அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

மட்டக்களப்பில் பன்றிக்காய்ச்சலால் பீடிக்கப்பட்ட முதல் நோயாளி மரணம்

swine-flu-2.jpgமட்டக் களப்பு ஆஸ்பத்திரியில் பன்றிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர் புதன்கிழமை மரணமடைந்துள்ளார். மட்டக்களப்பு, சத்துருக்கொண்டானைச் சேர்ந்த பாக்கியராசா (45 வயது) என்பவர் கடந்த 27 ஆம் திகதி சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இவருடைய இரத்தம் களுத்துறையிலுள்ள மருத்துவ ஆராய்ச்சி நிலையத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டிருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு இரத்த பரிசோதனை அறிக்கை மூலம் இவர் ஏ எச்1 என்1 என்ற வைரஸினால் பன்றிக்காய்ச்சல் பீடிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து இவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காது மரணமடைந்துள்ளார். இறந்தவரின் உடல் பாதுகாப்பான முறையில் தனிமைப்

படுத்தப்பட்டது.இந்த உடல் பன்றிக்காய்ச்சலினால் இறந்தவரின் உடல்அடக்கம் செய்யப்படும் விதிமுறைக்கு அமைய உறவினர்களிடம் கையளிக்காது நேற்று அடக்கம் செய்யப்பட்டது. இதேவேளை,மட்டக்களப்பில் பன்றிக்காய்ச்சலால் ஒரு நோயாளி இறந்த நிலையில் மேலும் இந்த நோயாளர்கள் இருக்கலாமென அஞ்சப்படுகிறது.இந்நோயிலிருந்து மக்களை பாதுகாக்க மக்கள் மத்தியில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும். இதற்காக கருத்தரங்குகள், துண்டுப்பிரசுரங்களை வெளியிடல், பதாகைகளை அமைத்து மக்களை தெளிவுபடுத்த வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் பெருமழை; வெள்ளம்; மக்கள் இடம்பெயர்வு – பரீட்சை நிலையங்களும் நீரில்

rain2.jpgஅம்பாறை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக பெய்து வரும் இடை விடாத அடைமழை காரணமாக கரையோரப் பிரதேச தாழ் நிலங்களில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்ந்து வருகின்றனர். இயல்பு நிலை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை காரணமாக 41800 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்களினால் அம்பாறை அரச அதிபர் காரியாலயத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவில் 6300 குடும்பங்களும், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் 5150 குடும்பங்களும், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் 4500 குடும்பங்களும், கல்முனை தமிழ் பிரதேச செயலாளர் பிரிவில் 4505 குடும்பங்களும, காரைதீவு பிரதேச செயலாளர் பிரிவில் 3200 குடும்பங்களும், அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 4500 குடும்பங்களும், பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவில் 6100 குடும்பங்களும், பதியதலாவ பிரதேச செயலாளர் பிரிவில் 2700 குடும்பங்களும் வெள்ள நிலைமை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் கல்முனை முஸ்லிம் பிரிவு பிரதேச செயலாளர் பிரிவில் 4750 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

தற்போதைய வெள்ள நிலைமை காரணமாக இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்கியிருக்கும் குடும்பங்களுக்கு சமைத்த உணவை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அம்பாறை மேலதிக அரச அதிபர் அசங்க அபயவர்த்தன தெரிவித்தார். தொடர்ந்து இம் மாவட்டத்தில் மழை பெய்து வருவதனால் இடம்பெயரும் குடும்பங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

மழை வெள்ளம் காரணமாக பாடசாலைகள் வெள்ள நீரினால் நிரம்பியுள்ளன. பிரபல பாடசாலைகளான கல்முனை ஸாகிறாக் கல்லூரி, அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி, பொத்துவில் மத்திய கல்லூரி, சம்மாந்துறை, வீரமுனை இராமகிருஷ்ண மகா வித்தியாலயம் உள்ளிட்ட பல பாடசாலைகள் வெள்ள நீரினால் சூழப்பட்டுள்ளன.

