அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

சட்டவிரோத ஆட்கடத்தலைத் தடுக்கும் இலங்கையின் நடவடிக்கைக்கு கனடா ஆதரவு

‘ஓஸன் லேடி’, ‘சன் சீ’ ஆகிய கப்பல்கள் மூலம் சட்ட விரோதமாக கனடாவுக்கு கொண்டு செல்லப்பட்ட இலங்கையர் தொடர்பாக இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதற்கு உதவும் நோக்கில் கனேடிய அரசு நியமித்துள்ள விசேட பிரதிநிதி விரைவில் கொழும்புக்கு வரவுள்ளார். சட்ட விரோத ஆட்கடத்தலை தடுப்பதற்கு இலங்கையும், கனடாவும் இணைந்து செயற்படுவதென இரு நாடுகளினதும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்களும் இணக்கம் கண்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை (25) நியூயோர்க்கில் சந்தித்து பேசியபோதே இவர்கள் இணக்கம் கண்டிருக்கின்றனர். ஐக்கிய நாடுகள் அமைப்பின் 65 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்குபற்றுவதற்காக நியூயோர்க் சென்ற வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் அங்கு கனடா, ஸ்பெயின் மற்றும் கொரிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

கனேடிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் லோரன்ஸ் கனோன், ஸ்பானிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மிகெல் ஏஞ்சல் மொராட்டினஸ் கியூயோடே மற்றும் கொரிய குடியரசின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் சின் கன் யூ ஆகியோரை கடந்த சனிக்கிழமை (25) நியூயோர்க்கில் வைத்து அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் சந்தித்துப் பேசியுள்ளார்.

கனேடிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது பயங்கரவாதத்தை தோற்கடித்த பின்னர் மீந்துள்ள விடுதலை புலிகளின் செயற்பாடுகள் கனடா உள்ளிட்ட வேறு நாடுகளில் இடம் பெறுவதாக அமைச்சர் பீரிஸ் கனேடிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சரிடம் விபரித்தார்.

அதேவேளை கனடாவில் விடுதலைப் புலிகள் மற்றும் முன்னணி அமைப்புகளின் நிதி சேகரிப்பு நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக கனடா எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றி கனேடிய அமைச்சர் இலங்கை அமைச்சர் பீரிஸிடம் விளக்கினார். விடுதலைப் புலிகள் இயக்கம் கனடாவில் ஒரு தடை செய்யப்பட்ட இயக்கம் என்பதையும் கனேடிய அமைச்சர் இங்கு வலியுறுத்தினார்.

ஸ்பானிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மிகேன் ஏஞ்சல் மெரராடி கியூயோடேயுடனான பேச்சுவார்த்தையின் போது பயங்கரவாதத்தை வெற்றிகரமாக முறியடிப்பதற்கு இலங்கை மேற்கொண்ட நடவடிக்கைகளை ஸ்பானிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பாராட்டினார். உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு இலங்கையும் ஸ்பெயினும் பங்களிப்பு வழங்குவது பற்றியும் அங்கு கலந்துரையாடப்பட்டது.

கொரிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சருடனான சந்திப்பின் போது கொரிய குடியரசு பல்வேறு துறைகளில் இலங்கைக்கு வழங்கும் ஆதரவு தொடர்பாக அமைச்சர் பீரிஸ் கொரிய அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். இலங்கையின் மனித வளத்தை கொரியாவுக்கு பெற்றுக் கொள்வதை எதிர்காலத்தில் அதிகரித்துக் கொள்ள தீர்மானித்துள்ளதையிட்டும் அமைச்சர் பீரிஸ் பராட்டினார்.

405 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 20 வேலைத் திட்டங்களை கொரிய அரசாங்கம் தற்போது இலங்கையில் செயற்படுத்தி வருகிறது. அத்துடன் கொரிய வேலை வாய்ப்புகளில் இலங்கைக்காக வழங்கப்பட்ட ஒதுக்கீட்டில் 44 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

