தமிழ், சிங்களம், முஸ்லிம் என இனவாத அரசியல் நமது நாட்டிற்கு உகந்ததல்ல. குறுகிய தீர்மானங்களை தவிர்த்து நாட்டை முன்னேற் றக்கூடிய சிறந்த தீர்மானங்களை சிந்தித்து மேற்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய மாநாடும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வாழ்த்தும் மாபெரும் மக்கள் பேரணிக் கூட்டமும் நேற்று அக்கரைப்பற்று பொது விளையாட்டரங்கில் விமரிசையாக நடைபெற்றன.
கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து சகல இன மதங்களையும் சார்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற இம்மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதான உரைநிகழ்த்தியதுடன் தேசிய காங்கிரசின் தலைவர் ஏ. எல். எம். அதாவுல்லா சிறப்புரை நிகழ்த்தினர். மாநாட்டின் இறுதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தேசிய காங்கிரஸ் சார்பில் அமைச்சர் ஏ. எல். எம். அதாவுல்லா விருது வழங்கி கெளரவித்தார். இந்த மாநாட்டில் ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது:
2005 ஆம் ஆண்டு நான் அக்கரைப்பற்றிற்கு வருகை தந்த போது இங்கு வீசிய காற்றைப் பாரமானதாக உணர்ந்தேன். இன்று அது இலகுவாகி சுதந்திரக் காற்று வீசுவதைக் காண முடிகிறது. இந்த நாட்டை உடன்படிக்கை மூலம் துண்டாடிய யுகம் மாறி இந்த நாட்டை எம்மால் மீள ஐக்கியப்படுத்த முடிந்துள்ளது.
தேசிய காங்கிரஸின் மாநாட்டிற்கு இன்று வருகைதந்து இங்குள்ள மக்களை சந்திப்பதில் பெருமையும் மகிழ்ச்சியுமடைகின்றேன். இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்கள் எமது சகோதரர்கள் போல் வாழ்கின்றனர். நாம் எல்லோரும் ஒரு தாயின் மக்கள் எம்மத்தியில் எந்தவித பேதமும் இருக்க முடியாது.
முப்பது வருடகால பயங்கரவாதம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு இன்று நாட்டில் சந்தேகமின்றி அச்சமின்றி சகலரும் வாழும் நிலை உருவாகியுள்ளது. காத்தான்குடி பள்ளிவாசலில் இடம்பெற்றது போன்ற துர்ப்பாக்கிய சம்பவங்கள் இனி எங்கும் நடக்காது.
கிழக்கில் வயலுக்குத் தொழிலுக்குப் போகின்றவர்களும், பாடசாலைக்குப் போகின்ற மாணவர்களும் கூட அச்சத்துடனும் பயத்துடனும் வாழ்ந்த காலம் இருந்தது. இன்று அந்நிலை இல்லை.
தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற இனவாத அரசியல் இந்த நாட்டுக்கு உகந்த தல்ல. இனி இந்த நாட்டில் சிறுபான்மை என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்த தேசத்தின் மீது அன்பு செலுத்தும் மக்கள் இந்த நாட்டின் பிள்ளைகளே. நான் முதல் இரண்டாவது, மூன்றாவது என முழுமையாக நேசிப்பது இந்த நாட்டைத்தான். நாட்டு மக்களும் அப்படியே நாட்டை நேசிக்க வேண்டும். எந்தத் தீர்மானம் எடுத்தாலும் அது குறுகிய தீர்மானமாக இருக்கக் கூடாது. அத்தகைய எண்ணம் வேண்டாம்.
அமைச்சர் அதாவுல்லா ஒரு சிறந்த தலைவர். உங்கள் தலைவர் அவர் முழு நாட்டிற்கும் சேவை செய்யும் திறன் படைத்த செயல்வீரர். கிழக்கின் உதயம் மூலம் இப்பகுதி அபிவிருத்தி காணப்படுகிறது. உங்கள் எதிர்காலம் ஒளிமயமாவது நிச்சயம். இந்தவேளையில் நாம் மறைந்த தலைவர் எம். எச். எம். அஷ்ரப்பை நினைவு கூருவது சிறந்தது.
முஸ்லிம் மக்கள் என்னிடம் கேட்டதையெல்லாம் நான் நிறைவேற்றியுள்ளேன். இன்று எமது அரசில் உள்ள சகல முஸ்லிம்களும் அமைச்சர்கள் என்பதை மறக்கக் கூடாது. கிழக்கில் தனியான மாகாண சபையொன்று இப்போது இயங்குகிறது. ஒலுவில் துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இது உங்களுக்கான பெரும் வரப்பிரசாதம் ஆகும்.
நான் முஸ்லிம்களின் மத வழிபாட்டுக்குத் தடைபோடுவதாக பலர் பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதனை நீங்கள் நம்பவேண்டாம். இலங்கை வானொலியில் ஒரு நாளைக்கு ஐந்து தடவைகள் ‘பாங்கு’ சொல்வதற்கு வழிவகை செய்தவன் நானே என்பதை மறந்துவிட வேண்டாம். நான் உங்கள் உற்றதோழன் நீங்கள் என்னை நம்பலாம்.
இந்த மாகாணம் 30 வருடங்களாக பாதிக்கப்பட்டு இன்று முழு மாகாணத்திலும் அபிவிருத்திகள் இடம்பெறுகின்றன. உங்கள் வெற்றி உங்கள் பிள்ளைகளின் வெற்றியும் நாட்டின் வெற்றியுமாகும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த அழகிய தேசத்தை ஒரேகொடியின் கீழ் கட்டியெழுப்புவோம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.