இதன் காரணமாக க. பொ. த. (சா/த) பரீட்சைக்கு மேற்படி பரீட்சை மண்டபங்களாக பாடசாலைகளை பயன்படுத்துவதில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக அதிபர்களும், மேற்பார்வையாளர்களும் கவலை தெரிவிக்கின்றனர்.

ஜனாதிபதித் தேர்தலின் பின் உடனடியாக அரசியல் தீர்வு டில்லியில பசில்

basil-rajapaksa.jpgதமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் முயற்சிகள் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றதும் உடனடியாக ஆரம்பிக்கப்படுமென இலங்கை அரசாங்கம் இந்தியாவிடம் வியாழக்கிழமை உறுதியளித்திருக்கிறது. அத்துடன் அரசியல் தீர்வுக்கு தேவையான அரசியலமைப்பு திருத்தங்களுக்குரிய சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படுமென டில்லிக்கு உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. இந்தியத் தலைநகர் புதுடில்லிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரடங்கிய உயர் மட்டக்குழுவே இந்திய அரசுக்கு இந்த உறுதி மொழிகளை வழங்கியிருப்பதாக பி.ரி.ஐ.செய்திச் சேவை நேற்று வியாழக்கிழமை மாலை தெரிவித்தது.

அதேசமயம், இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள சகல தமிழரும் ஜனவரி 10இல் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என்றும் இலங்கைத் தூதுக்குழு உறுதியளித்திருக்கிறது. இலங்கைத் தூதுக் குழுவினர் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். தமிழ் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பான விடயங்கள் இச்சந்திப்பின் போது ஆராயப்பட்டுள்ளன. பேச்சுவார்த்தை சிறப்பாகவும் சுமுகமாகவும் இடம்பெற்றதாக இச்சந்திப்பின் பின்னர் நிருபர்களிடம் பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

முகாம்களிலுள்ள தமிழர்கள் சகல ஜனநாயக உரிமைகளையும் கொண்டிருப்பதாகவும் அவர்கள் வாக்களிக்கவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு தொடர்பாக கேட்கப்பட்டபோது பதிலளித்த பசில் ராஜபக்ஷ, “நாம் மிகவும் உறுதியான புரிந்துணர்வுடன் உள்ளோம். ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் இந்த இலக்கு குறித்து கவனத்தில் எடுப்பதாக உறுதியளிக்கிறோம். அரசியல் தீர்வுக்குத் தேவையான சகல அரசியலமைப்பு ரீதியான திருத்தங்களும் மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார். இந்திய அரசின் நலன் சார்ந்த சகல விடயங்களிலும் இலங்கை இந்தியாவுடனேயே நிற்கும். இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான கரிசனைகளிலும் இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே இலங்கை கொண்டிருக்கும் என்று குறிப்பிட்ட பசில் ராஜபக்ஷ, அதேசமயம் இச்சந்திப்பின்போது, தனது பாதுகாப்பு தொடர்பான கவலைகள், அக்கறைகள் தொடர்பான விடயங்கள் எதனையும் இந்திய அரசாங்கம் எழுப்பவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவதில்லை என த.தே.கூ. முடிவு