தந்தை தாக்கி 7 வயது மகள் பலி கம்பளையில் கோரச் சம்பவம்

கம்பளை வட்டதெனிய கோனதிகவத்தை ஓம்பரதீகவத்தைப் பகுதியில் நேற்றுக் காலை ஏழு வயதுடைய சிறுமி தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலையை குறித்த சிறுமியின் தந்தையே புரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆயுதமொன்றினால் தாக்கி இந்தக் கொலை புரியப்பட்டுள்ளது. உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தில் மற்றுமொரு சிறுமியும் சிறுவனும் உள்ளனர். எனினும், இவர்களின் தாய் வெளிநாடு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிறுமியின் தந்தை தினமும் சிறுமி மீது தாக்குதல் மேற்கொள்வாரென பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் கடுகன்னாவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டிலுள்ள 20 பிரதான வைத்தியசாலைகளில் வியாழன் தாதிமார் சுகவீன விடுமுறை போராட்டம்

பதினொரு கோரிக்கைகளை முன்வைத்து நாட்டிலுள்ள 20 பிரதான வைத்தியசாலைகளில் கடமைபுரியும் தாதியர்கள் நாளை வியாழக்கிழமை ஒரு நாள் சுகவீன லீவுப் போராட்டத்தை நடத்த விருக்கின்றனர். தமது பதினொரு கோரிக்கைகள் தொடர்பில் மூன்று வருடங்களாக அரசாங்கம் ஏமாற்றிவந்ததன் காரணமாக இந்த முடிவை எடுத்திருப்பதாக அகில இலங்கை தாதிமார் சங்கத் தலைவர் எஸ்.பி.மெதிவத்த தெரிவித்தார்.

தாதி தொழில் 12 வருட சேவைக்குப்பின்னர் முதலாம் தரத்துக்கு பதவி உயர்வை வழங்குதல், 6/2006 ஆவது சுற்று நிருபத்தின் மூலம் தாதிச்சேவை சம்பள முரண்பாட்டை நீக்குதல், தாதியர் சபையொன்றை அமைத்தல், தாதியர் சேவை யாப்பைத் திருத்துதல், விபத்துக்கொடுப்பனவை 10 ஆயிரம் ரூபாவாக அதிகரித்தல், தாதியர் பயிற்சிப்பாடசாலைகளில் காணப்படும் குறைபாடுகளை அகற்றல் உட்பட 11 கோரிக்கைகளை மூன்று வருடங்களுக்கு முன்னர் முன்வைத்தபோதும் இன்றுவரையில் அவற்றில் ஒன்றையேனும் நிறைவேற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். திங்கட்கிழமை கொழும்பு நிப்பொன் ஹோட்டலில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அகில இலங்கை தாதியர் சங்கத்தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த ஜூலை மாதம் 2 ஆம் திகதி நாடுமுழுவதும் தாதியர்கள் கறுப்புப்பட்டி அணிந்து தொழிற்சங்க நடவடிக்கையிலீடுபட்டபோதுஅரசாங்கம் ஆகஸ்ட் 15 ஆம் திகதிக்கு முன்னர் தீர்வு பெற்றுத்தருவதாக உறுதியளித்தது.ஆனால் அந்த உறுதிமொழியை அரசு காற்றில் பறக்கவிட்டபின்னர் மீண்டும் செப்டம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் தீர்வுத்திட்டம் சமர்ப்பிப்பதாக அறிவித்தது. 27 ஆம் திகதியாகியும் கூட அரசு மௌனம்சாதித்து வருகின்றது. அரசு கொடுத்த காலக்கெடுவான 30 ஆம் திகதியன்று நாம் ஒருநாள் சுகவீன லீவுப்போராட்டத்தில் இறங்க முடிவு செய்திருக்கின்றோம்.

நாட்டிலுள்ள வைத்தியசாலைகளுக்கு 56 ஆயிரம் தாதியர்கள் தேவைப்படுகின்றனர். ஆனால் இருப்பது 21 ஆயிரம் தாதியர்களே. இவர்களில் 70 சதவீதமான தாதியர்கள் வியாழக்கிழமை சுகவீன லீவுப்போராட்டத்தை நடத்துவர். இதன் காரணமாக மக்களுக்கு எற்படும் அசௌகரியங்களையிட்டு நாம் கவலையடைகின்றோம். எமது உரிமைகளை வென்றெடுக்க அரசுக்குக் கொடுத்த கால அவகாசம் போதுமென்றே நாம் நினைக்கின்றோம். மக்கள் பாதிக்கப்படுவார்களானால் அதற்கான பொறுப்பை அரசே ஏற்கவேண்டும். 30 ஆம் திகதி போராட்டத்துக்கு அரசு உரிய முறையில் செவிசாய்க்கத்தவறினால் அரசுக்கு குறுகிய கால காலக்கெடுவை விதித்து நாடுதழுவிய தொடர் போராட்டத்தை முன்னெடுக்கத் தயங்கப்போவதில்லை.

