, கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் நரம்பியல் சத்திர சிகிச்சை பிரிவொன்றை நிர்மாணிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சுகாதார போசாக்கு அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளார். இதன் மூலம் நரம்பு தொடர்பான நோய்களுக்கு கொழும்புக்கு வர வேண்டிய தேவை ஏற்படாது எனவும் தென்பகுதி மக்களுக்கு கராபிட்டிய ஆஸ்பத்திரியில் இதற்கான சிகிச்சைகளை பெற முடியும் எனவும் அறிவிக்கப்படுகிறது.

இந்தியாவின் பன்றிக் காய்ச்சல் பலி எண்ணிக்கை 83

10092009.jpgஇந்தியா வின் பன்றிக் காய்ச்சல் எண்ணிகை 83 ஆக உயர்ந்துள்ளது.  மகாராஷ்டிராவில் இதுவரை 43 பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகத்தில் மட்டும் இதுவரை 19 பேர் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியாகியுள்ளனர்.

இதுவரை இந்தியாவில் 17,777 பேரின் மாதிரிகள் பன்றிக் காய்ச்சல் சந்தேகம் தொடர்பாக சோதனை நடத்தப்பட்டது. அதில் 3273 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு இந்தோனேசியாவில் இன்று அதிகாலை மீண்டும் நிலநடுக்கம்

கிழக்கு இந்தோனேசியாவில் இன்று அதிகாலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் இது 5.7 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.

இன்று அதிகாலை சுமார் 4.57 மணிக்கு கிழக்கு இந்தோனேசியாவில் உள்ள கொரன்டாலோ மாகாணத்தில் மிதமான நிலநடுக்கம்  ஏற்பட்டது. இதன் மையம் அந்த மாகாணத்தில் இருந்து 87 கிமீ தென்கிழக்கே சுமார் 95 கிமீ ஆழத்தில் இருந்தது.

சேதங்கள் குறித்தும் எந்த தகவலும் உடனடியாக கிடைக்கவில்லை என அந்நாட்டின் பூகோள ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

மீள் பிரேத பரிசோதனையில் மஸ்கெலிய சிறுமிகளின் சடலங்கள்

maskeliya.jpgகொழும்பு பௌத்தலோக்க மாவத்தையிலுள்ள சாக்கடையில் சடலமாக மீட்கப்பட்டுப் பின்னர் மஸ்கெலியா முள்ளுகாமம் தோட்டத்தில் புதைக்கப்பட்ட இரண்டு மலையக சிறுமிகளான சுமதி ,ஜீவராணி ஆகியோரின் சடலங்கள் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன. மீள் பிரேத பரிசோதனைக்காக சடலங்கள் இன்று 27 ஆம் திகதி கண்டி பொலிஸ் சவச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

கொழும்பு பௌத்தலோக்க மாவத்தையில் வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த இந்தச்சிறுமிகள் இருவரும் பௌத்தாலோக்க மாவத்தையிலுள்ள சாக்கடையில் கடந்த 15 ஆம் திகதி சடலங்களாக மீட்கப்பட்டனர். இந்தச் சடலங்களின் பிரதேச பரிசோதனைக்குப்பின் கடந்த 18 ஆம் திகதி முள்ளுகாமம் தோட்ட மயானத்தில் இந்தச் சிறுமிகளின் சடலங்கள் புதைக்கப்பட்டன.

இந்நிலையில் இவர்களின் மரணம் தொடர்பில் சிறுமிகளின் பெற்றோர் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் மனுவொன்றினை சமர்ப்பித்திருந்தனர். இதனை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட பிரதம நீதவான் சிறுமிகளின் சடலங்களை ஹட்டன் நீதிமன்றத்தின் ஊடாக தோண்டி எடுத்து மீண்டும் பிரேத பரிசோதனையை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டிருந்தார்.

இதற்கேற்ப இன்ற 27 ஆம் திகதி நண்பகல் வேளையில் சிறுமிகளின் சடலங்கள் ஹட்டன் நீதவான் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டன. தோண்டி எடுக்கப்பட்ட சடலங்கள் சிறுமிகளின் பெற்றோர்களாலும் கொழும்பு மலர்ச்சாலை ஒன்றின் ஊழியர்களாலும் அடையாளங் காணப்பட்டு உறுதி செய்யப்பட்டன.

இதன் பின்பு முள்ளுகாமத் தோட்ட லொறியில் ஏற்றப்பட்ட சடலங்கள் கண்டி பொலிஸ் பிரேதசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டன. சிறுமிகளின் பெற்றோரும் சடலங்களுடன் கண்டிக்குச் சென்றுள்ளனர். சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்ட வேளையில் கடும் மழை பெய்தமை குறிப்பிடத்தக்கது. மழையையும் பொருட்படுத்தாமல் பெருந்திரளான தோட்ட மக்கள் அங்கு திரண்டிருந்தனர்.

அத்துடன் கண்டி சட்ட வைத்திய அதிகாரி, ஹட்டன் பொலிஸ் பிரிவு அதிகாரிகள்,பொலிஸ் உத்தியோகத்தர்கள், சட்டத்தரணிகள், அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் உட்படப் பலர் வந்திருந்தனர்.  கண்டிக்குக் கொண்டு செல்லப்பட்ட சடலங்கள் சட்டவைத்திய அதிகாரியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான பிரேத பரிசோதனை நாளை 28 ஆம் திகதி மீண்டும் இடம்பெறவுள்ளது

விடுவிக்கப்பட்ட இந்து குருமார் இன்று யாழ் பயணம்

hindu_priest111.jpgவவுனியா இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளவர்களில் 58 இந்து குருமார் குடும்பங்களைச் சேர்ந்த 222 பேர் இராணுவத்தின் வழித்துணையுடன் இன்று யாழ்ப்பாணம் பயணமாகியுள்ளனர்.