tna.jpgஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதில்லை என அக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று முன்தினம் கொழும்பில் கூடி முடிவெடுத்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நேற்று முன்தினம் மீண்டும் கூடி ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஆராய்ந்த போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் வெளியிடப்பட்டன. தேர்தலை பகிஷ்கரித்தல், தனி வேட்பாளர் நிறுத்துதல், வாக்கு சீட்டை செல்லுபடியற்றதாக்குதல், யாராவது ஒரு வேட்பாளரை ஆதரித்தல், தீர்மானம் எடுக்கும் முடிவை மக்களிடமே விட்டு விடுவது உட்பட பல்வேறு கருத்துக்கள் முன் வைக்கப்பட்ட நிலையில் தேர்தல் பகிஷகரிப்பு, தனி வேட்பாளர் நிறுத்துதல்,வாக்கைச் செல்லுபடியற்றதாக்குதல் ஆகிய யோசனைகள் இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி கைவிடப்பட்டுள்ளன எனத் தெரிய வருகின்றது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்ட பின்பு சம்பந்தப்பட்ட வேட்பாளர்களுடன் பேச்சுவார்ததைகளை நடத்துவது என்றும் அதன் பின்னர் இத்தேர்தல் தொடர்பாக மீண்டும் கூடி ஆராய்ந்து முடிவெடுப்பது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று முன்தினம் முடிவெடுத்துள்ளனர்.

மனிக்பாம், புதுக்குடியிருப்புப் பகுதிகளுக்கு ஜனாதிபதி நேற்று திடீர் விஜயம்

manik.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முல்லைத்தீவு புதுக்குடியிருப்புக்கும் வவுனியா மனிக்பாம் நிவாரணக் கிராமங்களுக்கும் திடீர் விஜயம் மேற்கொண்டார். இந்தப் பிரதேசங்களுக்கு விஜயம் செய்த அவர் நிலைமைகளைப் பார்வையிட்டார்.

மனிக்பாம் நிவாரணக் கிராமங்களுக்குச் சென்ற ஜனாதிபதி, அங்கு மக்களோடு தமிழில் உரையாடி குறைநிறைகளைக் கேட்டறிந்து கொண்டார். இங்கு கருத்துத் தெரிவித்த அவர், “ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன்னர் நீங்கள் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்பட்டு விடுவீர்கள்” என்று கூறினார்.

புதுக்குடியிருப்பில் மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட படையி னரைச் சந்தித்த ஜனாதிபதி, யுத்தம் முடிவுற்றதை நினைவு கூரும் வகை யில் நினைவுத் தூபியொன்றையும் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். இத் திடீர் விஜயம் நேற்றுக் காலை இடம்பெற்றதுடன் ஜனாதிபதியுடன் பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, முப்படைத்தளபதிகள் மற்றும் பாதுகாப்புத்துறையின் முக்கிய உயரதிகாரிகளும் உடன் சென்றிருந்தனர்.

புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட படையினரைச் சந்தித்து அவர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி, மீட்கப்பட்டுள்ள தாய் நாட்டைக் கட்டியெழுப்பும் செயற் பாடுகளில் படையினரின் முழுமையான ஒத்துழைப்புத் தமக்குக் கிட்டுமென நம்பிக்கை தெரிவித்தார்.

ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது:- நாட்டை ஐக்கியப்படுத்தும் நடவடிக்கைகளில் முதற்கட்டமாக படையினரினதும் நாட்டு மக்களினதும் மன உறுதியைக் கட்டியெழுப்புவதே எமது பணியாகியது.

இதற்கிணங்க படையினர் சுதந்திர மனப்பாங்குடனும் துணிவுடனும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அரசாங்கத்தால் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க முடிந்துள்ளது.

படையினரின் பிள்ளைகளுக்காக பாடசாலைகளை நிர்மாணிப்பது படையினருக்கான வீடமைப்புத் திட்டம் உட்பட படையினரின் எதிர்காலம், அவர்களது பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பாக சிந்தித்து முழு நாட்டையும் வெற்றியின் பாதையில் இட்டுச் செல்லும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டது என்றார்.