எமது போராட்டத்தை மழுங்கடிக்கச் செய்ய அரச சார்பு தொழிற்சங்கங்கள் காட்டிக்கொடுப்புக்குத் தயாரானால் அந்தச் சவாலைமுறியடிக்கவும் நாம் திட்டம் வகுத்திருக்கின்றோம். கடந்த காலத்தில் அரசசார்பு தாதியர் சங்கமும் அரச மருத்துவத்துறைத் தொழிற்சங்கமும் பல காட்டிக்கொடுப்புகளைச் செய்தனர்.
இதன் மூலம் அவர்கள் நாட்டு மக்களுக்கு துரோகமிழைத்துள்ளனர் எனவும் மெதிவத்த தெரிவித்தார்.

முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்பு

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிஉறுப்பினர்களுக்கென தொழில் வாய்ப்பு சந்தையொன்று நாளை புதன்கிழமையும் நாளை மறுதினமும் வவுனியா பம்பைமடு புனர்வாழ்வு நிலையத்தில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. புனர்வாழ்வளிப்பையும் தொழிற் பயிற்சியையும் நிறைவு செய்தவர்களுக்கே இந்த தொழில் வாய்ப்புச் சந்தை ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக

புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு பிரதி அமைச்சர் விஜிதமுனி சொய்ஸா தெரிவித்துள்ளார். ஆடைத்தொழிற்துறை மற்றும் நிர்மாணத்துறை போன்ற பல்வேறு துறைகளையும் சேர்ந்த 25 தனியார் துறை நிறுவனங்கள் இந்த தொழில் வாய்ப்பு சந்தையில் கலந்து கொள்ளவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

யுத்தத்தின் இறுதி காலகட்டத்தில் படையினரிடம் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட 11,800 விடுதலைப்புலி உறுப்பினர்களை அரசாங்கம் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கென தெரிவு செய்து உட்படுத்தியது. விசேட புனர்வாழ்வு நிலையங்களில் புனர்வாழ்வளிக்கப்பட்ட 4 ஆயிரம் முன்னாள் போராளிகளை அரசாங்கம் விடுதலை செய்துள்ளது. வாழ்வாதாரத்துக்கான வருமானத்தை பெற தயார்ப்படுத்திக் கொள்ள இவர்களுக்கு 12 புனர்வாழ்வு நிலையங்களில் தொழிற்பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

மேற்குறித்த தொழில்வாய்ப்பு சந்தைக்கு சமாந்தரமாக நடைபெறும் வைபவத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்ட மேலும் 418 முன்னாள் போராளிகள் விடுதலை செய்யப்படவிருப்பதாக பிரதி அமைச்சர் விஜிதமுனி சொய்ஸா தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாது புனர்வாழ்வளிக்கப்பட்ட மேலும் 2 ஆயிரம் முன்னாள் போராளிகளை அடுத்த மாதம் விடுதலை செய்ய அரசாங்கம் திட்டமிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருபது வருடங்களாக வேறு இடங்களில் இயங்கிய பலாலி உயர் பாதுகாப்பு வலய பாடசாலைகள் மீளக் கையளிப்பு

cc.jpgபலாலி அதி உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள வசாவிளான் மத்திய மகா வித்தியாலயம் இன்று செவ்வாய்க்கிழமை பாதுகாப்புப் படையினரால் கல்வி நடவடிக்கைகளுக்கென கையளிக்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார். சுமார் 20 வருடங்களுக்குப் பின்னர் மீளக் கையளிக்கப்படவுள்ள இந்த பாடசாலையை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையிலான உயர் மட்டக்குழுவினர் இன்று நேரில் சென்று பார்வையிடுகின்றனர்.

பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய வசாவிளான் மத்திய மகா வித்தியாலயம் உட்பட அந்தப் பிரதேசத்திலுள்ள மேலும் சில பாடசாலைகளை கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று வட மாகாண ஆளுநர் மேலும் தெரிவித்தார். யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க, வட மாகாண அபிவிருத்திக் கான ஜனாதிபதி விசேட செயலணியின் தலைவர் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் இந்த பாடசாலையைக் கையளிக்கிறார்.

அதன் பின்னர் அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி ஆகியோரிடம் இப்பாடசாலை உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளது. 1946 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பாடசாலை சுமார் 64 வருடம் பழைமை வாய்ந்தது என்று வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன் தெரிவித்தார்.

பலாலி அதிஉயர் பாதுகாப்பு வலயம் அமைக்கப்பட்டதை அடுத்து 1990 ஆம் ஆண்டு தொடக்கம் வசாவிளான் பாடசாலை யாழ். உரும்பிராய் பகுதியில் தற்காலிகமாக இயங்கி வருவதாகத் தெரிவித்த அவர், தற்பொழுது அங்கு 1352 மாணவர்கள் கல்வி கற்பதாகவும் குறிப்பிட்டார். இன்றைய நிகழ்வில் 1532 மாணவர்களும் பங்கு கொள்ளவுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இந்தப் பாடசாலை சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரவினால் இலவசக் கல்வித் திட்டத்தின் கீழ் மத்திய கல்லூரியாக தரமு யர்த்தப்பட்டதாக வட மாகாண கல்விப் பணிப்பாளர் ப. விக்னேஸ்வரன் தெரிவி த்தார். இந்தப் பாடசாலை புனரமைக்கப் படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, நாட்டிலுள்ள ஆயிரம் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் கல்வி அமைச்சின் வேலைத் திட்டத்தின் கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவித் திட்டத்தினால் இந்தப் பாடசாலை புனரமைப்பு, நிர்மாணத்திட்டத்தி ற்கென 60 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மாகாண கல்விப் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

அடுத்த ஆண்டு நடைமுறைப்படுத்தப் படவுள்ள இத் திட்டத்தின் மூலம் சேதமடைந்த கட்டடங்கள் புனரமைக்கப்படவு ள்ளதுடன், பாடசாலையின் கல்வி நடவடிக்கைகளுக்குத் தேவையான ஆய்வு கூடங்கள், நூலகம், போன்றவை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

திருத்தப் பணிகள் நிறைவுற்ற பின்னர் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்று தெரிவித்த அவர், இதன் மூலம் அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் பெரிதும் நன்மையடையவுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

சாம்பியன் லீக் : சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன்

chnnai_win.jpg சாம்பியன் லீக் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் கிண்ணத்தை வெற்றி கொண்டது. ஐ.பி.எல் இல் மட்டுமல்ல சாம்பியன் லீக்கிலும் சாம்பியனாக முடியும் என்பதை சென்னை அணி நிருபித்துள்ளது.

ஜொகனஸ் பேர்க் வோன்டரஸ் மைதானத்தில் நடைபெற்ற சாம்பியன் லீக் இறுதி போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் டேவி ஜேகப்ஸ் தலைமையிலான வொரியர்ஸ் அணியும் மோதின. இதில் சென்னை 08 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் கிண்ணத்தை சுவிகரித்தது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற வொரியர்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 07 விக்கெட்டுகளை இழந்து 128 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் ஆரம்ப வீரராக களமிறங்கிய ஜேகப்ஸ் 34 ஓட்டங்களை பெற ஏனைய வீரர்கள் 10 க்கும் குறைவான ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

சென்னை அணியின் பந்து வீச்சில் முரளிதரன் அதிரடியாக 4 ஓவர்களில் 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 129 எனும் இலகு வெற்றி இலக்கை அடைய களமிறங்கிய சென்னை அணி 19 ஓவர்களில் 02 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 132 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது. துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய மைக்கல் ஹசி மற்றும் முரளி விஜய் ஆகியோர் நிதானமான அதிரடி ஆட்டத்தால் சென்னை அணிக்கு வெற்றி தேடி கொடுத்தனர்.

