அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

“சனல்-4” வீடியோ போலியானது – உதய நாணயக்கார விளக்கம்

ExtraJudicialKillingsஇலங்கை இராணுவம் இளைஞர்கள் சிலரை சுட்டுக்கொல்வது போன்று சனல்4 தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோ போலியானது என்பது தமது விசாரணைகள் மூலம்தெரியவந்துள்ளதென இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

வீடியோ போலியாகத் தயாரிக்கப்பட்டது என்பதை தாம் உறுதியாக நம்புவதாக  தெரிவித்துள்ள பிரிகேடியர் உதய நாணயக்கார, விடுதலைப் புலிகளே இதனைச் செய்திருக்கலாம் என்பதற்கான அனைத்து தடயங்களும் புலப்படுகின்றன எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இலங்கை இராணுவத்தின்மீது  முன் வைக்கப்படும் குற்றச்சாட்டு முரணானது பிழையானது என்பது பல விதங்களிலும் தெரியவந்துள்ளது எனக்  கூறியுள்ள பிரிகேடியர், குறிப்பிட்ட வீடியோவில் இலங்கை இராணுவச் சீருடையில் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற் கொண்டவர் இராணுவச் சின்னங்கள் எதனையும் சூடியிருக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொள்பவர் நீளத் தலைமுடி வளர்த்திருக்கின்றார் என்றும் சுட்டிக்காட்டியுள்ள அவர், தலைமுடி வளர்ப்பது இலங்கை இராணுவ ஒழுக்கநெறிக்கு முரணானது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், சுடப்படுபவர்களின் தலைமுடி வெட்டப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டியுள்ள அவர், இவர்கள் இலங்கை இராணுவத்திலிருந்து காணாமல் போனவர்களாக இருக்கலாம்  என்றும் தெரிவித்துள்ளார்.      

கைவிடப்பட்ட கால் நடைகளைத் தேடிக் கண்டுபிடிக்க அனுமதி!

goats.jpgமட்டக் களப்பு தொப்பிகலை பிரதேசத்தை அண்மித்த பகுதியில் கைவிடப்பட்ட கால் நடைகளைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கான  அனுமதியை ஈரளற்குளம் இராணுவ முகாம் பொறுப்பதிகாரி மேஜர் ரி.ஏ.விஜயவர்தன இன்று முதல் வழங்கியுள்ளார். இம்மாத முற்பகுதியில் இறுதியாக குடியமர்த்தப்பட்ட ஈரளற்குளம் கிராம சேவையாளர் பிரிவிலுள்ள கால் நடை உரிமையாளர்கள் இது தொடர்பாகப் பாதுகாப்பு அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்ததையடுத்தே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

2006 – 2007 காலப் பகுதிகளில் கிழக்கில் மேற்கொள்ளப்டப்ட இராணுவ நடவடிக்கை காரணமாக அப்பிரதேசத்தைச் சேர்ந்த கிராமங்களிலிருந்து மக்கள் வெளியேறி தற்போது மீண்டும் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

அப்பகுதி கிராம சேவை அலுவலர் சின்னத்தம்பி வீரசிங்கம் தலைமையில் நடைபெற்ற கிராம அபிவிருத்திச் சங்க அங்குரார்ப்பணக் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே,  இராணுவ முகாம் பொறுப்பதிகாரி இந்த அனுமதி பற்றி தெரிவித்தார்.

மிதி வெடி அகற்றப்பட்டுள்ளதை உறுதிபடுத்தி சான்றிதழ் கிடைத்த 13 இடங்களைக் குறிப்பிட்டுää அந்த இடங்களில் கால் நடைகளைத் தேடிச் செல்லவும் மேய்ச்சலுக்கு விடவும் அவர் அனுமதி வழங்கியுள்ளார்.

சுனாமியை கண்டறியும் முதற்கட்ட சோதனை நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

tunami.jpgசுனாமி ஏற்படும் பொழுது அதனை கண்டறியும் நோக்கில் நிர்மாணிக்கப்பட்ட கோபுர தொகுதியை பரிசோதிக்கும் நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுனாமி ஏற்படும்போது வெளிப்படும் ஒலி அலைகள் மற்றும் ஒலிபெருக்கியின் ஊடாக மேற்கொள்ளப்படும் அறிவித்தல்களுக்கு மக்கள் இன்று அச்சங்கொள்ளத் தேவையில்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர நடவடிக்கை பிரிவின் பணிப்பாளர் பிரிகேடியர் நிமால் வேரகம தெரிவித்துள்ளார்.