பயங்கரவாத நடவடிக்கைகளினால் இடம்பெயர்ந்து நிவாரண கிராமங்களில் தங்கியுள்ள அனைத்து மக்களும் எதிர்வரும் ஜனவரி 31ஆம் திகதிக்குள் அவர்களது சொந்த இடங்களில் வசிக்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்படுவதுடன் அவ்வாறு மீள் குடியமர்த்தப்படுவோருக்கு வழங்கப்படும் 25 ஆயிரம் ரூபா நிதியுதவி 50 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

மனிக்பாமிற்கு விஜயம் செய்த அவர் தமிழில் உரையாற்றினார். ஜனாதிபதி அங்கு பேசியபோது மேலும் கூறியதாவது :-

இந்த நாட்டில் வாழும் அனைவரையும் பாதுகாப்பது எனது பொறுப்பு. அது எனது கடமையுமாகும். அதை நான் நிச்சயமாக நிறைவேற்றுவேன். இந்த நாட்டில் வசிக்கும் அனைவருக்கும் பயமின்றி, சந்தேகமின்றி சுதந்திரமாக வசிக்கமுடியும். அனைவரும் சம உரிமையுடன் வாழ வேண்டும். துப்பாக்கிக் கலாசாரம் மீண்டும் தலை தூக்காதவாறு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பல வருடங்களாக மேற் கொள்ளப்படாதிருந்த அபிவிருத்தி செயற் பாடுகள் வடக்கு வசந்தத்தின் மூலம் இப் போது நடைமுறைப்படுத்தப்படுகின்றன. உங்கள் அனைவருக்கும் வீட்டு வசதி உட்பட அனைத்து வசதிகளும் கிடைக்கும். உங்கள் பிள்ளைகளே உங்கள் சொத்து. அவர்கள் நன்றாக படிக்க வேண்டும். எதிர் காலத்தில் இந்த நாட்டில் அவர்கள் முக்கிய பதவிகளை வகிக்க வேண்டும் என்றார்.

நிவாரண கிராமத்தில் உள்ள மாண வர்களுக்காக 23 ஆயிரம் தொகுதி பாடசாலை உபகரணங்களை ஜனாதிபதி பகிர்ந்தளித்ததுடன் நிவாரண கிராமத்தில் இருந்தவர்களுடன் சுமுகமாக உரையாடினார்.

க. பொ. த. (சா. தர) பரீட்சார்த்திகளுக்கு 3 இலட்சம் அடையாள அட்டைகள் விநியோகம்

schools_stu.jpgஇவ்வருடம் நடைபெறவுள்ள க. பொ. த. (சா.தர) பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகளில் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகள் விநியோக்கப்பட்டு விட்டதாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஏ. பி. தர்மதாஸ தெரிவித்துள்ளார். இதன்படி நேற்று முன்தினம் (08) வரை 3,10,405 தேசிய அடையாள அட்டைகள் பரீட்சார்த்திகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி தேர்தலுக்கு மேலும் இருவர் கட்டுப்பணம்

vote.jpgஜனாதி பதித் தேர்தலில் போட்டியிடு வதற்காக நேற்றும் ஒரு அரசியல் கட்சியும், சுயேச்சை வேட்பாளரும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

இதன்படி ஜனவரி மாதம் 26 ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவென ஒன்பது அரசியல் கட்சிகளும், ஒரு சுயேச்சை வேட்பாளரும் நேற்று வரையும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

க. பொ. த (சா/த) பரீட்சை நாளை: ஏ எச்1என்1 பீடிக்கப்பட்ட மாணவர் பரீட்சைக்கு தோற்ற தடை

influenza-a.jpgக.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் நாளை 11 ஆம் திகதி ஆரம்ப மாகும்போது ஏ எச்1என்1 வைரஸ் பீடிக்கப்பட்ட பரீட்சார்த்திகள் இருப் பின் அவர்களுக்கு பரீட்சைக்குத் தோற்ற இடமளிக்கப்படமாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் அனுர எதிரிசிங்க தெரிவித்தார்.