அதேவேளை,  திருகோணமலை,  மட்டக்களப்பு,  அம்பாறை ஆகிய கிழக்கு மாகாண மாவட்டங்களுக்குச் செல்ல வேண்டிய 6 குடும்பங்களைச் சேர்ந்த 21 பேருக்கான பிரயாண ஏற்பாடுகளையும் அதிகாரிகள் செய்துள்ளனர்.

இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள இந்துமத குருக்கள் மற்றும் அவர்களது குடும்பங்களைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்டவர்கள், முகாம்களில் இருந்து வவுனியா சைவப்பிரகாச மகளிர் மகாவித்தியாலயத்திற்கு அழைத்து வரப்பட்டு,  நேற்றைய தினம்,  அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தமை தெரிந்ததே.

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் திரட்டிய புள்ளிவிபரத் தகவல்களின்படி 177 குடும்பங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்களைச் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

107 குடும்பங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட இந்து மத குருமார்கள் நேற்று இடைத்தங்கல் முகாம்களில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். இவர்கள் வவுனியா,  மன்னார்,  யாழ்ப்பாணம், திருகோணமலை,  மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களுக்குச் செல்வதற்கான பிரயாண ஒழுங்குகளை வவுனியா செயலக அதிகாரிகள் செய்துள்ளனர்.

இதேவேளை,  உறவினர்களோ அல்லது செல்வதற்கு சொந்த இடங்களோ இல்லாத முல்லைத்தீவு,  கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 4 குடும்பங்களைச் சேர்ந்த 16 பேரை அகில இந்து மாமன்றம் பொறுப்பேற்று திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு அழைத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

செனல்-4 வீடியோ காட்சி குறித்து வெளிவிவகார அமைச்சு உரிய நடவடிக்கை எடுக்கும்

anurapriyadarsanayapa.jpgஇலங் கையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செனல்- 4 ஒளிபரப்பிய வீடியோ காடசி குறித்து இலங்கை  வெளிவிவகார அமைச்சு முழுமையான நடவடிக்கை எடுக்கும் என தகவல் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாபா தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது செனல் 4 தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட செய்தி ஒன்றைக் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இலங்கை இராணுவ வீரர்கள் நல்லொழுக்கத்திலும் வீரத்திலும் சிறந்து விளங்குகின்றவர்கள். பாரிய அர்ப்பணிப்புக்கும் தியாகத்துக்கும் மத்தியில் நாட்டுக்கு அவர்கள் பெற்றுத்தந்த வெற்றியை கொச்சைப்படுத்தும் வகையிலும் அவர்களுக்கும் நாட்டுக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் அந்த வீடியோ காட்சி போலியாகத் தயாரித்துக் காட்டப்பட்டுள்ளது.

அவ்வாறு காண்பிக்கப்பட்ட காட்சியை அரசாங்கம் முற்றாக மறுப்பதுடன் வன்மையாகக் கண்டிக்கிறது. எவ்வாறு முறையாக நடந்துகொள்ள வேண்டும் என்பது பற்றி எமது இராணுவ வீரர்கள் நன்கு அறிவார்கள். அவர்களின் சீரான நடத்தையையும் திறமையையும் கண்கூடாகக்கண்ட பல நாடுகள் அவர்கள் மூலம் தமது வீரர்களுக்கு பயிற்சி அளிக்க விரும்புகின்றன என அமைச்சர் மேலும் தெரிவித்தார்

மின்சார சபை ஊழியர்களின் விடுமுறை ரத்து : தொழிற்சங்கங்கள் நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம்

ecblogo.jpgஇலங்கை மின்சார சபை தனது ஊழியர்களின் விடுமுறைகள் அனைத்தையும் ரத்து செய்திருப்பதாக இன்று அறிவித்துள்ளது.

அதேவேளை, இலங்கை மின்சார சபை ஊழியர் தொழிற்சங்கங்கள் இன்று நள்ளிரவு முதல் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவிருப்பதாகத் தெரிவித்துள்ளன.

ஊழியர்கள் சம்பள உயர்வு கோரியும் மேலும் சில கோரிக்கைகளை முன் வைத்தும் இந்த வேலை நிறுத்தம் நடைபெறவிருப்பதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

ஆர்ப்பாட்டங்கள் ஏதுமற்ற வேலை நிறுத்தமாக இது அமையுமென தொழிற்சங்க வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

வடமாகாண சபை தலைமையகம் மாங்குளத்தில்

janakabandarathennakoon.jpgவட மாகாண சபைக்கான தலைமையகக் கட்டடம் ஒன்றை மாங்குளத்தில் அமைக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. அத்துடன் யுத்தத்தால் அழிவுற்ற மற்றும் சேதமடைந்த உள்ளுராட்சி மன்றக் கட்டடங்களை புதிதாக நிர்மாணிக்க அல்லது புனரமைக்கவும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்கோன் இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.

மாகாண சபையின் தலைமையகக் கட்டட நிர்மாணத்துக்கு 2010 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் 900 மில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ளது. ஏனைய கட்டட நிர்மாணம் மற்றும் புனரமைப்புப் பணிகளுக்கு 625 மில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ளது.