களுத்துறை மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கோபுரங்கள் இன்று காலை 10 முதல் மாலை 5 வரை முதல் கட்டம் கட்டமாகப் பரிசோதிக்கப்படவுள்ளன. இந்த பரிசோதனை நடவடிக்கைகள் பின்னர் ஏனைய மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 
இந்த கோபுர தொகுதி செயல்பட ஆரம்பித்ததும் எதிர்வரும் காலங்களில் ஏற்படும் சுனாமி சுறாவளி மற்றும் அசாதாரண இயற்கை அனர்த்தங்கள் குறித்து முன்னரே அறிந்து அது குறித்த எச்சரிக்கையை மக்களுக்கு உடனடியாக அறிவிக்க முடியும் எனவும் நிமால் வேரகம மேலும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் வன்முறைகளிலிருந்து தென் மாகாண மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்: சஜித் பிரேமதாஸ

sajith_premadasa.jpgஅரசாங் கத்தின் வன்முறைகளிலிருந்து தென் மாகாண மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். தென் மாகாணசபை தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பல்வேறு வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
 
ஜனாதிபதி பிரதிநிதித்துவப்படுத்தும் தென் மாகாணசபையின் தேர்தல்கள் சுதந்திரமானதும், நியாயமானதுமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், தேர்தல் அறிவிக்கப்பட்ட தினம் முதல் வன்முறைகள் இடம் பெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார். தென் மாகாணசபைத் தேர்தல்களுக்காக அமைக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சி காரியாலயங்கள் பல தாக்கி அழிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை விவகாரம் குறித்து ஐ.நா. செயலாளருடன் சொல்ஹெய்ம் பேச்சு

banki-moon.jpgநோர் வேக்கு விஜயம் செய்துள்ள ஐ.நாவின் செயலாளர் பான் கீ மூன், இலங்கை விவகாரம் தொடர்பில் அந்நாட்டின் பிரதமர் ஜோன் ஸ்ரோடன் பேர்க் மற்றும் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும் இலங்கைக்கான முன்னாள் சமாதானத் தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் ஆகியோரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். நேற்றுக் காலை இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. காலநிலை மாற்றம் குறித்து ஆராய்வதற்காக இருநாள் விஜயமொன்றை மேற்கொண்டுள்ள பான் கீ மூனுக்கு நோர்வேயின் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் இலங்கை விவகாரம் குறித்து எடுத்துக் கூறியுள்ளார். இச் சந்திப்பினையடுத்து ஐ.நா.வின் செயலாளர் பான் கீ மூனும் நோர்வேயின் பிரதமர் ஜோன் ஸ்ரோடன் பேர்க்கும் இணைந்து செய்தியாளர் மாநாடொன்றினை நடத்தினர்.

இந்தச் செய்தியாளர் மாநாட்டில் இலங்கை குறித்து ஐ.நா.வின் செயலாளர் கருத்து தெரிவிக்கையில், இலங்கை விவகாரம் தொடர்பில் இணைத்தலைமை நாடுகளுடன் இணைந்து ஐ.நா. பணியாற்றி வருகின்றது. நோர்வேயும் இதில் பங்காற்றி வருகின்றது. சர்வதேச சட்டங்களை இலங்கை மீறக்கூடாது. மனித உரிமை நியமனங்களின் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் செயற்பட வேண்டும். இலங்கை விவகாரம் தொடர்பில் அந்த நாட்டின் ஜனாதிபதியுடன் நான் தொடர்பு கொண்டுள்ளேன். தொலைபேசியில் நான் பல தடவை அவருடன் பேசியுள்ளேன். இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வினை உள்ளடக்கிய அரசியல் ர்வு முன்வைக்கப்பட வேண்டும். இலங்கையில் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ள போதும் அரசியல்ரீதியான தீர்வு வழங்கப்படவில்லை. எனவே இவ்விடயத்தில் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவில் இந்தச் சந்திப்பை நடத்திய ஐ.நா.வின் செயலாளர் பான் கீ மூன், காலநிலை மாற்றம் குறித்து ஆராய்வதற்காக நேற்று நோர்வேயின் வடதுருவப் பகுதிக்கு விஜயம் செய்துள்ளார். இன்று அவர் மீண்டும் அமெரிக்கா திரும்பவுள்ளார்.

லிபியாவில் ஜனாதிபதிக்கு மகத்தான வரவேற்பு!

president_libiya_.jpgலிபியாவின் 40ஆவது சுதந்திரதினக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காக நேற்று அந்நாட்டுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.