எனினும், இன்றுவரை அவ்வாறு எந்தவொரு மாணவரும் ஏ. எச்1என்1 வைரஸ் பாதிக்கப்பட்டிருப்பதாக தனக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

மேற்படி வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களால் பரீட்சைக்குத் தோற்ற முடியாமல் போகும் அத்து டன் இதனால் ஏனைய பரீட்சார்த்திக்கும் பரவ வாய்ப்புண்டு என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இவ்வைரஸால் பீடிக்கப்பட்டுள்ள பரீட்சார்த்திகள் பற்றிய எவ்வித அறிவித்தல்களும் பரீட்சைத் திணைக்களத்துக்கோ வலய கல்விப் பணிப்பாளருக்கோ அறியக்கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

பிரபாகரனின் ஆயுதம் சாதிக்க முடியாததை டொலர் சாதிப்பதற்கு இடமளியோம் தேசிய இணக்கச் சபை தின நிகழ்வில் ஜனாதிபதி

mahinda0.jpgதேசிய போராட்டம் எதிர்கொள்ளும் இறுதி சவாலை சந்திக்கின்ற தருணமிது. பிரபாகரன் ஆயுதம் மூலம் செய்ய முடியாமற் போனதை டொலர்களினால் சாதிக்க முற்படும் சக்திகளிடமிருந்து நாட்டைப் பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பாகுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு, தெற்கு என்ற பேதமின்றி இலங்கை மாதாவின் பிள்ளைகளாக அச்சமின்றி சகலரும் வாழக்கூடிய நாட்டைக் கட்டியெழுப்பும் பணியில் இணைந்து செயற்படுவது அவசியம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இனங்களுக்கிடையில் பேதங்களை உருவாக்க சில சக்திகள் முயல்கின்றன. இதனை நாட்டு மக்கள் தெளிவாக புரிந்துகொள்ள முடியும். நம்மை விட நம் தாய் நாட்டை நேசிப்பவர்களாக சகலரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

தேசிய இணக்கச் சபை தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று அலரி மாளிகையில் அனுஷ்டிக்கப்பட்டது. நாடளாவிய ரீதியிலிருந்து இணக்கச் சபைகளின் உறுப்பினர்கள் 4,000 க்கும் மேற்பட்டோர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அமைச்சர்களான மிலிந்த மொரகொட, சரத் அமுனுகம, பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், பிரதியமைச்சர் வீ. புத்திரசிகாமணி உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந் நிகழ்வில் ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றுகையில், இலங்கையின் வரலாற்றை நோக்குகையில் அரசர் கால தீர்ப்புகள் நம்மை வியப்படையச் செய்கின்றன.

ஒருவர் தற்கொலை செய்து கொண்டால், அந்த ஊருக்கே தண்டனை வழங்கிய காலம் அது. தவறாக ஒருவர் உருவாக்கப்பட்டதால் அவ்வூருக்கே தண்டனை வழங்கப்பட்டது. இதனால் அக் காலத்தில் மிகக் குறைந்த குற்றங்களே இடம் பெற்றன. நாம் வழங்கும் தீர்ப்புக்கு இணக்கமா? என இரு தரப்பினரையும் கேட்கும் நீதிமன்ற யுகம் மாற்றமடைந்து, நீ குற்றவாளியா – அல்லது சுத்தவாளியா எனக் கேட்கும் யுகம் உருவாகியுள்ளது.

சாதாரண நீதிமன்றத்தின் தீர்ப்பிலிருந்து உச்ச நீதிமன்றம் வரை செல்லக்கூடிய வாய்ப்பு இன்றுள்ளது. நீதிமன்றத் தீர்ப்பொன்றிற்கிணங்க ஊடகவியலாளர் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டபோது, முழு உலகமும் அழுத்தங்களைப் பிரயோகித்த சம்பவமொன்றையும் கூற முடியும். இந்த வகையில் நீதிமன்றத் தீர்ப்புக்கே அழுத்தம் கொடுக்கும் யுகமிது.