முரளிவிஜய் 58 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க களத்தில் மைக்கல் ஹசி ஆட்டமிழக்காது 51 ஓட்டங்களையும், ரெய்னா 02 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க தொடர்ந்து களமிறங்கிய தோனி 17 ஓட்டங்களை பெற்றபோது சென்னை அணி இலகுவாக வெற்றி பெற்றது.  இந்நிலையில் இன்றைய போட்டியின் ஆட்டநாயகனாக முரளி விஜய் தெரிவு செய்யப்பட்டதோடு, தொடரின் ஆட்டநாயகனாக அஸ்வின் தெரிவு செய்யப்பட்டார்.

நாட்டின் அபிவிருத்திக்கு வெளிநாடுகளில் வாழும் இலங்கையரின் ஒத்துழைப்பு அவசியம் – ஜனாதிபதி

main.jpgநாட்டை அபிவிருத்தி செய்வ தற்கு வெளிநாடுகளில் வாழும் அனைத்து இலங்கையரதும் ஒத்துழைப்பு எதிர்காலத்திலும் அவசியம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமெரிக்காவின் ஹுஸ்டன் நகரில் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் 65 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்குபற்றிய பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவும் கடந்த சனிக்கிழமை (25) ஹுஸ்டன் நகரத்துக்கு விஜயம் மேற்கொண்டனர்.

ஹுஸ்டன் நகரில் வசிக்கும் இலங்கையர்கள் வெஸ்டின் ஹோக் ஹோட்டலில் ஜனாதி பதிக்கும் அவரது பாரியாருக்கும் விசேட வரவேற்புபசாரமொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

500க்கு மேற்பட்ட இலங்கையர்கள் கூடியிருந்த இந்த நிகழ்வில் ஹுஸ்டன் நகரின் காங்கிரஸ் பிரதிநிதி சீலா ஜெக்சன் மற்றும் ஹுஸ்டன் மேயர் அனிஸ் பார்க்கர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இந் நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், இலங்கை தற்போது இன, மத, பேதமின்றி அனைவருக்கும் சமாதானமாக வாழக் கூடிய நாடாக உள்ளது. 2005 இல் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு மக்கள் எனக்கு ஆணை வழங்கினர். அதனை நான் செவ்வனே நிறைவேற்றியுள்ளேன். அது தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட யுத்தமல்ல.

இதேவேளை 2010 இல் மக்கள் மீண்டும் எமக்கு நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு ஆணை வழங்கி யுள்ளனர். அதனை நிறைவேற்றுவதற்கு வெளி நாடுகளில் உள்ள அனைத்து இலங்கையர்களினதும் ஆதரவு எதிர்காலத் திலும் அவசியப்படுகின்றது என்றார்.

இந் நிகழ்வில் அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதி சீலா ஜெக்ஸன் லீ உரையாற்று கையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இலங்கை துரிதமாக அபிவிருத்தியடைந்து வரும் நிலையில் இரு நாடுகளினதும் நட்புறவு மேலும் வலுப்படுத்தப்படும் வகையில் ஜனாதிபதி யின் விஜயம் அமைந்துள்ளதாக குறிப்பிட்டார்.

முட்டை இன்று முதல் உத்தரவாத விலையில்

கூட்டுறவு மற்றும் உள்ளூர் வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் உத்தரவின் பேரில் புறக்கோட்டை சந்தையில் இன்று முதல் வெள்ளை முட்டை ஒன்றை 13 ரூபா 20 சதத்துக்கும், சிகப்பு நிற முட்டை ஒன்றை 13 ரூபா 70 சதத்துக்கும் பெற்றுக் கொள்ள முடியுமென கூட்டுறவு மற்றும் உள்ளூர் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், அண்மைக் காலத்தில் முட்டையின் விலை அதிகரித்து ஒரு முட்டை 15 முதல் 17 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டது.

இதனையடுத்து அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனம் (சதொச) மூலம் பண்ணைகளுக்கு சென்று முட்டைகளை கொள்வனவு செய்து பொருளாதார கேந்திரங்கள் மற்றும் லக் சதொச மூலம் அவற்றை நுகர்வோருக்கு விற்பனை செய்யுமாறு உத்தரவு பிறப்பித்தார். இதனால் முட்டை விலை குறைந்துள்ளது. இவ்வாறு சதொச மூலம் தினமொன்றுக்கு ஒரு லட்சம் முட்டைகள் பொருளாதார கேந்திரங்களிலும் லக் சதொச மூலமும் விற்பனை செய்யப்படுவதாகவும் இந்த நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

