ஒரு அமைச்சருக்கு வழங்கப்படும் பாதுகாப்பை விட 12 மடங்கு அதிகப் பாதுகாப்பு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் தனது கட்சி ஆட்சி நடத்தும் இலங்கையில் தனது உயிருக்கே பாதுகாப்பில்லை என அவர் கேரளாவில் தெரிவித்துள்ள கருத்து அடிப்படை ஆதாரமற்றதெனவும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா கூறினார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது,
முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் 80 க்கும் அதிகமான பாதுகாப்பு அதிகாரிகள் 12 வாகனங்கள் 08 சாரதிகள் என பலத்த பாதுகாப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளபோதும் இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் அவர் கேரளாவில் இலங்கை அரசுக்கு எதிராக கருத்துத் தெரிவித்துள்ளார்.
இது ஏதோ ஒரு அரசியல் பின்னணியைக் கொண்டதாகவே நான் கருதுகிறேன். அவர் அடிக்கடி வெளிநாடுகளுக்குச் செல்வதால் தமக்கு வழங்கப்பட்டுள்ள பாதகாப்பை அவர் முறையாகப் பயன்படுத்துவதில்லை. தேவைக்கும் அதிகமாகவே அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையிலும் அவர் பொறுப்பற்ற விதத்தில் வெளிநாடுகளில் கருத்து தெரிவிப்பது மிகவும் கவலைக்குரியதெனவும் அமைச்சர் கூறினார்.