சாதாரண குடும்பப் பிரச்சினைகள் போன்றவை இனி நீதிமன்றம் வரை செல்ல வேண்டிய அவசியமில்லை என்பதே எமது கருத்து. எதிர்காலத்தில் வடக்கு, கிழக்கின் சகல பகுதிகளுக்கும் இணக்கச் சபைகளை விரிவாக்குவதே எமது நோக்கம்.

புலிகளுக்குக் கப்பம், வரிகளைச் செலுத்திய காலமும், பாதாள உலக அச்சுறுத்தல் மற்றும் போதை காரணமாக விளைந்த பாதிப்புகளையும் எம்மால் முடிவுக்குக் கொண்டு வர முடிந்துள்ளது.  சட்டத்தை மதிக்கின்ற சமுதாயமொன்றைக் கட்டியெழுப்ப தேவையான சகல நடவடிக்கைகளையும் நாம் மேற்கொள்வோம். மக்கள் நலன் கருதிய தீர்மானங்களை எச்சந்தர்ப்பத்திலும் நாம் மாற்றத் தயாரில்லை.

இது தேர்தலுக்காகவோ அல்லது எமது அதிகாரத்திற்காகவோ எடுக்கும் தீர்மானமல்ல நாட்டு மக்களின் நலனைக் கொண்டது.  கல அரசியல் கட்சிகளும் எமது அமைச்சரவையில் உள்ளன. நாம் ஒருபோதும் அரசியல் பலிவாங்கலில் ஈடுபடுபவர்களல்லர். எந்த செயற்பாடுகளிலும் நகரம் – கிராமம் என்ற பேதத்துடன் செயற்படுபவர்களில்லை. நாம் அனைவரும் ஒரே நாட்டில் நிம்மதியாக வாழ முடியும் என்ற நம்பிக்கை எமக்கு வர வேண்டும்.

இதற்கு சமூகத்திலுள்ள அரசியல் வைராக்கியத்தை இல்லாதொழிக்க வேண்டும். தாய் நாட்டைப் பாதுகாத்து ஐக்கியப்படுத்துவதில் இணைந்து செயற்பட்டது போல் அச்சம் – சந்தேகமற்ற நாட்டைக் கட்டியெழுப்புவதிலும் நாம் கைகோர்த்துச் செயற்படுவோமென ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

புலிகள் இயக்க சொத்துக்கள் நாட்டின் அபிவிருத்திக்கு பயன்படுத்தப்படும் – பிரதமர்

ratna.jpgபுலிகள் இயக்கத்தின் பெயரில் வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களைப் பொறுப்பேற்று அவற்றை நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்குப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகப் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க நேற்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

புலிகளின் சொத்துகள் தொடர்பில் தற்போது புலனாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருதாகவும், விசாரணைகள் நிறைவடைந் ததும், தகவல்கள் பாராளுமன்றத்தில் வெளியிடப்படுமென்றும் பிரதமர் கூறினார்.

2009 மே மாதம் 18 ஆம் திகதி புலிகள் இயக்கம் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், அந்த இயக்கத்தின் தங்கம் உள்ளிட்ட பெருமளவு சொத்துகள் கைப்பற்றப்பட்ட தாகவும் அவை தொடர்பான தற்போதைய நிலவரம் யாதென்றும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா ஜோசப் மைக்கல் பெரேரா சபையில் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க, மே மாதம் 18 ஆம் திகதி புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டதன் பின்னர் பாதுகாப்புப் படையினர் சொத்துக்களை மீட்டுள்ளனர். தங்கம் உள்ளிட்ட சொத்துகள் குறித்து புலன் விசாரணைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள கே. பீ. மூலம் புலிகள் இயக்கத்தின வெளிநாட்டுச் சொத்துகள் தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன. அவர்களுக்குச் சொந்தமான பல கப்பல்களில் சிலவற்றைக் கடற்படையினர் அழித்துள்ளனர். எஞ்சிவை தொடர்பாக விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன. இது தொடர்பான தகவல்கள் பின்னர் வெளியிப்படும்” என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.