கிழக்கு உதயம் அபிவிருத்தித்திட்டத்திற்கென நிதி சேகரிக்கும் வகையில் சமாதான வாகன ஊர்வலம் நடத்தப்படவுள்ளது. தேசத்தை கட்டியெழுப்பும் அமைச்சும் இலங்கை விமானப் படையும் இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளன.
இதற்கான அனுசரணையினை 4×4 எட்வன்சர் கழகம் மற்றும் ஜோன் கீல்ஸ் ஓட்டோ மேஷன் தனியார் நிறுவனம் வழங்குகின்றது. இதன் மூலம் கிடைக்கப்பெறும் நிதி திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள திவுல்வெவ கிராமத்தில் சகல வசதிகள் கொண்ட பாடசாலையொன்றை நிறுவப் பயன்படுத்தப்படும். புலிகளால் பாதிக்கப்பட்டு பல. இன்னல்களுக்கு முகம் கொடுத்த 160 குடும்பங்கள் தற்பொழுது இப்பகுதியில் மீளக் குடியமர்த்தப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
மூன்று நாட்களாக நடைபெறும் இவ்வாகன ஊர்வலம், இம்மாதம் 19ம் திகதி காலை கொழும்பிலிருந்து ஆரம்பமாகி, அவிசாவளை, இரத்தினபுரி, பெல்மதுளை, எம்பிலிப்பிட்டி ஹம்பாந்தோட்டை, திஸ்ஸமஹாராம ஊடாக அறுகம்பே சென்றடையும். முதல்நாள் இரவை களிப்பதற்கென அறுகம்பே கடலோரப் பகுதியில் முகாமொன்று அமைக்கப்படும். இரண்டாம் நாள் ஊர்வலம், பொத்துவில், கோமாரி, திருக்கோவில், அக்கரைப்பற்று, கல்முனை, காத்தான்குடி, ஏறாவூர், பாசிக்குடா, மூதூர் மற்றும் கிண்ணியா ஊடாக திருகோணமலை சென்றடையும். இறுதி நாள் நிகழ்வில் ஏற்பாட்டுக்குழுத் தலைவரும், அமைச்சருமான புஞ்சிநிலமே, தேசத்தைக் கட்டியெழுப்புதல் அமைச்சின் அதிகாரிகள் உட்பட அப்பகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் பங்கு கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.