லிபியத் தலைவர் கேர்னல் முஅம்மர் அல்கடாபியின் அழைப்பின் பேரில் அங்கு சென்றுள்ள ஜனாதிபதியை அந்நாட்டின் திட்டமிடல் அமைச்சர் அப்துல் ஹபீத் அல்-ஸ்லாட்னி திரிபோலி நகரிலுள்ள மடிகா விமானநிலையத்தில் வரவேற்றார். இந்த நிகழ்வில் எகிப்துக்கான இலங்கைத் தூதுவர் அன்ஸாரும் கலந்துகொண்டார்.
 
ஜனாதிபதி அண்மையில் லிபியாவுக்குச் சென்றிருந்தபோது இரு நாடுகளுக்குமிடையில் இணக்கம் காணப்பட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அந்நாட்டு உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விழாவில் பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும் கலந்துகொள்ளவுள்ளதோடு அவர்களுடனும் ஜனாதிபதி பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, லிபியாவின் 40ஆவது சுதந்திரதின நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த விசேட குழுவொன்றும் அங்கு சென்றுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

ஸ்ரீ தலதா மாளிகையில் சர்வதேச பௌத்த தொல்பொருள் காட்சியகம்

daladamaligawa.jpgசர்வதேச பௌத்த தொல்பொருள் காட்சி நிலையம் கண்டி, ஸ்ரீ தலதா மாளிகையில் நிர்மாணிக்கப்படவுள்ளது. இந்த நிலையத்தின் முதற்கட்டப் பணிகள் ,ஆரம்பித்து வைக்கப்பட்டதாக தலதா மாளிகையின் தியவதன நிலமே தெரிவித்துள்ளார்.
 
13 சர்வதேச பௌத்த நாடுகளின் ஒத்துழைப்புடன் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த நிலையத்தில் பௌத்த மதத்தின் தோற்றம் உட்பட பௌத்த மதம் தொடர்பான அனைத்து அம்சங்களும் உள்ளடங்கியிருக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

கதிர்காமம் தேவாலயங்களின் ரன்தோலிப் பெரஹர இன்று ஆரம்பம்!

வரலாற்றுப் பெருமைமிக்க கதிர்காமம் எம்பெக்க தேவாலயம் மற்றும் தேவத பண்டார தேவாலயம் ஆகியவற்றின் முதலாவது ரன்தோலிப் பெரஹர இன்று ஆரம்பமாகவுள்ளதாக இரு தேவாலயங்களினதும் பஸ்நாயக்க நிலமே தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி வரை தினமும் நடைபெறவுள்ள இப்பெரஹர நிகழ்வுகளில் புராதன கண்டி ஓவியங்கள் மற்றும் நடனம் ஆகியவற்றுடன் காவடி ஆட்டம் மற்றும் யானைகளின் வீதி அணிவகுப்பு என்பனவும் இடம்பெறவுள்ளன. இப்பெரஹரவின் இறுதி வைபவம் செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி நடைபெறும் நிகழ்வுகளுடன் முடிவடையவுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

கதிர்காமம் எம்பெக்க தேவாலயத்தில் மூன்றாம் விக்ரமபாகு மன்னனின் காலத்தில் கட்டப்பட்ட மரத்தினாலான கட்டிடக் கலை அம்சங்கள் காணப்படுவதால் இந்த தேவாலயம் உலகப் பிரசித்தி பெற்றதாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

ஜப்பான் பாராளுமன்றத் தேர்தலில் 50 வருட ஆட்சிக்கு முற்றுப்புள்ளி – ஜனநாயகக் கட்சி 301 ஆசனங்கள் லிபரல் கட்சிக்கு 119 மட்டுமே

japan-new-pri.jpgஜப்பானில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி பெரு வெற்றியீட்டியது. மொத்தமாக உள்ள 480 ஆசனங்களில் 301 ஆசனங்களை ஜனநாயகக் கட்சி வென்றது. ஆட்சியிலிருந்த பிரதமர் ரரோ அசோவின் லிபரல் கட்சி 119 ஆசனங்களை மட்டுமே பெற்று தோல்வியடைந்தது.

இதையடுத்து ஜப்பானை ஐம்பது வருடங்களாக ஆண்டு வந்த லிபரல் கட்சி எதிர்க்கட்சியாக மாறியது. தோல்வியை ஏற்றுக்கொண்ட பிரதமர் ரரோ அசோ பதவி விலகப் போவதாக அறிவித்தார். ஜனநாயகக் கட்சியின் தலைவர் யுகியோ ஹற்றோயாமா (வயது 62) புதிய பிரதமராகப் பதவியேற்பார். புதிய அரசாங்கத்தை அமைக்கும் முயற்சிகளில் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஈடுபட்டுள்ளனர்.