ரூ.12 இலட்சம் பெறுமதியான கருத்தடை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

dr.jpgஇந்தியா விலிருந்து திருட்டுத்தனமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 12 இலட்சம் ரூபா பெறுமதியான கருத்தடை மாத்திரைகளை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இலங்கையர் ஒருவரே இந்தியாவின் சென்னையிலிருந்து இம்மாத்திரைகளைக் கடத்தி வந்துள்ளதுடன் குழந்தைகளுக்கான உணவு சவர்க்காரம் மற்றும் சொக்கலேட்டுக்களுக்குள் மறைத்து வைத்தே இதனை கொண்டு வந்துள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று முன்தினம் இடம் பெற்றுள்ளது.

அன்றைய தினம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த யி. வி. 573 விமானத்தில் பயணித்துள்ள அவர் சுங்க அதிகாரிகளுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு இதனை வெளியே கொண்டு வருவதற்காக பெரும் பிரயத்தனம் மேற்கொண்ட போதும் அது பலிக்கவில்லை. சுங்க அதிகாரிகளானலால் சில்வா, நந்தன ஜயதிலக ஆகியோர் லாவகமாக குறிப்பிட்ட கருத்தடை மாத்திரைகளைக் கைப்பற்றியுள்ளனர். இலங்கையில் பதிவு செய்யப்படாத 3860 மாத்திரைகள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

சுங்கப் பணிப்பாளர் பராக்கிரம பஸ்நாயக்கவின் வழிகாட்டலில் பிரதிச் சுங்கப் பணிப்பாளர் ஹேமால் கஸ்தூரி ஆராய்ச்சி மேற்படி விசாரணைகளை மேற்கொண்டதுடன் சந்தேக நபருக்கு 50,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் புதிய முதலீட்டுக்கான வாய்ப்புகள்

main.jpgஅமெரிக்க வர்த்தகத் தலைவர்களிடம் ஜனாதிபதி ஐ.நா. பொதுச்சபை அமர்வில் பங்கேற்பதற்காக அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அமெரிக்காவின் முன்னணி வர்த்தகத் தலைவர்களை சந்தித்ததுடன் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்குரிய வாய்ப்புகள் மேலெழுந்திருப்பது குறித்து எடுத்துரைத்திருக்கிறார்.

வான்வெளி பாதுகாப்பு, விருந்தோம்புதல், உல்லாசப்பயணத்துறை உட்பட கைத்தொழில்துறையின் பல்வேறு பட்ட பிரிவுகளைச் சார்ந்த நிறைவேற்று அதிகாரிகள் நியூயோர்க் நகரின் ஹெல்னிம் லே ஹோட்டலில் இடம்பெற்ற மதியபோசன நிகழ்வில் கலந்து கொண்டனர். கொக்காகோலா கம்பனி, போயிங் கம்பனி, கூகிள், ஹில்ரன் ஹோட்டல்கள் ரிசோர்ட்ஸ், ஸ்ரள்யூட் ஹோட்டல்கள் ரிசோர்ட்ஸ் உட்பட சுமார் 100 வர்த்தகத்துறை தலைவர்கள், ஆய்வாளர்கள், வர்த்தக சம்மேளனப் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அமெரிக்க வர்த்தகத் தலைவர்களுடன் உரையாடிய ஜனாதிபதி ராஜபக்ஷ, முதலீட்டு வாய்ப்புத் தொடர்பாக இலங்கை மீது புதிதாக கவனத்தைச் செலுத்துமாறு இச்சந்திப்பின் போது கோரிக்கை விடுத்துள்ளார்.

பிபிஸர் போன்ற கம்பனிகள் இலங்கை போன்ற மேலெழுந்துவரும் சந்தைகளில் முதலீடு செய்ய விரும்புவதாக பிபிஸர் கம்பனியின் பிரதிநிதி தெரிவித்துள்ளார். இந்த வர்த்தகத்துறையினர் கலந்து கொள்ளும் மதியபோசன நிகழ்வானது கம்பனிகளின் நிறைவேற்று அதிகாரிகள், அரச அதிகாரிகள், இலங்கை வர்த்தகத் தலைவர்களைச் சந்திப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியிருப்பதாகவும் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கப் பாரிய வழியை ஏற்படுத்தித் கொடுத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.