புதிய அரசாங்கம் கடுமையான சவால்களை எதிர்கொள்ள நேரிடுமெனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடி, இயற்கை அனர்த்தங்களால் பாதிப்புற்ற மக்களின் மறுவாழ்வு என்பவை புதிய அரசாங்கத்துக்கு முன் உள்ள சவால்களாகும். ஜப்பானுடன் உறவுகளைத் தொடர விரும்புவதாக தென் கொரியா அறிவித்துள்ளதுடன் பல நாடுகள் புதிய அரசாங்கத்துக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளன.

புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள யுகியோ ஹற்றோயாமா கட்சியின் வெற்றி குறித்து வானொலியில் உ¨யாற்றினார். முன்னய அரசாங்கம் பின்பற்றிய கொள்கைகளை அடியோடு மாற்றப் போவதில்லை.

பொறுமையாக இருந்து இக்கொள்கைகளைப் படிக்க வேண்டும் ஆராய வேண்டும். மக்களின் எதிர்பார்ப்பையும் தேவைகளையும் கருத்தில் கொண்டு இக்கொள்கைகள் சிலவற்றை மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனக் கூறினார்.

மக்கள் புதிய கட்சி, சமூக ஜனநாயகக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகள் புதிய அரசாங்கத்தில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளன.

இன்னும் இரண்டு வாரங்களின் பின்னர் பாராளுமன்றத்தில் புதிய பிரதமர் பதவியேற்கவுள்ளார்.

சரணடைந்த, கைதான புலி உறுப்பினர்களின் புனர்வாழ்வு நடவடிக்கைக்கு 20 நிலையம்

புலிகள் இயக்கத்திலிருந்து பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்த மற்றும் மனிதாபிமான நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்டவர்களின் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கென 20 புனர்வாழ்வு நிலையங்கள் புதிதாக நிறுவப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் தயாரத்னாயக்க நேற்றுத் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கின் பல்வேறு பிரதேசங்களில் இந்த 20 புனர்வாழ்வு நிலையங்கள் நிறுவப்படவுள்ளன.

ஐநூறு பேர் வீதம் 20 நிலையங்களில் இவர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்படவுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஷேட பணிப்பின் பேரில் தற்பொழுது பத்தாயிரம் பேருக்கும் உச்சகட்ட புனர்வாழ்வு வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். உறுப்பினர்களின் தனித்தனி விபரங்களை சேகரிக்கும் நடவடிக்கைகள் தற்பொழுது பூர்த்தி செய்யப்பட்டுள்ளது என்றும் இத ற்கு சுமார் மூன்று வாரங்கள் செலவிடப் பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

10 ஆயிரம் பேர்களில் 1777 பெண் உறுப்பினர்களும 565 பாடசாலை பருவ மாணவர்களும் அடங்குவர். இவர்களில் பாடசாலை செல்லும் வயதுடைய மாணவர்கள் தமது கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சகல செயற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் தெரிவித்தார்.

தற்பொழுது 10 ஆயிரம் பேர்களும் 12 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவற்றில் நான்கு பாடசாலைகளாகும். இந்த பாடசாலைகளை கற்றல் நடவடி க்கைகளுக்காக வெகுவிரைவில் பொறு ப்புக் கொடுக்க வேண்டியுள்ளதால் தற்காலிகமாக 5 முகாம்கள் நிறுவப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த இவர்களது செயற்பாடுகளையும், சிந்தனைகளையும் முழுமையாக மாற்றியமைத்து சமாதான சிந்தனையுடன் வாழ தேவையான வகையில் உச்சகட்ட புனர்வாழ்வு வழங்குவதே பிரதான நோக்கம் என்றும் மேஜர் ஜெனரல் தயா ரத்னாயக்க குறிப்பிட்டார்.

பெருந்தொகையானவர்களுக்கு இது போன்ற புனர்வாழ்வு வழங்கப்படுவது உலகிலேயே இதுவே முதற் தடவை என்று குறிப்பிட்ட அவர் பயங்கரவாதத்தை முறியடித்து அரசாங்கம் முன்னெடுத்து வரும் இதுபோன்ற திட்டங்களை பாராட்டும் வகையில் உலகின் பல நாடுகள், முன்னணி அமைப்புக்கள் ஒத்துழைப்புக்களை வழங்க முன்வந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.